நவம்பர் 4ஆம் நாளை நாம் மறக்க முடியாது; அதிலும் குறிப்பாகப் பெண்கள் மனனம் செய்யவேண்டிய நாள் இது.
இந்நாளில் தான்
1927 இல் அன்றைய சட்டமன்றத் துணைத் தலைவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தார்.
கோயில்களில் பெண்கள் பொட்டுக் கட்டி விடப்படும் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான தீர்மானம் அது.
பலத்த எதிர்ப்பினைச் சந்தித்தது அந்த மசோதா.
எதிர்க்கட்சி தலைவராக இருந்த `வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் கோபம் கொந்தளிக்கப் பேசினார்.
இது தேவகாரியம், இந்த ஜென்மத்தில் தேவர்களுக்கு அடியார்களாகயிருந்து தொண்டு செய்தால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்றெல்லாம் வாய்க் கிழிய கத்தினார்.
தந்தை பெரியாரைச் சந்தித்தார் டாக்டர் முத்துலட்சுமி. அய்யா அவர்கள் சொன்ன அந்தக் கருத்தை சட்டமன்றத்தில் அழகாகச் சொன்னார்.
`எதிர்க்கட்சித் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் `தேவரடியாராக இந்த ஜென்மத்தில் இருந்து தொண்டு செய்தால் வரப் போகும் ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் + மோட்சம் கிடைக்கும் என்றார்.
இதுவரை எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே தேவர்களுக்கு அடியார்களாகயிருந்து தொண்டு செய்து அடுத்த ஜென்மத்தில் மோட்சத்தை அடைந்து வந்தார்கள். இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர்வாளின் பரம்பரை தேவரடியார்களாகயிருந்து அடுத்த ஜென்மத்தில் மோட்சத்தை அடையட்டுமே! என்றாரே பார்க்கலாம். வாயாடி சத்தியமூர்த்தி அய்யர்வாள் வாயடைத்து உட்கார்ந்தார் என்பது வரலாறு.
நீதிக்கட்சி ஆட்சியில் நியமன உறுப்பினராகி அதன்பின் அவையின் துணைத் தலைவரானார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள்.
இதுபோன்ற சீர்திருத்தத் திட்டங்களையெல்லாம் பார்ப்பனர்கள் எதிர்த்துக் கொண்டேயிருந்தனர்.
பால்ய திருமணங்கள் (குழந்தைத் திருமணம்) குறித்தும் இதுபோன்ற எதிர்ப்புகள்தாம்.
14 வயதுக்குள் திருமணம் செய்யக் கூடாது என்ற மசோதா வந்தபோது திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் என்ன சொன்னார் தெரியுமா?
``அரசாங்கம் இந்துக்களின் விவாஹத்தில் தலையிட்டால், ஹிந்து சமுதாயமே பாழாகிவிடும். பெண்களுக்கு 10, 12 வயதுக்கு முன்னமையே விவாஹம் செய்துவிடவேண்டும். இல்லையேல், பாவம் வந்து சூழ்ந்துவிடும் என்று பராசர் எழுதியிருக்கிறார். நாங்கள் பாவத்திற்குப் பயப்படுவோமா? அல்லது உங்கள் சட்டத்திற்குப் பயப்படுவோமா? என்று சம்மத வயதுக் கமிட்டியின் முன் பேசினார்.
இவற்றையெல்லாம் தாண்டிதான் பெண்களின் திருமண வயது இப்பொழுது பதினெட்டாக உயர்ந்துள்ளது.
தேவதாசி ஒழிப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட இந்நாளில் க(ந)டந்து வந்த பாதையைச் சிறிது சிந்தித்தால்தான், வெளிப்படுத்தினால்தான் இன்று பெற்றுள்ள பல உரிமைகள் எத்தனை எத்தனைத் தடைகளைக் கடந்து வந்துள்ளன என்கிற அருமை புதிய தலைமுறையினருக்குப் புரியும்.
4.11.2006 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
4.11.2006 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக