திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலை அய்திக முறைப்படி அலங்கரிப்பதில்
தேவஸ்தான அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக, பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பதி திருமலையில் உற்சவராக
எழுந்தருளும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான சீனிவாச பெருமாளுக்கு,
தினமும் நித்திய கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
முன்னதாக, வெங்கடேச பெருமாள் கோவில் பிரதான
வாயிலில், தினமும் அதிகாலை மாவிலை, வாழை மரம் கட்டி தோரணங்களால் அலங்காரம் செய்வது வழக்கம். ஆனால்,
நேற்று முன்தினம் பிரதான வாயிலில்
கட்டப்பட்டிருந்த வாழை மற்றும் மாவிலைகள், உலர்ந்து
முற்றிலும் வாடிய நிலையில் இருந்ததைக் கண்டு, பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
தினம் காலையில் முறைப்படி புதிதாக தோரணங்கள் கட்டப்பட்டதா என்ற
சந்தேகம் ஏற்படுவதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
(தினமலர் 17.2.2011)
திருப்பதி ஏழுமலையான் மீது எவ்வளவு அன்பும், பக்தியும் செலுத்துகின்றனர் பக்தர்கள் என்பதை அளவிட்டுச் சொல்ல
முடியாது. தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம்! என்று நம்புகிறார்கள்.
புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பட்டினி (விரதம்) கிடந்து கோவிந்தனை
சேவிக்கிறார்கள்.
திருப்பதி செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே கூட்டி மெழுகி, நாமம் போட்டு பயபக்தியாகப் படையல் போடுகிறார்கள். வசதி உள்ளவர்கள்
திருப்பதி சென்று, மணிக்கணக்கில் காத்து நின்று
ஏழுமலையானைத் தரிசித்து, துளசி தீர்த்தம் பெற்று, பிறந்த பயனின் திருப்தியை அடைந்ததாக மனம் உருகி நிற்கிறார்கள்.
உண்டியலில் பணத்தைக் கொட்டுகிறார்கள்.
கோயிலுக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பும்போது பைசா காசும் பையில்
இருக்கக் கூடாதாம் - எங்காவது தெரு முக்கூட்டில் கோயில் இருந்தால் அந்தக் கோயில்
உண்டியலில் போட்டு விட்டு வரவேண்டும் என்பது அய்திகமாம். (கோயில் சுரண்டல் எவ்வளவு
தந்திரமாக இருக்கிறது என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்!)
இவ்வளவு பயபக்தி பக்தர்களிடம் இருக்கிறது. ஆனால் திருப்பதி கோயிலிலோ
அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள். நித்தியக் கல்யாணம்
நடத்த வேண்டுமாம். (அப்பொழுது தானே பக்தர்களைக் கவர்ந்து இழுத்துப் பணப் பையை நிரப்பலாம்!)
ஆனால் ஆங்கே என்ன நடக்கிறது? நாள்தோறும்
வாயிலில் கட்டப்பட வேண்டிய வாழை மரம் கட்டப்படுவதில்லை. மாவிலைகள் உலர்ந்து
தொங்குகின்றன. (ஆனால் அன்றாடம் வாழை மரம் கட்டுவதாகக் கணக்கு எழுதி விடுவார்கள்).
இப்படியெல்லாம் நடக்கிறது ஆங்கே! பக்தர்கள் தான் பயித்தியக்காரர்கள்.
ஏழுமலையான் என்ன செய்வார்? அவர் வடித்து வைக்கப்பட்ட சிலைதானே?
20.2.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக