செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

நம் தாழ்மைக்குக் காரணம் என்ன?


தமிழர் (திராவிடர்) நிலை தாழ்ந்திருக்கிறது, சமுதாயத்தில் கீழான ஜாதி, கல்வியில் 100-க்கு 80 தற்குறி.

செல்வத்தில் 100-க்கு 90 கூலி ஜீவனம்; தொழிலில் 100-க்கு 75 சரீரப்பாடுபட்டு உழைக்கும் தொழில். (ஈனத் தொழில்) என்பது, சர்க்கார் உத்தியோகத்தில் காவலாளி (பியூன், ஜவான், கிளார்க் வேலை).

ஒற்றுமையில் 108 ஜாதியும், கட்டுப்பாட்டில் அவனவன் சுயநலமும், ஒருவனை ஒருவன் ஏய்ப்பதும், ஒழிக்கச் சமயம் பார்ப்பதும், சமயத்தில் (மதத்தில்) எதிரிகளுக்கு அடிமையாய் இருந்து உழைத்துப் போடுவது, அரசியலில் வஞ்சக அயோக்கியருக்கு வால்பிடித்துக் கைதூக்குவது, மானத்தில் ஈனமும், மதிப்பில் காரி உமிழத் தக்கதுமாகவும் இருக்கின்றது. இதற்குக் காரணம் என்ன? என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும். அதோடு, தமிழ்நாடு பூராவிலும் தமிழனால் மதிக்கக் கூடிய - போற்றக் கூடிய ஒரு தமிழன் கூடக் கிடையாது. அதுபோலவே ஒரு தமிழனால் குறை கூறப்படாத மற்றொரு தமிழனும் கிடையாது.

ஏதாவது ஒரு உத்தியோகத்துக்கோ, பதவிக்கோ, உயர் நிலைக்கோ வந்த உடன் தனக்கு மேலிருப்பவனையும், தனக்கு உதவி செய்தவனையும், கீழே தள்ள முயற்சிக்காதவனும், சிபார்சு (பரிந்துரை) செய்தவனைத் தூற்றித் திரியாதவனும் தமிழரில் பெரிதும் கிடையாது.

தன்னை முன்னுக்குக் கொண்டு வந்தவனுக்குக் குழி தோண்டாத தமிழன் அரிதிலுமரிது.

நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்றுகூடச் சொல்லப்படுவதற்கும் அவை  அநேகமாய் உண்மையாய் இருப்பதற்கும் காரணம் என்ன? என்பது இரண்டாவது கேள்வியாகும்.

இந்த நிலையும் குணங்களும் பார்ப்பனர்களுக்குள்ளும், முஸ்லிம்களுக்குள்ளும், ஏன் சட்டைக்காரர்களுக்குள்ளும் கூடச் சாதாரமணாய்க் காண்பதற்கு முடிவதில்லை என்று சொல்லப் படுகிறதே. இதற்குக் காரணம் என்ன? என்பது மூன்றாவது கேள்வியாகும்.

இந்த மூன்று கேள்விகளிலும் உள்ள விஷயங்கள் சிறிது அதிகப்படுத்திக் கூறியிருப்பதாகச் சிலர் கருதலாம். அது உண்மை யாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால், பெரும் பாகம் உண்மை என்பதைப் பெரும்பான்மையோர் ஒப்புக் கொள்ளுவார்கள்.

ஆதலால், இவைகளுக்குக் காரணம் என்ன என்று கவனிக்க வேண்டாமா?

சென்னை மாகாண (திராவிட நாட்டு) ஜனசங்கையில் 100-க்கு 3 பேர்களே பார்ப்பனர்கள்; 100-க்கு எட்டு அல்லது ஒன்பது பேர்களே முஸ்லிம்கள்; 1,000-க்கு ஒருவராய் இருந்தாலும் இருக்கலாம் சட்டைக்காரர்கள் (அதாவது திராவிட ஆரியர்); இப்படி மிகச் சிறுதொகையினராக இருக்கும் இவர்கள் தமிழர்களுக்கு ஏற்பட்ட மேற்கண்ட இழிவுகள் இல்லாமல் மேன்மையாய், கட்டுப்பாடாய், சுதந்திரமாய் மதிக்கத்தக்க வண்ணம், அந்நியன் கண்டு பயப்படும் படியும் வாழ்வதற்குக் காரணம் என்ன? என்று சிந்தித்தால் தமிழர் இழிவுக்குக் காரணங்கள் சுலபமாய்க் கிடைத்துவிடும்.

காரணம்

1. தமிழனுக்கு அஸ்திவாரமில்லை. அதாவது அவன் யார்? அவனுக்குச் சொந்தம் எது? அவனுடைய பூர்வோத்திர மென்ன? லட்சியம் என்ன? என்பனவாகிய நாலும் தெரியாதவனாகவும் ஆதாரம் இல்லாதவனாகவும் இருக்கிறான். ஆகவே, அஸ்திவார மில்லாத கட்டடம் வெடிப்புக் காணுவதும், அதிருவதும், அதில் (மானமோ, மேன்மையோ) குடி இருக்கப் பயப்படுவதும் இயற்கைதானே? அதுபோலவே தனக்குச் சொந்தம், உரிமை இன்னது என்று தெரியாதவன் தொட்டதற்கெல்லாம் அந்நியனைப் பல்லைக்காட்டிக் கெஞ்சுவதும் ஒண்டுவதும், ஒருவனுக்கொருவன் போட்டி போட்டுப் பின் தள்ளிவிட்டுப் போய்த் தன் காரியம் பார்த்துக் கொள்ளுவதும் இயற்கைதானே?

2. தமிழனுக்கு ஒரு  ஸ்தாபனம் கிடையாது. வேறு எதனுடனாவது, சேர்ந்துதான் தன்னைத் தமிழன் என்று காட்டிக்கொள்ள வேண்டியவனாய் இருக்கிறான். அப்படி இல்லாவிட்டால் பார்ப்பனரல்லாதான், முஸ்லிமல்லாதான், கிறிஸ்தவனல்லாதான், இந்து அல்லாதான் என்பன போன்ற அல்லாதான் என்கின்ற பெயரால்தான் தன்னைக் காட்டிக் கொள்ள முடிகிறது.

3. தமிழன் என்றால் இதில் பார்ப்பான், முஸ்லிம், கிறிஸ்தவன் முதலிய பலர் சேருகிறார்கள். யாரையாவது நாம் சேர்ப்பதில்லை என்றால் அவர்கள், நானும் தமிழன், தமிழ்நாட்டில் பிறந்தவன், தமிழ் பேசுகிறவன் என்கிறார்கள். அது மாத்திரமா? தமிழனே, தமிழ்ப் பண்டிதனே தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் பேசுகிறவன் எவனும் அவன் நம்மை எவ்வளவு இழிவாயும், மானமற்ற தன்மை உண்டாகும்படியும் நடத்தினாலும் சரி, அவனெல்லாம் தமிழனே என்று வக்காலத்துப் பேசுகிறான்; ஆதாரம் காட்டுகிறான்.

4. தமிழன் நடந்து கொள்வதற்கு என்று தனிமுறை, வழி, துறை கிடையாது. தமிழனுக்கு என்று தனி நடை, உடை, பாவனை கிடையாது.

5. தமிழனுக்கு என்று, தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியமும் கிடையாது.

6. தமிழனைத் தனித்த முறையில் நடத்தத் தலைவன் கிடையாது.

7. தமிழருள் முக்கியமானவர்கள் என்று கருதும்படியாக நடந்து கொள்கிறவர்களுக்கும், பிறர் தங்களை அப்படிக் கருதவேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கும், தமிழர் சமுதாயத்தையும், இனத்தையும், பொறுத்து பொறுப்பும், கவலையும் கிடையவே கிடையாது என்பதோடு அவர்களுக்குத் தங்களை அந்நியன் எவ்வளவு இழிவும், தாழ்மைப்படுத்தினாலும் அதைப் பற்றிய கவலையும் கிடையாது; அதைப் பற்றிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை.

8. தமிழர்களுக்குத் தன்மானம், மான உணர்ச்சி ஏற்பட வழி இல்லை. ஏனெனில், தமிழன் எதைக் கொண்டு தனக்கு மான ஈனம் ஏற்பட்டதாக வருந்த முடியும்? இப்போது பெரும்பாலும் ஏதோ தனக்குச் சில கிளர்ச்சியின் பயனாய் புது யோக்கியதை அதுவும் தனது தகுதிக்கும், தேவைக்கும் மேல் இருப்பதாகக் கருதி இறுமாந்து இருக்கிறான். எப்பொழுது தமிழனுக்கு மானம் இருந்து இப்போது போய்விட்டதே என்று வருத்தப்படுவதற்கு! என்று எந்தத் தமிழன் யோசித்தாலும் அவனுக்கு என்ன ஆதாரம் கிடைக்கக் கூடும்?

அநேக அரசர்கள் அன்றும் இன்றும் கூடத் தாங்கள் மேல் ஜாதிக்குப் பிறந்ததாகப் பாத்தியம் கொண்டாடுகிறார்கள். அதுபோலவே, அநேக விபசாரி மகனும், தான் மேல் ஜாதிக்குப் பிறந்ததாகப் பாத்தியம் கொண்டாடுகிறான்

திராவிடத்தில் சில நாடுகளில் பொதுமக்களில் பலர் சமீபகாலம் வரை, இன்றும் தாங்கள் மேல் ஜாதிக்குப் பிறந்ததாகப் பெருமை பேசிக் கொள் கிறார்கள். 30, 40 வருஷங்களுக்கு முன்பு சில பெருங்குடும்பங்களில், நல்ல பிள்ளைகள் பிறக்க மேல் ஜாதியார்களை வேலைக்கு வைத்துக் கொள்வது என்கின்ற சம்பிரதாயமிருந்ததாக இன்றையக் கிழவன்மார்கள் பேசிக் கொள்வதுண்டு.

அண்ணன் தம்பி இரண்டு, மூன்று பேர் ஒரே பெண்ணைக் கட்டிக் கொண்டு பாண்டவர்கள் போல் வாழ்வதும், அக்காள் தங்கை 2, 3 பேர் ஒரு கணவனைக் கட்டிக் கொண்டு ஆரியக் கடவுள்கள் போல் வாழ்வதும் முறையே கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் இன்றும் காணலாம். அண்ணன் இறந்து போனால், அவன் மனைவி உடனே தம்பிக்கு வாரிசு மனைவி ஆகிவிடுகிறாள். இதையும் இன்றும் சமுதாயப் பழக்க முறையில் பார்க்கலாம்.

விபசாரத்திற்குப் பயன்படுவதற்கு என்று ஒரு ஜாதியும், அதற்கென்று சமுதாயத்திலும், சட்டத்திலும், விதிமுறைகளும் தாய், தகப்பன், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைமார்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அத்தொழிலில் நடத்த முதலாளி களாகவும், குமாஸ்தாவகவும், ஏவலாளிகளாகவும் இருப்பதும் இன்றும் திராவிடத்தில் பல இடங்களில் பார்க்கலாம்.

இவை தான் போகட்டுமென்றால் தமிழர்கள் ஒவ்வொரு வரும் கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களைப் பார்ப்பானுக்குக் கீழான ஜாதி என்றே கருதிக் கொண்டும்  - நடத்தப்படச் சம்மதித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இவைகளையெல்லாம் ஏன் காட்டுகிறோம் என்றால், தமிழர் களின் பிரமுகர்களுக்குத் தமிழர் சமுதாய இனத்தைப் பற்றி - இழிவைப் பற்றிக் கவலை இருந்ததில்லை என்பதையும், இருக்கிற தில்லை என்பதையும் அவர்களில் பெரியவர்கள் என்பவர்களையும், பண்டிதர்கள் என்பவர்களையும் பார்த்தால், இனியும் இருக்கப் போவதில்லையென்பதையும் காட்டுவதற்கு ஆகவேயாகும்.

தமிழர்களில் உள்ள செல்வவான்களோ என்றால் தாங்கள் எப்படியெல்லாமோ தேடிய பொருளைத் தமிழர் சமுதாயத்துக்கு என்று ஒரு காசு கூடச் செலவிடுவதில்லை. அதற்கு மாறாகத் தங்கள் சமுதாய இழிவுக்கும், வீழ்ச்சிக்கும் காரணஸ்தர்களாகிய தங்களது எதிரிகளுக்குப் பயன்படும்படியே செலவழிக்கிறார்கள். தமிழர்களில் படித்தவர்கள், பண்டிதர்கள் என்பவர்கள் சங்கதியோ சொல்லவே வேண்டியதில்லை. ஒரு விபசாரி மகன், நான் பார்ப்பானுக்குப் பிறந்தவன் தெரியுமா? என்று தன்னைப் பற்றிப் பெருமைப்படுவது போல் தமிழ் படித்தவர்களும், பண்டிதர்களும் இன்றுள்ள பார்ப்பனர்கள் பிறவியினால் பார்ப்பனர்களாவார்கள்; நாங்களோ கருமத்தினால் பார்ப்பனர்கள் (அந்தணர்கள்) ஆவோம் என்று இருவருக்கும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் நடக் கிறார்கள். மேல் ஜாதியார் நம்மை இழிவுபடுத்துவதைவிட இவர்கள் நம்மை அதிகமாய் நிரந்தரமாய் இழிவுபடுத்துகிறார்கள். இனி, நம் உத்தியோகஸ்தர்களோ உத்தியோகம் கிடைக்கும் வரை நான் தமிழன், தமிழன் என்று பாத்தியம் கொண்டாடி உத்தியோகத்துக்கு அலைந்து திரிந்து அது கிடைத்தவுடன் பியூன்களின் எஜமான் சப்தமும் பங்காவின் குளிர்ந்த காற்றும் பொதுஜனங்களின் தலைகுனிவும் கிடைக்கிற நிலை வந்தவுடன், தீஸ் டர்ட்டி இடியட் நான்பிராமின்ஸ் ஹாவ் நோ பிரெயின்; அண்ட் தே டோன் னோ எடிகேட்; தே ஆர் கொயட் அன்ஃபிட் ஃபார் எனிசிம்பத்தி அதாவது, இந்த அசிங்கம் பிடித்த மடப் பசங்களான பார்ப்பனரல்லாதார்களுக்குப் புத்தியும் கிடையாது. மரியாதையும் தெரிகிறதில்லை. இவர்கள் பரிதாபம் காட்டப்படக் கூட யோக்கியதை அற்றவர்கள் என்பதாகச் சொல்லித் தன்னை வேறு ஜாதியானாகக் காட்டிக் கொண்டு தான் இன்னும் மேலே போவதற்கு ஆக உண்மையில் வேறு ஜாதியானாகவே ஆகி விடுகிறார்.

பெரும் பதவிக்குச் சென்றுவிட்ட தமிழர்களோ, இன்னும் மேலே போவதற்கு ஆக, மற்றவர்கள் எல்லோரையும் கீழ்ஜாதியாக மதித்துத் தங்களைத் தவிர வேறு யாரும் இப்பதவிக்கு வரக்கூடா தென்று மற்றவர்களைக் கீழ் ஜாதியாக மதித்துத் தங்களைப் பார்ப்பனர் என்றே மதித்துக் கொண்டு, தங்களைத் தவிர வேறு யாரும் இப்பதவிக்கு வரக்கூடாது என்று மற்றவர்களைக் கீழே அழுத்தவே முயற்சிக்கிறார்கள். வக்கீல்கள் போட்டி போட்டுக் கொண்டு எதிரிகளுக்கு நல்ல பிள்ளைகளாகிறார்கள். தமிழர் மிராசுதார்களோ, மேல் ஜாதியைக் காப்பியடித்து பார்ப்பனத் தமிழ் பேசிக் கொண்டு, தங்கள் வேலைக்காரர்களையும், ஏழை களையும், சூத்திரர்கள் போலவே கருதி, நடத்தி மேல்ஜாதித் தயவுக்கே காத்திருக்கிறார்கள்.

இனி யார் பாக்கி என்றால் யந்திர சாதனங்களில் முதலாளிகள். இவர்களுக்குக் கடவுள், பணம்தான். என்ன பண்ணியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதும், ஜாதியாவது இனமாவது, நம் வேலையை நாம் பார்ப்போம்; செல்வாக்கிருக்கிறவன் காலண்டைக் கிடப்போம். நமக்கென்னத்துக்கு ஊர்வம்பு? அவ்வப்போது பணம் செலவு செய்து எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்பதை மோஷ மந்திரமாகக் கொண்டவர்கள்.

நம் தொண்டர்களில் சிலரின் சங்கதியோ, பிரபுக்கள், பணக் காரர்கள், பண்டிதர்கள் ஆகியவர்கள் நிலையே இப்படி இருக்கும் போது நாளையக் கஞ்சிக்கு வகையில்லாமல் வீம்பு பேசிக் கொண்டு நடக்கிற சில தொண்டர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? பல யோக்கியதைத் தொண்டர்கள் இருக்கலாம். ஆனால், பசி வந்திடப் (பெண்டு பிள்ளைகள் கஞ்சிக்கு அழுதிட) பத்தும் பறந்து போகும் அல்லவா.

