ஞாயிறு, 16 ஜூலை, 2017

வெள்ளுடை வேந்தர்


தலைப்பாகையுடன் கூடிய வெள்ளுடை, சட்டைப் பையில் தங்கச் சங்கிலியுடன் கூடிய பாக்கெட் கடிகாரம், அதில் ஒரு பேனா, மூக்குக் கண்ணாடி, நெடிய தோற்றம், கம்பீரமான பார்வை இவற்றின் ஒட்டு மொத்தமான வடிவம்தான் வெள்ளுடை வேந்தர் திராவிடப் பெருந்தகை பிட்டி தியாகராயர். அவரின் 159 ஆம் பிறந்தநாள் இந்நாள் (1852).

இவரைப் பற்றி அண்ணா கூறுகிறார்:

சர் தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்களுக்கு தலைமை பூண்டு, அவர்களின் தன்னுணர்விற்கு வழி கோலி, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை அகற்ற பாடுபட்டுச் சமுதாயத் துறை, பொருளாதாரத் துறை, அரசியல் துறை ஆகியவற்றில் நல்லிடம் பெற உழைத்தார். நமது பண்டைப் பெருமைகளையும் அவரால் உணர முடிந்தது. அன்று தியாகராயர் திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டுமென்று பாடுபட்டதன் பலனை இன்று காண்கிறோம்.

அவர் காலத்திலே தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கின்றது. அவர் அன்று பறக்கவிட்ட சமுதாயப் புரட்சிக்கொடியின்கீழ் நின்றுதான் நாம் இன்று பணியாற்றி வருகிறோம் என்று குறிப்பிட்டார் அறிஞர் அண்ணா.

1959 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.. வெற்றி பெற்றபோது அண்ணா அவர்கள் கூறியதும் குறிப்பிடத்தக்கது:

நம்முடைய தோழர்கள் எல்லாம் நகர மன்றத்திலே நுழைகின்ற நேரத்தில், உச்சியிலிருந்து பாதம் வரையில் தொங்கக்கூடிய நல்லதோர் மலர் மாலையைத் தயாரித்து, நகர சபைக் கட்டடத்திற்கு எதிரிலேயே கவனிப்பாரற்று நிற்கிற தமிழர்களைக் கைதூக்கி விட்ட சர். தியாகராயர் சிலைக்கு அணிவித்து அவரது பொன்னடிகளைத் தொழ வேண்டும்.

மகானே! நீங்கள்தான் தமிழர் சமுதாயத்திற்கு முதன்முதல்  அறிவூட்டினீர்கள். வாழும் மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தீர்கள். உங்களது வழிவந்த நாங்கள் நீங்கள் பட்ட தொல்லைகளைவிட அதிகமாக அவதிப்பட்டோம். நீங்களாவது செல்வச் சீமான்; நாங்கள், பஞ்சைப் பராரிகள்! ஆனால் சீமான்கள் உங்களை மதிக்க மறந்தார்கள்; ஏழைகளாகிய நாங்கள் உங்களை மறக்கவில்லை என்று வீரவணக்கம் செய்துவிட்டு உள்ளே நுழைந்து கடமையாற்ற வேண்டுகிறேன் என்றார் அறிஞர் அண்ணா.
அண்ணாவின் இந்தப் படப்பிடிப்பு நூற்றுக்கு நூறு சரியானது.

1882 இல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக உள்ளே நுழைந்த தியாகராயர் 1925 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து பணிபுரிந்த சாதனையாளர் அவர். மாநகர சபையில் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் தலைவர் அவர்தான். மூன்றுமுறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவரே சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்கு வித்திட்ட வித்தகரும் அவரே  தன்னைத் தேடி வந்த முதல் அமைச்சர் பதவியை வேண்டாம் என்று கூறி கடலூர் .சுப்பராயலு ரெட்டியாரை முதல் அமைச்சராகும்படிச் செய்தார்.

இந்தப் பண்பாட்டின் உயர் ரத்தினத்தை நினைவு கூர்வோம்! தூயத் தொண்டின் இலக்கணத்தை வரித்துக் கொள்வோம்!

27.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...