கருநாடக மாநிலம் கார்வாரில் காப்ரி என்னும் கடவுளுக்கு எத்தகைய அபிஷேகம் தெரியுமா? சாராயத்தால்; எந்த வகையில் தீபாராதனை தெரியுமா? சிகரெட்டால்.
ஏதோ நாத்திகர்கள் செய்யும் தமாஷ் அல்ல இது.
ஆன்மிகத்தைக் காப்பாற்றவும், சங் பரிவாரை வளர்க்கவும் அவதாரம் எடுத்ததுபோல் சிண்டை அவிழ்த்துவிட்டுக் கிளம்பியிருக்கும் சாட்சாத் தினமலர் (22.3. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3, பக்கம் 3) தான் இதனை வெளியிட்டுள்ளது.
ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் அல்ல; ஆயிரம் லிட்டர் சாராயம் அபிஷேகமாம். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய வழிபாடு உண்டாம். இப்படி வழிபடுபவர்கள் கோவாவில் அடிமைகளாக நடத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் சந்ததியினராம்.
படையல்கள் எல்லாம் மாமிசம்தானாம். இப்படியெல்லாம் படைத்தால் தங்களுக்குத் தேவையானதை எல்லாம் காப்ரி கடவுளால் கிடைக்குமாம்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கடவுளை உண்டாக்கியவர்கள் மனிதர்கள்தானே! அப்படியிருக்கும்போது தன்னைப் போன்ற உருவ அமைப்பும், தனது உணவு மற்றும் பழக்க வழக்கங்களை தம்மால் உருவகப்படுத்தப்பட்ட அந்தக் கடவுளின்மீது ஏற்றுவதும் இயல்புதானே.
கோவாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் கடவுள் உண்டாக்-கப்பட்ட விதம் இந்தக் கதியில்தான்.
ஆப்பிரிக்காவில் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் யானையின் மீது சவாரி செய்யும் காரணம் அங்கு யானைகள் அதிகம்.
எஸ்கிமோக்கள் வாழும் பகுதிகளில் உருவகப்படுத்தப்பட்ட கடவுள்கள் எல்லாம் மிருகத்தோலை உடுத்துக் கொண்டிருக்கும். காரணம். அங்கு குளிர் அதிகம். அம்மக்கள் தாங்கள் உடுத்திக் கொண்டிருக்கும் அதே மிருகத் தோலை தங்களால் படைக்கப்பட்ட கடவுள்களுக்கும் கொடுத்திருக்கின்றார்கள்.
நீக்ரோக்களின் கடவுள்களின் தலை முடியும் சுருண்டு இருக்கும். காரணம் வெளிப்படையானதே.
கடவுளைக் கற்பித்தவன் மனிதன் என்பதற்கும், அது காட்டுமிராண்டிக்கால கற்பனை என்பதற்கும் வேறு என்ன எடுத்துக்காட்டுகள் தேவையோ!
24.3. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக