அடிதடி, இரத்த வெள்ளம், அய்யோ! அம்மா! என்ற அலறல் சத்தம், கூச்சல் குழப்பம்!
இவையெல்லாம் நடைபெற்ற இடம் சிறைச்சாலையென்றால் பலருக்கும் ஆச்சரியமாகக் கூட இருக்கும்.
சிறைச்சாலைதானே உயிருக்கு உத்தரவாதம் தரும் அரசுப் பாதுகாப்பு இல்லம்? அங்கே எப்படி இப்படியெல்லாம் நடக்கும் என்று கேட்பது இயல்புதான்.
ஆனாலும் நடந்தது சிறைச்சாலையிலே - அரசு அதிகாரிகளே அடியாள்களாக மாறி கைதிகள்மீது கொலைவெறித் தாக்குதலைத் தொடுத்தனர்.
எங்கே? சென்னை மத்திய சிறைச்சாலையில்?
என்று?
இதே நாள் நள்ளிரவில்
- 1976-இல்!
மிசா என்ற ஒரு இருண்டகாலம்!
ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளுக்கு இடமில்லாத ஓர் அராஜகச் சூழல்!
திராவிடர் கழகத் தோழர்கள் உட்பட இந்தியாவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்,
தலைவர்கள் எல்லாம் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு காராக்கிரகத்தில் தள்ளப்பட்டனர்.
திராவிடர் கழகம் என்ன தவறு செய்தது? கொள்ளையடித்ததா - கொலை செய்ததா
- எந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டது?
தி.மு.க.வை ஆதரித்தது என்ற ஒரே குற்றம்தான்!
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் உள்பட கருஞ்சட்டைத் தோழர்கள் எந்தவித நியாயமுமின்றி சிறைக்கொட்டடியில் தள்ளப்பட்டனர்.
இதே நாளில் நள்ளிரவில் வித்யாசாகர் என்கிற ஒரு சிறைக் கண்காணிப்பாளர் தலைமையில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் உட்பட பலர் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
அந்த உபாதையை இன்றுவரை அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றனர்.
மிசா காலத்தில் நடைபெற்ற சிறைக் கொடுமைப்பற்றி நீதிபதி இஸ்மாயில் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி அறிக்கையும் கொடுத்தார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில் சிறைச் சாலைகளில் சீர்திருத்தம் நடந்தனவா?
நடந்ததாகத் தெரியவில்லை.
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
02.02.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக