அநியாயத்துக்காக சானியா என்ற பெண்மணியின் திருமணம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் இடம்பிடித்து ஆட்டுகின்றன. தனிப்பட்ட ஒரு பெண்மணியின் வாழ்க்கையை இப்படியெல்லாம் சர்ச்சைக்கு ஆளாக்குவது நாகரிகமானதுதானா?
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் எளிதில் புக முடியாத டென்னிஸ் விளையாட்டுக் களத்தில் அடி வைத்த நாள் முதற்கொண்டு எதையாவது அந்தப் பெண்ணின்மீது வீசி எறிவதையே தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டம் இந்த நாட்டில் இருக்கவே செய்கிறது.
அவர் குட்டை உள்ளாடை அணிந்து ஆடுகிறார் என்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சில அடிப்படைவாதிகளும் கடுமையாக விமர்சித்ததுண்டு. அது மறைந்த நிலையில் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில், மணமகனாக வந்தவர் அந்தப் பெண்ணின் மீது தன் ஆண் ஆதிக்க எண்ணச் சுமையைத் திணிக்க ஆரம்பித்தார்.
அங்கே போகாதே! இங்கே போகாதே! அந்த ஆணுடன் சேர்ந்து விளையாடாதே! என்றெல்லாம் திருமணத்துக்கு முன்னதாகவே ஆண்களுக்கே உரிய அகம்பாவ விளையாட்டுகளை ஆரம்பித்துவிட்டார்.
புத்திசாலியான அந்தப் பெண் அதனை அடையாளம் கண்டு, திருமணத்திற்கு முன்னதாகவே அவரை வெட்டிக் கொண்டது ஒரு சரியான நிலைப்பாடே!
அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டுக்காரருக்கும் சானியாவுக்கும் திருமணம் என்றவுடன், இந்தியாவில் உள்ள இந்துத் தாலிபான்களான சங்பரிவார்க் கும்பலும், சிவசேனா கூட்டமும் மிகக்கேவலமான முறை-யில் சானியாவை விமர்சித்தன. அவர் உருவப்படத்தைத் தீயிட்டுக் கொளுத்தின. அசிங்கங்களை வாரியிறைத்தன.
இதற்கிடையே சானியாவின் மணவாளர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்ற ஒரு புயல் வெடித்துக் கிளம்பியது. அதுபற்றி பக்கம் பக்கமாகச் செய்திகள்.
வெட்கமில்லை, இந்த ஊடகங்களுக்குத்தான் கிஞ்சிற்றும் வெட்கம் இல்லை. ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை! அதில் மூக்கை நுழைக்க மூன்றாவது ஆளுக்கு உரிமை ஏது? அது பச்சையான அதிகப் பிரசங்கித்தனமே!
8.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக