ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஜாக்சன் ஆவி




பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் அவருடைய இரசிகர்கள் மத்தியில் உலக அளவில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. அவரது மற்றொரு பக்கம் எப்படியிருந்தாலும் பாப் இசையில் முடிசூடா மன்னராகப் பவனி வந்தார்.
கடந்த ஒரு வார காலமாக ஏடுகளை ஆக்கிரமித்துக் கொண்டது அவரைப்பற்றிய செய்திதான்.
இதற்கிடையே சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவும் மூட நம்பிக்கை மத வியாபாரிகளின் சேட்டையும் தன் கைச்சரக்கைக் காட்டத் தொடங்கிவிட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவரது பங்களாவில் மறைந்த மைக்கேல் ஜாக்சனின் ஆவி நடமாடுகிறதாம். இப்படி ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.
மைக்கேல் ஜாக்சனுக்கு இருக்கும் உண்மையான புகழும், பெருமையும் போதாதா? அவர்மேல் ஒரு தெய்வீக மூட சரக்கை ஏற்றிதான் வித்தை காட்டவேண்டுமா?
இதில் என்ன வேடிக்கை தெரியுமா? பங்களா முழுவதும் படம் எடுத்த வீடியோ கலைஞர்களுக்கோ, பேட்டி கொடுத்த மைக்கேல் ஜாக்சனின் உடன்பிறப்பு ஜெர்மைன் என்பவருக்கோ ஆவி என்று அளந்து கொட்டும் அந்த நிழல் உருவம் தெரியவில்லையாம்!
நிழல் உண்மையாக இருந்தால், அதனைக்கூட வீடியோ துல்லியமாகப் படம் எடுத்துக்கொடுத்து விடுமே.
மக்கள் மத்தியில் கடவுள், மதம், வழிபாடு போன்ற மூடச்சரக்குகள் எடுபடவில்லை. கிறித்துவ நாடுகளில்கூட சர்ச்சுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சர்ச்சுகள் விலைக்குக் கிடைக்கும் என்று விளம்பரப் பலகைகள் தொங்க ஆரம்பித்துவிட்டன!
நெருக்கடி நிலைக்கு ஆளாகியிருக்கும் மத நிறுவனங்களைக் காப்பாற்றிக் கொள்ள, புகழ் பெற்ற ஒருவரின் பெயரை மோசடியாகப் பயன்படுத்தி தெய்வீகத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதற்குள் இருக்கும் சிதம்பர இரகசியமாகும்.
திராவிடர் கழகத் தோழர் நாகர்கோவில் புவனன் ஒருமுறை கூறியதுபோல உண்மையான ஆவியில் இட்லியாவது வேகும், மதவாதிகள் கூறும் அந்த ஆவி அதற்குக்கூடப் பயன்படாது என்று பளிச்சென்று சொன்னாரே!
மைக்கேல் ஜாக்சனுக்கு மட்டும்தான் ஆவி உண்டா? செத்துப் போகும் ஒவ்வொருவருக்கும் ஆவி உண்டா?
பதில் சொல்வார்களா பக்தக்கே()டிகள்?
8.07.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...