இன்று திருவண்ணாமலை அருணாசல ஈசுவரர் கோவிலில் தீபத் திருவிழாவாம்! என்ன செய்யப் போகிறார்களாம்?
மலை உச்சியில் செப்புக் கொப்பரையில் மூன்று ஆயிரம் கிலோ நெய்யைக் கொட்டி, ஆயிரம் மீட்டர் காடா துணியால் தீபம் ஏற்றப் போகிறார்களாம்.
வறுமைக்கோட்டுக்குக் கீழே
40 சதவிகிதம் மக்கள் இந்தியாவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். உணவை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் பஞ்சத்தால் பரிதவித்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் ரூபாய் 22 ஆயிரம் கடன் கட்டிவிடப்பட்டுள்ளதாம்.
மூன்று வயதுக்கு உட்பட்ட ஊட்டச்சத்துக் குறைவால் இந்தியாவில் அவதிப்படும் குழந்தைகள் 46 சதவிகிதமாம்.
இந்த அவலத்தில் மூன்று ஆயிரம் கிலோ நெய்யை நெருப்பில் கொட்டி விளை யாடுகிறார்களே பக்தியின் பெயரால் - இது கிரிமினல் நடவடிக்கையல்லவா!
திருவண்ணாமலைசாமி நெய் கேட்கிறதா? நெய்யை நெருப்பில் கொட்டி விரயப்படுத்தினால்தான் அந்த அருணாசலனுக்குக் கொண்டாட்டமா? அப்படியானால் அவன் பிறர் துன்பத்தில் இன்புறும் மனோ நோய்க்காரனா?
((Sadist) அந்தக் கடவுள்! ஓ, அது கல் அல்லவா அதற்கு எப்படி இரக்கம் ஏற்படும்?
எதற்காக இந்தப் பண்டிகை? பிரம்மன் பொய் சொன்னான் என்பதற்காகத்தானே?
இந்து மதத்தில்தான் கடவுள் பொய் சொல்லுகிறான்; கற்பழிக்கிறான்; கொலை செய்கிறான் இதற்காகவெல்லாம் பண்டிகை என்றால், பக்தர்கள் மத்தியில் நல்லொழுக்கம் எப்படி ஏற்படும்?
மக்கள் ஒழுக்கக் கேடர்களாக இருப்பதற்கு இந்து மதக் கடவுள்களும், பண்டிகைகளும்தான் காரணம் என்பது இதன்மூலம் விளங்க வில்லையா?
ஒரு குழந்தை நெய்யை எடுத்து அடுப்பில் ஊற்றினால் அக்குழந்தைக்கு அடி விழும். ஆனால், பெரிய மனுசர்கள் மூவாயிரம் கிலோ நெய்யை நெருப்பில் ஊற்றுகிறார்களே இவர்களுக்கு என்ன தண்டனை?
பக்தியைப் பிள்ளை விளையாட்டு என்று சொன்ன வடலூர் இராமலிங்கனார் வாய்க்கு ஒரு பிடி சர்க்கரைதான் போடவேண்டும்.
24.11.2007 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக