சென்னையில் ஹைக்கோர்ட் வக்கீலாக இருந்த உயர்திரு. நடராஜ நாடார் பி.ஏ.பி.எல் அவர்கள் ஹைகோர்ட் ஜட்ஜுகளின் தயவினால் விருத்தாசலம் (தென்னாற்காடு ஜில்லா) முன்சீப்பாய் இம்மாதம் நியமனம் பெற்று உத்தியோகம் ஒப்புக் கொண்டார். இந்த கனவான் சுமார் ஒன்றரை வருத்திற்கு முன்பாகவே முன்சீப் லிஸ்டில் தாக்கல் செய்யப்பட்டவர். இந்நியமனம் வகுப்புவாரி உரிமை வலியுறுத்தப் பட்டதன் மூலமே கிடைக்கப்பட்டதாகும். இல்லையானால் இதற்கும் ஒரு அய்யரோ, அய்யங்காராகவே தான் வந்திருப்பார். இந்த உத்தியோகத்தில் இவரைச் சேர்த்து இப்போது இரண்டே நாடார்கள் நியமனம் பெற்றிருக்கிறார்கள். சப்ஜட்ஜியாகவோ, ஜில்லா ஜட்ஜியாகவோ பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டது முதல் இதுவரை யாரும் வந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாடார் சமூகத்திற்கென்று ஏதாவது உத்தியோகம் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அதை சில கிறித்தவர்கள் வந்து தாங்களும் நாடார் என்று சொல்லி கொள்ளை அடித்துக் கொண்டு போய்விடுகின்றார்கள். நாடார் மக்களும் ஏமாந்து விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இனியாவது நாடார் மக்கள் கண்விழித்து கிறித்தவ நாடார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களைக் கிறித்தவர்களுக்குண்டான விகிதாச்சாரத்தில் பெற்றுக் கொள்ளும்படியும், தங்கள் சமூகத்திற்குண்டான விகிதாச்சாரத்தில் வேறு யாரும் பிரவேசிக்காத படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மதம் காப்பாற்றப்பட வேண்டும். ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அதில் யாரும் பிரவேசிக்கக் கூடாதென்றும், இந்த நிபந்தனையின் மீதே சுயராஜ்யமும் சுயேச்சையும் பெற விரும்பும் ஸ்தாபனங்களும் கிளர்ச்சிகளும் நடக்கும்போது நாடார் சமூகம் போன்ற வகுப்பார்கள் தங்கள் உரிமை பெறுவதில் மிக்க கவலையாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியதுடன் அந்தப்படி தாராளமாகப் பல்லைக் கெஞ்சாமலும் மனசாட்சியையும் கொள்கைகளையும் விற்காமலும் தானாகவே கிடைக்கும்படியாக அரசாங்க இயந்திரத்தில் தக்க மார்க்கம் செய்து கொள்ள வேண்டியது முக்கிய கடமையாகும். இது நிரந்தரமென்று நாம் சொல்ல வரவில்லை. எது வரையும் ஜாதிப் பிரிவும், அவைகளுக்கு ஏற்றத்தாழ்ச்சி உணர்ச்சிகளும் ஆதாரங்களும் காக்கப்படுகின்றனவோ அதுவரையில் கண்டிப்பாய் மேல்கண்ட கொள்கை இருந்தே ஆகவேண்டும் என்று சொல்லுகின்றோம்.
- குடிஅரசு, துணைத்தலையங்கம், 26.10.1930
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக