சினிமாவில் சில காட்சிகள் வரும்; நாகப்பாம்பைப் பார்த்து நாகப்பா என்று சாஷ்டாங்கமாகக் கும்பிட்டால், பாம்பு படம் எடுக்காது; கடிக்காது என்றெல்லாம் கதைப்பார்கள். திரைப்படத்தைப் பார்த்து பாம்பைக் கண்டு கீழே விழுந்து கும்பிடு போட்ட சிறுமி பாம்பு தீண்டியதால் மரணம் அடைந்தாள் என்றெல்லாம்கூட செய்தி வந்தது (உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த சம்பவம்).
சினிமாதான் இந்தச் சில்லறைத்தனமான சில்லுண்டி வேலைகளில் இறங்குகின்றன என்றால், ஏடுகளும், இதழ்களும், அவற்றிற்குச் சளைத்தவையல்ல நாங்கள் என்று மார்தட்டுகின்றன.
தலப் புராணம் என்ற தலைப்பில் அவிழ்த்துக் கொட்டும் அறியாமைக் குப்பைகளுக்கு அளவேயில்லை.
திருப்பதியில் வெங்கடாசலபதிக்கு மாலை கட்டுவதற்காக திருமலை நம்பி என்பவர் பூ பறித்தார். அப்போது அவரைப் பாம்பு தீண்டிவிட்டது. அவர் கவலையே படாமல், மாலை கட்டிக் கொண்டு வெங்கடாசலபதியிடம் போனார்.
பாம்பு கடித்தும் நீ மாலையுடன் என்னிடம் வந்திருக்கிறாயே, நம்பி என்று கேட்டார் பெருமாள்.
கடித்த பாம்பு விஷம் இல்லாததாக இருந்தால், தங்களை இங்கு வந்து தரிசிப்பது; விஷமுள்ள பாம்பாக இருந்தால் வைகுண்டத்தில் வந்து சந்திப்பது என்ற வைராக்கியத்தில் இருந்தேன்! என்று பதில் சொன்னா-ராம் நம்பி.
இப்படி ஒரு தலப் புராணம் ஓர் இதழில். ஒவ்வொரு கோயிலுக்கும் இதுபோல அற்புதக் கதைகளைக் கட்டி விடுவது
அந்தக் கோயிலின் மீது ஓர் ஈர்ப்பை, நம்பிக்கையை ஏற்படுத்தும் வர்த்தக ரீதியான தந்திரம் என்பதை மனதில் வையுங்கள்.
கடவுள் ஒருவரே; அவர் பல நாமகரணங்கள் கொண்டவர் என்று ஆன்மிகவாதிகள் சொல்லுகிறார்களே, அது உண்மையானால், ஒவ்வொரு கோயிலின் சக்தியின் டிகிரி வேறுபடுவதுபோல் எழுதி வைப்பானேன்?
காரணம் இருக்கிறது தன் பக்கம் அதிக எண்ணிக்கையில் ஈர்த்தால் தானே அவர்களின் பொருள்களைச் சுரண்ட முடியும். உண்டியலையும் நிரம்பி வழியச் செய்ய முடியும்?
27.3. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக