திங்கள், 17 ஜூலை, 2017

நாயாக...


இன்றைக்குத் திருவரங்கத்திலே திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் எழுச்சி மாநாடு. திருவரங்கம் என்று சொன்னாலே வைணவர்களின் முக்கிய தலமாகக் கூறப்படுவ துண்டு.

இந்த ஊர் கோயிலுக்கு எத்தனை எத்தனையோ தல புராணங்கள் உண்டு. ஏகாதசி விழா இந்தக் கோயிலில் பிரசித்தம் - வைகுந்தம் செல்வதற்குச் சொர்க்க வாசலைத் திறப்பதுண்டு. ஆனால், எந்தப்பக்தரும் சொர்க்கத்திற்குச் சென்றதாகத் தகவல் இல்லை. கோயிலுக்குச் சென்றவர்கள் திரும்பி அவரவர் வீடுகளுக்குத் தான் திரும்பி வருகிறார்கள்.

சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்ட பின் உள்ளே சென்றவர்கள் திரும்ப முடியாது என்ற நிலையிருந்தால் எந்த ஒரு பக்தனும் அந்தக் கோயில் பக்கம் தலை வைத்துப் படுக்கவே மாட்டான் என்பது யதார்த்தம்.
சின்ன வயதிலே மண் சோறு பொங்கி, மரப்பாச்சி வைத்து விளையாடும் பழக்கம் - பெரியவர்கள் ஆனாலும் அவர்களை விட்டுப் போவதில்லை. அதற்கு அடையாளம் பெரிய பெரிய பொம்மைகளை வைத்து விளையாடுகிறார்கள் - பெரியவர்களாக ஆனவர்கள். சின்ன சின்ன பொம்மைகளை வைத்து விளையாட முடியாது அல்லவா!

இவ்வளவு சக்தியை அந்த ரெங்கநாதன்மீது ஏற்றிவைக்கிறார்களே - அந்த ரெங்கநாதன் பள்ளி கொண்டிருக்கும் இந்தக் கோயில் ஒரு 50 ஆண்டுகளுக்குமுன் தீப்பிடித்து எரிந்து, ரெங்கநாதன் உருவமே வெடித்துச்சிதறி அதற்குப் பின் புதிய பொம்மை (சிலை) அடித்து வைக்கப்பட்டது. அப்பொழுதாவது கடவுளின் சக்தி என்பதெல்லாம் வெத்து வேட்டு என்று தெரிந்து கொண்டிருக்கவேண்டும்.

பக்தி மூளையை அல்லவா கவ்விப் பிடித்து விட்டது. எப்படி சிந்திப்பார்கள் - திருந்துவார்கள்?

ஏகாதசியன்று இரவு இந்த ரங்கநாதனை எப்படி துதிக்கவேண்டுமாம்? அதற்குப் பாட்டு எல்லாம் எழுதி வைத்துள்ளனர்.
தேவேந்திரனின் அமரலோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண் டாம்! ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாக பிறக்கும் பாக்கியத்தை எனக்குக் கொடுப் பாயாக!
(தினமலர், 28.12.2009)

என்றெல்லாம் ஏகாதசி இரவு அன்று பக்தர்கள் பாட்டுப் படிக்க வேண்டுமாம்.

பக்தி மனிதனை நாயாக ஆக்குகிறது - பகுத்தறிவு மனிதனாக நிலைக்கச் செய்கிறது என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

கடவுளை மற - மனிதனை நினை என்றாரே தந்தை பெரியார் - அதற்கு ஈடு இணையும் உண்டோ!

                8.11.2011

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...