திங்கள், 17 ஜூலை, 2017

கலைவாணர்


நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இந்நாள் (1908).

அவரின் பெருமைக்குத் தந்தை பெரியார் சூட்டிய புகழ் மாலை ஒன்று போதுமே! இனி என்.எஸ். கிருஷ்ணன் செத்தாலும் சரி, அவர் பணம், காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப்பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அச்சரித்திரத்தின் அட்டைப் பக்கத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டப்படாதது ஆகிவிடும்!
(குடிஅரசு, 11.11.1944).

தந்தை பெரியார் கூறியபடியே 50 வயது நிறைவு ஆவதற்குள் கலைவாணர் மறைந்தார், வாரி வாரி வழங்கிய அந்த வள்ளல் அன்னக் காவடியாகவே மறைந்தார்; எனினும், தந்தை பெரியார் அவர்கள் கணித்தபடியே சரித்திரத்தின் உச்சத்தில் கதிரொளியாக நம்மிடையே மின்னிக் கொண்டிருக்கிறார்.
உடலை ஆட்டி, வயிற்றைக்குலுக்கி, கீழே வழுக்கி விழுந்து சிரிப்பை செயற்கையாக மக்கள் மத்தியில் உண்டாக்கும் கலைஞர் அல்ல கலைவாணர்.

சொற்கள், அதில் சொருகிநிற்கும் கற்கண்டுக் கருத்துகள் - அவற்றைச் சொல்லும் முறையாலே மக்கள் மத்தியிலே வெடிச்சிரிப்பைக்கிளப்பும் பேராற்றலுக்குச் சொந்தக்காரரே கலைவாணர்.

கருத்துகள் என்றால் பழைமையைக் கட்டிக்கொண்டு அழும் புராணப் புழுதியின் காளான்கள் அல்ல; காலாகாலமாகக் கட்டிக்கொண்டு அழும் மடமையின் நடு முதுகெலும்பை முறித்த, புதிய சிந்தனைக்கான வெளிச்சம்.

என் ஆசான் - பச்சை அட்டைக் குடிஅரசு என்று கலைவாணர் சொன்னதை நினைவுபடுத்திக் கொண்டால், அவர் வாய் உதிர்க்கும் கருத்துகள் உருப்படியாக மக்களின் சிந்தனைகளில் புரட்சி வித்துக்களைத் தூவுவதைப் புரிந்து கொள்ளலாம்.

பக்தி என்ற பெயரால், திருவிழா என்ற பெயரால் கோயிலில் உள்ள குழவிக்கற்களுக்குப் பாலாபிஷேகம், சந்தனாபிஷேகம், நெய் அபிஷேகம் என்று உணவுப் பொருள்களைப் பாழாக்குகிறார்களே,

திருவண்ணாமலைத் தீபம் என்ற பெயரால் 3500 கிலோ நெய்யை நெருப்புக்குத் தீனியாகப் போட்டு நாசப்படுத்துகிறார்களே - இது எவ்வளவுப் பெரிய கொடுமை - மானுடவிரோத செயல்!

போதிய ஊட்டச் சத்து இல்லாமையால் 30 விழுக்காடு குழந்தைகள் எடைக்குறை வாகப்பிறக்கிறார்கள்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 75 விழுக்காடும், பெண்களில் 52 விழுக்காடும் இரும்புச் சத்துக் குறைவால் ரத்த சோகையால் பீடிக்கப்படுகின்றனர். மேலும் 5 வயதுக்குட்பட்ட 57 விழுக்காடு குழந்தைகள் வைட்டமின் குறைவால் பாதிக்கப்படுகின்றனர் என்றெல்லாம் ஒரு பக்கத்தில் புள்ளி விவரங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றன.

மங்கையர்க்கரசி எனும் படத்தில் (உவமைக் கவிஞர் சுரதா முதன்முதலாக உரையாடல் தீட்டியது) ஒரு பாடல் வரி மூலம் கலைவாணர் கூறுகிறார்:

பாலும் பழமும் அபிஷேகம் பண்ணுவதைப் பார்;
பால் இல்லை என்று சிசு பதறுவதைப் பார்!

நையாண்டி மட்டுமல்ல; நறுக்கென்று ஒரு குட்டுக் குட்டி, பரிதாப உணர்வையும் தூண்டி, பகுத்தறிவு நரம்புகளை மீட்டு வதையும் கவனிக்கவேண்டும்.
இவருக்குப் பெயர்தான் கலைவாணர்!

29.11. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...