இன்றுதான் - வைகுண்ட ஏகாதசி. இன்றுதான் மகாபாரத அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் கீதோபதேசம் செய்த நாளாம்! 5,500 ஆண்டுகளுக்கு முன் கீதை உபதேசிக்கப்பட்டதாம்.
இந்தக் கீதையைப் பார்ப்பனர்கள் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்கள்.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரமுகர்கள் (அன்றைய முதலமைச்சர் ஈ.கே. நாயினார் உட்பட) கீதையை வெளிநாட்டுத் தலைவர்களுக்கு,
ஆட்சியாளர்களுக்கு அளிப்பதைப் பெருமையாகக் கூடக் கருதுகிறார்கள்.
அந்த அளவிற்கு அது விளம்பரச் சாமர்த்தியத்தால் உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ளது.
அதன் தத்துவமெல்லாம் ஆத்மா அழியாதது -
மனிதன் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் கர்மாதான்.
போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்பவே ஒரு மனிதனின் வாழ்வும், தாழ்வும் நிர்ணயிக்கப்படுகிறது.
அதை மாற்ற முடியாது என்பதுதான்.இது ஒரு தத்துவமல்ல - மனிதத்தை ஒடுக்கும் ஒருமோசடியான சுரண்டலும் அடக்குமுறையுமாகும்! மனித உரிமை, மனித நேயம், மனித சீலம் பேசும் எந்த ஒருவராலுமே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஓர் ஏற்பாடாகும்.
சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்
- என்பதும் கிருஷ்ணன் உபதேசித்த
- மனித குலத்தைப் பிறப்பால் பேதப்படுத்திய மோசமான கூற்றாகும்.
நான்கு வகை வருணத்தை (ஜாதி தர்மத்தை) நானே உண்டாக்கினேன் என்பது இதன் பொருள்! நானே நினைத்தாலும் இதனை மாற்றியமைக்க முடியாது என்கிற அளவுக்கு, முரட்டுத்தனமான வகையில், கிருஷ்ணன் என்கிற இந்து மதக் கற்பனைப் பாத்திரத்தைப் பேச வைத்துள்ளார்கள்.
பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லப்பட்டதும் இந்தக் கீதையில்தான்.
மனிதத் தன்மை உள்ள ஒவ்வொருவரும் கீதை ஒழிப்பை - மறுப்பை ஒரு சூளுரையாக எடுத்துக் கொள்ள வேண்டியநாள் இந்நாள். தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற தமிழ் நூலும், அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் மானுட சமூகத்துக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த அறிவுக் கொடையாகும்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
26.12.2001
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக