நீங்கள், இன்று உலக சரித்திரம் அல்லது இந்திய தேச சரித்திரம் என்கின்ற எந்தப்
புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது அய்ரோப்பியன்
எழுதியிருந்தாலும் சரி, இந்தியன் எழுதியிருந்தாலும் சரி, அல்லது ஆரியன் எழுதியிருந்தாலும் சரி, திராவிடன்
எழுதியிருந்தாலும் சரி, *இதோ உங்கள் முன் இந்த 5, 6 சரித்திர புத்தகங்களை வைக்கிறேன்; இவை அய்ரோப்பாவிலும், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும்
பிரசுரிக்கப்பட்ட வைகளாகும். இவற்றுள் பாதிக்குமேல் ஆரியர்களே எழுதி, சர்க்கார்
ஒப்புக்கொண்டு, ஆரியர்கள் பெரிதும் கொண்ட டெக்ஸ்ட்புக் கமிட்டியினரால்
அனுமதிக்கப்பட்டு 1-ஆவது வகுப்பு முதல் எம்.ஏ. வகுப்புவரை பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாட
புத்தகங்களாக வைக்கப்பட்டவை களாகும்.
இவற்றில் எதை எடுத்துக் கொண்டாலும் சரி, இந்தியா என்றால், முதல்
பக்கத்தில் அல்லது முதல் பாகத்தில் திராவிடர் என்றும், 2-ஆவது பக்கத்தில்
அல்லது 2-ஆவது பாகத்தில் ஆரியர் என்றும் எழுதியிருப்பதைப் பாருங்கள். இது
எதற்காக எழுதப்படுகிறது? ஒரு நாட்டுச் சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், அதன் பூர்வ
குடிகள்தான் முதலில் குறிக்கப்படுவார்கள்.
எனவே, இந்தியா என்பது முதலில் திராவிடமாய் இருந்தது. அதில் பூர்வ குடிகள்
என்பவர்கள் திராவிடர்களாய் இருந்தார்கள் என்பதைக் குறிக்கின்றது.
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக