ஞாயிறு, 16 ஜூலை, 2017

தேரழகு




பத்திரிகைத் துறை என்பது பெரும் வியாபாரத் துறையாக வியாபித்து விட்டது. ஒன்றுக்கொன்று போட்டிக் கடையாக ஆகிவிட்டன.
நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்பது நம் நாட்டுப் பழமொழி! அதையொட்டி அறிவியல் கண்டுபிடித்த இந்தத் துறை அறிவியலுக்கு விரோதமான மூடச் சரக்குகளை  மக்களின் பக்திப் போதையைப் பயன்படுத்தி அவர்களின் தலையில் கட்டுவதிலே போட்டா போட்டி!
உணவு விடுதியில் இன்றைய ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி என்று போடுவதுபோல, ஆன்மீக ஸ்பெஷல் என்று இணைப்புகளை வெளியிடுகின்றன ஏடுகள்  இதழ்கள்!
குறுக்குவழியில் கோபுரத்தின் உச்சிக்குச் செல்லவேண்டும் என்ற பேராசையை வளர்த்து வைத்துள்ள பக்த கே()டிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றனர். கடன் தீர்க்கும் விநாயகர், கல்யாண வரம் தரும் தலம் என்றெல்லாம் தல புராணங்களை உலாவவிடுவார்கள்.
அப்படி வெளியிடும் இதழுக்கு ஸ்பான்சர் செய்ய முன்வரும் வியாபாரிகளும் உண்டு.
கல்கி வெளியிட்ட (28.6.2009) அப்படிப்பட்ட ஒரு இதழின் அட்டைப் படம் தெவிட்டாத தேரழகு!
உள்ளே அதுபற்றிய வருணனை. திருவாரூர் தேரழகு; திருவிடைமருதூர் தெருவழகு; மன்னார்குடி மதிலழகு; வேதாரண்யம் விளக்கழகு இப்படி எதுகை மோனையுடன் விளக்கங்கள்.
முன்பெல்லாம் திருவாரூர் தேர் எப்படி அசைந்து வந்தது. வடம் பிடிப்பவர்கள் படாதபாடுபடுவார்கள் என்றெல்லாம் வருணித்துவிட்டு, இப்பொழுது என்ன நடக்கிறதாம்? அதையும் கல்கி வாயாலேயே கேட்போமே!
திருச்சி பெல் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் முயற்சியால் தற்போது இரும்புச் சக்கரங்களும், ஹைட்ராலிக் பிரேக்கும் பொருத்தப்பட்டு, முட்டுக்கட்டை, உலுக்கு மரம் இவற்றின் உதவியின்றி தேரோட்டம் நடைபெறுகின்றது. கிரீஸ் தடவப்பட்ட இரும்புப் பலகைகளின்மேல் தேரை நிற்க வைத்து, புல்டோசரால் ஓர் இடி இடித்து ஒரு தள்ளு தள்ளினாலே தேர் குலுங்கிக் கொண்டு திரும்பி விடுகிறது. ஆர்வத்தால் மக்கள் வடம் பிடிக்கிறார்களே தவிர, தேர் ஓடு வது புல்டோசர் புண்ணியத்தினால்தான்! நாள் கணக்கில் ஓடிய தேர் இப்பொழுதெல்லாம் மணிக்கணக்கில் நிலைக்கு வந்து விடுகிறது என்று கல்கி வெளியிட்ட இணைப்பு இதழ் கூறுகிறது.
மற்றதற்கெல்லாம் ஆகமம், சாஸ்திரம், மரபுகள்பற்றி வாய் கிழியப் பேசும் பேர்வழிகள் பக்தர்களால் வடம்பிடித்து இழுத்துச் செல்லப்பட வேண்டிய தேரை இப்படி விஞ்ஞான சாதனங்களைப் பயன்படுத்தி இயக்குகிறார்களே, இது கூடாது, ஆகாது என்று ஆர்ப்பாட்டம் செய்யாதது ஒருபுறம் இருக்கட்டும்!
விஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர, கடவுள் சக்தியால் அல்ல என்பதையாவது ஒப்புக்கொண்டால் சரி!
13.7.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...