புதன், 2 ஆகஸ்ட், 2017

நல்லவர் ஆட்சியில்...


இரயில்வே துறையில் கேபினட் அமைச்சருக்கும் கீழ் இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு இணை அமைச்சர்கள் (ஸ்டேட்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்களுள் ஒருவர் - பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்களுள் ஒருவரான பங்காரு லட்சுமணன் ஆவார். (திராவிடக் கலாச்சாரம் இந்துக் கலாச்சாரத்தின் ஒரு பிரிவு என்று கூறியவர் இவர்தான்!)

ஏற்கனவே ஒரு இணை அமைச்சர் இருக்கும்போது, பா...வைச் சேர்ந்த ஒருவர் அவசர அவரசரமாக நியமிக்கப்பட்டது ஏன்?

இதுபற்றி வெளிவந்திருக்கும் செய்தி சுவையானதல்ல - சங் பரிவார்க் கூட்டத்தின் அபிலாசைகளுக்காக ஒரு பிரதமர் எந்த அளவுக்கு வளையக் கூடியவர் என்பதை நிரூபிக்கும் தகவலாகும்.

பா...வினரும், சங் பரிவார்க் கூட்டமும் இது பற்றி என்ன சொல்லுகிறது?

எங்கள் மனிதர் ஒருவர் இரயில்வே துறையில் இருந்தால், எங்கள் டிக்கெட்டுகளை வசதியாக முன்பதிவு செய்து உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளாக வாங்கிக் கொள்ளலாம் அல்லவா? என்று கூறுகின்றனர்.

இதற்குமுன் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முனைந்தபோது அவர்களின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டதாம்!

எப்படி இருக்கிறது? ஒரு கட்சியினர் இரயில்வேயில் டிக்கெட்டுகளை வசதியாக முன்பதிவு செய்துகொள்வதற்காக ஒரு அமைச்சரே அவசர அவசரமாக நியமனம் செய்யப்படுகிறார் என்றால், இந்த பா... ஆட்சி என்பது பொதுநிலை திரிந்து, தன் கட்சிக்காக எந்த எல்லைக்கும் சென்று எதையும் செய்யும் என்பது வெளிப்படையாக விளங்கவில்லையா?
ஆட்சியில் ஆளும்கட்சி தலையீடு என்பது பற்றி எல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இதுபற்றி எல்லாம் ஏடுகளில்கூட சரமாரியாகச் செய்திகள் வருவதுண்டு.

ஆனால், ஒரு சாதாரண காரியத்துக்காக ஓர் அமைச்சர் பதவி என்பதை இப்பொழுதுதான் நாடு கேள்விப்படுகிறது!

பா...வினர்க்கும், சங்பரிவார்க் கூட்டத்துக்கும் ஆட்சி மூலமாக எவ்வளவோ வசதிகள் தேவைப்படும். அது தொலைபேசியாக இருக்கலாம்; சமையல் எரிவாயுவாகவும் இருக்கலாம்; பெட்ரோல் பங்க்காகவும் இருக்கக் கூடும்! இவற்றுக்கெல்லாம் அந்தந்தத் துறைகளில் ஒரு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நல்லவர், வல்லவரின் செயல்பாட்டைப் பாருங்கள் - அவருக்குப் பராக்குப் பாடும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் காணுங்கள்!


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 01.12.1999
நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...