இவர்கள் இத்தனை பேருக்கும் தங்கள் நலத்தில், பெருமையில், முற்போக்கில், பணத்தில் தங்கள் வாழ்வில் இருக்கும் கவலையில் 100-இல் 1 பாகம் கூடத் தங்கள் இழிவைப் பற்றியோ தங்கள் இன (தமிழர்) இழிவைப் பற்றியோ கவலை இல்லை.

ஆகவே, தமிழர் இழிநிலைக்கு இவைகளைவிட வேறு காரணம் என்ன வேண்டும்?

ஆனால், பார்ப்பனரைப் பாருங்கள், காந்தியை மகான், மகாத்மா, கடவுள் என்கிறார்கள்!

காந்தியாரோ காங்கிரஸ் மெம்பர் கூட அல்ல; காங்கிரசுக்கு இன்று தலைவர் கூட இல்லை; எதிரி ஆட்களில் ஒருவரைப் பிடித்துத்தான் தலைவர் என்று செய்து தங்கள் இஷ்டப்படி ஆட்டுகிறார்கள்தங்கள் இனத்தைப் பற்றிக் காங்கிரசில் ஒரு வார்த்தையும் கிடையாது. ஆனால், காங்கிரசைத் தங்கள் இன நன்மைக்கே நடத்துகிறார்கள். அதில் சேர்க்கப்படும் நமது ஆட்களுக்கு எந்தவிதமான சுதந்திரமும் கிடையாது. ஆனால், அவர்கள் சேர்த்த நம்ம ஆட்களைக் குரங்குகள் போல் ஆட்டு கிறார்கள். எவனாவது தன் இனத்தைப் பற்றியோ, இனநலத்தைப் பற்றியோ நினைப்பானேயானால், உடனே அவனை மகாத்மா; மாகராஜாவானலும் தலைகீழாகக் கவிழ்த்தித் துராத்மா ஆக்கிவிடுகிறார்கள்.

தங்களுக்கென்று ஸ்தாபனமில்லாமலும், அமைப்பு இல்லா மலும் (காங்கிரசையே தங்கள் ஸ்தாபனமாக வைத்து) அவர்கள் காரியம் நடந்து கொண்டே போகிறது. அவர்களில் இனப்பற்று, ஜாதிப்பற்று இல்லாதவர்கள் கிடையவே கிடையாது. இவற்றைக் காட்டிக் கொள்ளவோ, வேலை செய்யவோ பயப்படுகிறவர்கள் அவர்களில் ஒருவர்கூடக் கிடையாது.

ஒரு காசு செலவு செய்யாமலும் ஒரு ஸ்தாபனத்திலும் சம்பந்தம் வைத்துக் கொள்ளாமலும் வெறும் அறிக்கை விடுவதைத் தவிர வேறு ஒரு வேலையும் செய்யாமல் சாஸ்திரிகளும், அய்யர்களும், ஆச்சாரியர்களும் ஆக எத்தனை பேர்கள் இன்று அரசியலையும், இந்திய நாட்டுச் சமுதாய இயலையும் தங்கள் இன நலத்துக்குத் தங்கள் இஷ்டப்படி நடத்துகிறார்கள்?

இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்கு உள்ள இன அபிமானமும், ஜாதி அபிமானமும், இனத்தில், ஜாதியில் தங்களைத் தனியாய்ப் பிரித்துக் காட்டிக் கொள்ளுவதும், அதை அவர்களில் ஆணும், பெண்ணும் அத்தனை பேரும் கொண்டிருப்பதுமல்லாமல் வேறு என்ன என்று சொல்ல முடியும்? இப்படியேதான் முஸ்லிம்களும் இருக்கிறார்கள். ஆகவே, நமது கீழ்மைக்கும் நம் எதிரிகளினுடையவும், மற்றவர்களுடையவும் மேன்மைக்கும் வேறு காரணம் என்ன சொல்லுகிறீர்கள்?


(27.11.1943 - குடிஅரசுவில் வெளிவந்த கட்டுரை)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...