தீபாவளித் திருநாளாம், தீய சக்திகளை நீக்கும் நாளாம். இந்நாளில் அனைத்து மக்களுக்கும் ஒளி கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறாராம்.
இப்படி சொல்லியிருப்பவர் அகோபில மடம் ஜீயர் அல்லர் - காஞ்சி மட சங்கராச்சாரியாரும் அல்லர். கூறியிருப்பவர் அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், கொடியிலும் பொறித்து, திராவிட என்பதையும் இணைத்துக் கொண்டுள்ள அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா.
திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் இயக்கத்துக்கு பெயர் சூட்டிய தன் காரணம் என்ன?
நாம் வைக்கும் பெயரில் பார்ப்பான் உள்ளே புகுந்திட வசதி செய்து கொடுக்கக் கூடாது என்றார் தந்தை பெரியார்.
பார்ப்பனர்கள் நம் இயக்கத்திற்குள் புகுந்தால், புத்த மார்க்கத்திற்கு ஏற்பட்ட கெடுதிதான் இங்கும் ஏற்படும் என்று எச்சரித்தார்.
இலட்சம் பெறுமானமுள்ள கருத்துக் கருவூலம் இது. பார்ப்பன அம்மையார் அண்ணா பெயரையும், திராவிட பெயரையும் கொண்ட ஒரு கட்சிக்குத் தலைமை தாங்கியதன் குரூரமான விளைவுதான் தீபாவளிக்கு வாழ்த்து கூறுவதாகும்.
எந்தப் பார்ப்பனீயப் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து திராவிடர் இயக்கம், தன்மான இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதன் ஆணி வேரை வீழ்த்தும் வகையில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் சின்னமான தீபாவளிக்குச் சற்றும் தயக்கம் இல்லாமல் வாழ்த்துக் கூற முன் வந்துள்ளார் ஆரியக் குலத்திலகம் ஜெயலலிதா.
பெரியார் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். கட்சியின் பெயரில் முதல்சொல் அண்ணா என்று இருக்கிறதே - அந்த அண்ணா தீபாவளி பற்றி என்ன சொல்கிறார்?
பண்டிகைகள் ஏற்பட்டது, பகவத் நாமத்தை உச்சரித்துப் பரிபக்குவம் பெற மக்களைத் தூண்டுவதற்காக, தூய்மையான எண்ணங்களைத் தூவ,
என்றெல்லாம் பேசுவார்கள், எழுது வார்கள் வைதீகத்தின் வக்கீல்கள். ஆனால், நாட்டிலே நடைபெறும் பேச்சோ இதற்கு நேர்மாறாக இருக்கும். வாழ்க்கையின் தேவைகள் எனும் தாக்குதலின் முன்பு, தேவ கதைகள், திவ்ய பண்டிகைகள், எதுவும் நிற்க முடியா தல்லவா? இதனைத்தானே, சு.ம.காரன் சொல்கிறான். அவன் சொல்லையாரய்யா கேட்கிறார்கள் என்று அநேகர் கூறுவர். கூறிக் கொண்டுமிருக்கிறார்கள். ஆனால் உள்ளே அதே சுய மரியாதைக் கருத்து புகுந்து விடுவதை மட்டும் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. தீபாவளிப் பண்டிகையைக் கண்டிக்காதது மட்டுமல்ல. அந்தப் பண்டிகை மிக அவசியமானது என்று ஆதரித்து எழுதும் ஏடுகளிலேயே சுயமரியாதைக் கருத்துரைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சித்திரங்களாகவும், கட்டுரைகளாகவும் அந்தப் பண்டிகையை ஆதரித்து அதே ஏடுகள் எழுதும்போது, ஏதோ சுயமரியாதைக்காரனை வெல்வதாக மனப்பால் குடிக்கிறார்கள்! உண்மையில் நடப்பதோ வேறு!
- திராவிட நாடு,
11.11.1945
அண்ணா தி.மு.க. தொண்டர்களே, அண்ணா பெயரில் கட்சி நடத்தும் ஜெயலலிதா அண்ணாவின் கொள்கைக்கே குழி வெட்டுகிறாரே - ஏற்றுக் கொள்கிறீர்களா?
5.11. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
5.11. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக