சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயா டி.வி அலுவலகம் அருகே ஒரு பாழடைந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் கருதுகின்றனர். ஜெயா டி.வி.
ஊழியர்களும் பேய் பீதியில் இருப்பதாக செய்தி வெளியானது. இந்தச் செய்திக்கு ஜெயா டி.வி.
செய்தி ஆலோசகர் கே.பி.சுனில் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டை நெருங்கும்போது இதுபோன்ற மூடநம்பிக்கைகள்பற்றி செய்தி வெளியாவது அபத்தமானது. அதிலும், குறிப்பாக ஜெயா டி.வி. ஊழியர்கள் இதனால் பீதி அடைந்திருக்கிறார்கள் என்று கூறுவது வருந்தத்தக்கது என்று கூறினார் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
திரு.கே.பி.சுனிலின் பதிலைப் பாராட்டுகிறோம்
- வரவேற்கிறோம்!
21-ஆம் நூற்றாண்டு பிறக்கப் போகும் ஒரு காலகட்டத்திலும் மனிதனின் சிந்தனை பாழடைந்து கிடக்கிறது என்பதற்கு இந்தச் செய்தி ஓர் எடுத்துக்காட்டாகும்.
தொலைக்காட்சி நிறுவனங்களே காட்டுமிராண்டிக்கால கற்பனையாகிய பேய், பிசாசுக் கதைகளை அரங்கேற்றுவதும், நாடகத்துக்கு கருப்பொருளாக அவைகளைக் கொள்வதும் நீடிக்கும் வரைக்கும் இதுபோன்ற பித்தலாட்டச் செய்திகளும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கும்?
விஞ்ஞானத்தின் அரும்கொடையான வானொ(லி)ளியை அஞ்ஞானத்துக்குப் பயன்படுத்தும் சுரண்டல்வாதிகள் மலிந்திருக்கும் வரை,
21-ஆம் நூற்றாண்டு என்பதுகூட அவர்களைப் பொறுத்தவரை மூடநம்பிக்கைகளுக்கு விஞ்ஞான ஜிகினா ஒட்டி எப்படி மக்களைச் சுரண்டலாம்; கசக்கிப் பிழியலாம் என்பதுதான் சிந்தனையாக இருக்கும்.
சுடுகாடுகள் எல்லாம்கூட பங்களாக்கள் ஆகி இருக்கும் காலகட்டத்தில் பாழடைந்த பங்களாக்கள் எல்லாம் பேய்கள் நடமாடும் சுடுகாடாகிவிட்டது என்கிற நினைப்போ! பேய்
- அப்படி என்றால் என்ன? மனதில் தோன்றும் அச்சத்தின் வெளிப்பாடு - கற்பனைப் பயம் என்பதல்லாமல் வேறு என்ன?
அங்கே பேய்,
இங்கே பேய் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட இடங்களில் எல்லாம் மின்சார விளக்குகள் ஒளியைக் கொட்டத் துவங்கியவுடன்,
அதுபற்றி பேச்சுகள் போன இடம் தெரியவில்லையே!
பிரபலமாகப் பேசப்பட்ட ஆவி அமுதா இப்பொழுது எங்கே இருக்கிறார்? கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள் - மூடநம்பிக்கைக்காரன் புளுகு எத்தனை நாள்தான் தாங்கும்?
- விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
24.11.1999
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக