கேள்வி: ஜெயலலிதா போன்றோர் பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால்தானே பொடா சட்டமே நீக்கப்பட்டது?
பதில்: இல்லை. மைனாரிட்டி ஓட்டு நம்மிடம் நிலைபெற இச்சட்டத்தை நீக்குவதும் உதவும் என்று காங்கிரஸ் கட்சி நினைத்ததால்தான் பொடா ரத்தாகியது.
(துக்ளக், 8.10.2008)
திருவாளர் சோ ராமசாமி இவ்வாறு எழுதியிருக்கிறார்.
இதன்மூலம் ஒரு உண்மையை சோ ராமசாமி ஒப்புக்கொண்டுள்ளார். பொடா சட்டம் என்பது பெரும்பாலும் மைனாரிட்டிக்கு எதிராகப் பயன்படுகிறது என்பதுதான் அது.
குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி.
ஆட்சியில் 2002 ஆம் ஆண்டில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இந்தக் கொலைகளுக்குக் காரணம் முசுலிம்களாக இருக்க முடியாது. முசுலிம்களை முசுலிம்கள்தான் கொன்றனர் என்று நரேந்திர மோடிகூட இதுவரை சொல்லவில்லை. அப்படியானாலும், இரண்டாயிரம் முசுலிம்களைக் கொன்றவர்கள் இந்துத்துவா பேசும் சங் பரிவார்க் கும்பல்தான்
அந்தக் கேடுகெட்ட காரியத்தைச் செய்தவர்கள் என்பது வெளிப்படை.
ஆனால், அங்கு என்ன நடந்தது? முசுலிம்கள்தான் கைது செய்யப்பட்டனர். அதுவும் எந்தச் சட்டத்தின்கீழ்? ஜாமீனில் எளிதில் வர முடியாத பொடா சட்டத்தின் கீழ்.
இந்தச் சட்டத்தின்கீழ் குஜராத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 287 பேர்.
அதில் 286 பேர் முசுலிம்கள். இன்னொருவராவது இந்துவா என்றால், அதுவும் இல்லை
அந்த மற்றொருவர் சீக்கியர்.
அரசே முன்னின்று நடத்திய ஒரு கலவரத்தில் முசுலிம்கள் இரண்டாயிரம் பேர்களுக்குமேல் கொல்லப்பட்ட ஒரு கலவரத்தில் இந்துத்துவாவாதிகள் முன்னின்று நடத்திய கலவரத்தில், பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அத்தனைப் பேரும் முசுலிம்கள் என்றால், அந்தச் சட்டம் பயன்பட்ட முறையைத் தெரிந்து கொள்ளலாமே!
இந்தப் பின்னணியில்தான் திருவாளர் சோ எழுதுகிறார்: சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக இந்தப் பொடா சட்டத்தை காங்கிரஸ் நீக்கியது என்று.
இந்தச் சட்டத்தின்மூலம், சிறுபான்மையினர் நசுக்கப்படுவதால், அவர்களின் நன்மையை உத்தேசித்து அச்சட்டம் நீக்கப்பட்டு இருந்தால், அதுசரிதான்.
ஆனால், சோவுக்கு என்ன ஆத்திரம் என்றால், சிறுபான்மை மக்களை நசுக்க பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளுக்குக் கிடைத்த வசதியான ஒரு கருவி பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதே என்பதுதான்!
9.10.2008 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக