இன்றைய தினமணி ஏட்டில் மூன்றாம் பக்கத்தில் ஒரு விளம்பரம் வந்துள்ளது.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ பகவான் சத்ய சாயிபாபாவின் பிறந்த நாள் நவம்பர் 23ஆம் தேதியாம் - வாழ்த்துச் செய்தியைக் குறைந்த கட்டணத்தில் வெளியிடுவார்களாம்! வாழ்த்துகளை வரி விளம்பரமாகவும் வெளியிடுவார்களாம்!
இவ்வளவு செய்திகளையும் வெளியிட்ட தினமணி சாயிபாபாவின் பிறந்த வருடத்தை ஏன் வெளியிடவில்லை? சினிமா நடிகையா சாயிபாபா?
பகவானுக்குப் பிறந்த நாளாம்! இதுவரை பகவான் சாயிபாபாதான் பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களைச் செய்து கொண்டிருந்தார். இப்பொழுது அந்தப் பகவானுக்கே ஆசிகளும், வாழ்த்துகளும் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளதே!
இது என்ன வேடிக்கை! பகவானை ஆசீர்வதிக்கும் அளவுக்கு பகவானை விட பக்தர்கள் பெரிய நிலைக்குப் போய்விட்டார்களா?
சாயிபாபாவின் மவுசு குன்றி - மக்கள் மத்தியிலே அவரைப்பற்றிய தகவல்களும்,
மகிமைகளும் மறைந்துபோன நிலையில் மீண்டும் மக்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்ய இப்படி ஓர் ஏற்பாடா?
சாதாரணமாக அரசியல்வாதிகள் சுவரொட்டி அடித்து தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதுபோல சாயிபாபாவும் ஆகிவிட்டாரே - எல்லா ஆசாபாசங்களும் பொங்கி வழியும் ஒரு சர்வ சாதாரண மனிதர் இந்த சாயி என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?
என்றைக்குப் புட்டபர்த்தி ஆசிரமத்தில் பகவான் சாயிபாபாவைக் கொலை செய்ய முயற்சி நடந்ததோ - அந்தக் கொலையிலிருந்து தப்பிக்க ஓடோடிச் சென்று அறையைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு பதுங்கினாரோ
- அன்றைக்கே அவரது சக்தியின் சாயம் வெளுத்துவிட்டது!
கொஞ்ச காலம் ஆரவாரம் இல்லாமல் கிடந்தவர் மீண்டும் மக்கள் மத்தியில் பவனி வர ஆசைப்படுகிறார்! அதனுடைய ஏற்பாடே இந்தப் பிறந்த நாள் பிரச்சாரம் என்பதில் அய்யமென்ன?
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
18.11.1999
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக