குருவும் - சீடரும் பிறந்த நாள் டிசம்பர் 2 என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதுதான் இந்நாள். குருவாகிய ஆ.திராவிடமணி பிறந்த ஆண்டு 1914; சீடர் பிறந்த ஆண்டு 1933.
இயக்கத்துக்கு, தமிழினத்துக்கு நமது தலைவரைப் புறந்தந்த இந்தக் குருநாதரை மிகுந்த நன்றி உணர்ச்சியுடன் வீரவணக்கம் செலுத்தி இந்நாளில் நினைவு கூர்வோமாக!
பொன்னேரியை அடுத்த ஆசான்புதூர் தான் அவர் சொந்த ஊர் என்றாலும், பணியின் நிமித்தம் கடலூர் வந்தவர் - இயற்பெயர் சுப்பிரமணியம்.
தொடக்கத்தில் இஸ்லாமிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து, பிறகு கடலூர் மணிலா மார்க்கெட்டிங் சொசைட்டியில் பணியில் சேர்ந்தவர். அவருடன்சகப் பணியாளராக இருந்தவர் தான் ஏ.கோவிந்தசாமி ஆவார்கள்; பிற்காலத்தில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகவும், அமைச்சராகவும் விளங்கியவர்.
ஆசிரியர் ஆ. திராவிடமணி தங்கும் இடம் ஒரு மடமாகும். இராமலிங்க பக்த ஜனசபை என்பது அதன் பெயராகும்.
மாலை நேரத்தில் மாணவர்களுக்கு இலவசப் பாடம் (டியூசன்) சொல்லிக் கொடுப்பார். பாடத்தோடு தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகளையும் சேர்த்து ஊட்டுவார். குடிஅரசு, திராவிட நாடு இதழ்களில் சந்தாதாரராகிய அவர்,
அவற்றை மாணவர்களிடத்திலும் கொடுத்துப் படிக்கச் சொல்லுவார்.
அப்படித் தயாரிக்கப்பட்ட போது அவர் கண்டு எடுத்த மாமணிதான் சாரங்கபாணி - அந்தப் பெயரை வீரமணி என்று மாற்றிக் கொடுத்த மாணிக்கமும் திராவிடமணி அவர்களே (அண்ணாவின் கலிங்கராணியில் வரும் கதாபாத்திரம்தான் வீரமணி).
துடிப்புமிக்க இந்த இளைஞரை அடையாளம் கண்டு, எழுதிக்கொடுத்து, மனப் பாடம் செய்யச் சொல்லி, பேச்சுப் பயிற்சி அளித்தார். வெகுவிரைவில் அதில் சுட்டியாகி, திராவிடர் கழக மேடைகளில் முழங்கும் முன்னணிப் பேச்சாளர் ஆனார். மேசை மீது ஏற்றி விடுவது தான் தாமதம் கணீர் கணீர் என்ற வெண்கல நாதம் ஒலிக்க ஆரம்பித்துவிடும்.
அந்தச் சின்ன வயதி லேயே வெளியூர்களுக்கெல் லாம் சென்று கழகப் பொதுக் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பேசும் அளவுக்கு அவரின் கீர்த்தி நாலாத் திசைகளிலும் பரவியது. தொடக்கத்தில் மேடைகளில் கழகப் பாடல்களையும் பாடியிருக்கிறார் சிறுவன் வீரமணி.
ஆசிரியர் ஆ. திராவிடமணி செயல்பாட்டினை அறிந்த தந்தை பெரியார் அவர்கள் அவரை ஈரோட்டுக்கும் அழைத்துக் கொண்டதுண்டு. பிற்காலத்தில் திராவிடர் கழகத்தின் கூட்டுப் பொதுச்செயலளராகவும் இருந்து பணியாற்றியுள்ளார்.
பெரியார் திடலில் அவரை அழைத்துப் பொன்னாடை போர்த்தி தன் குருவுக்கு உரிய சிறப்புகளை ஆசிரியர் செய்ததுண்டு.
சீடருக்குப் பிறந்த நாள் விழா எங்கெங்கெல்லாம் இன்று கொண்டாடப்படுகிறதோ அங்கெங்கெல்லாம் அதன் ஊடே ஆ. திராவிட மணியும் ஓசைபடாமல் இருக்கிறார் என்பதில் அய்யமில்லை.
வாழ்க ஆசிரியர் ஆ. திராவிடமணி.
2.12. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக