வியாழன், 3 ஆகஸ்ட், 2017

அபசகுனம்


அழகிரியும் ஸ்டாலினும் ராவணன் - கும்பகர்ணன் மாதிரி வாழட்டும்! என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் - திமுக தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் குமுதம் பேட்டியில் கூறி விட்டாராம். பொறுக்குமா துக்ளக் திருவாளர் சோ ராமசாமி அவர்களுக்கு?

அட்டைப் படத்துக்கு ஒரு கார்ட்டூனுக்கான சமாச்சாரம் கிடைத்துவிட்டது - பிழைக்க வேண்டும் அல்லவா!

துக்ளக்கை நடத்துவதால் எந்தப் பலனும் இல்லை என்று எப்படிச் சொல்வது? எனக்குப் பிழைப்பு நடந்திருக்கிறதே!(துக்ளக் 24.10.2007 பக்கம் 26)

என்ன எழுதுகிறார்?

இந்த நேரத்திலே இப்படி அபசகுனமா வாழ்த்தனுமா? ராவணன் - கும்பகர்ணன் மாதிரி ஆட்சியை இழக்கப் போறமோன்னு கவலையா இருக்குது (துக்ளக் கார்ட்டூன் 9.3.2011)

கும்பகர்ணன் - இராவணன் என்று கலைஞர் அவர்கள் கூறியது எந்தப் பொருளில்?  சோ அதனை திசை மாற்றிக் கூறுவது எந்தப் பொருளில்?

பெரிய விவாதப் புலி என்று பார்ப்பனர்கள் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு நிலாச் சோறு ஊட்டுகிறார்களே, கொஞ்சுகிறார்களே, அந்த அறிவாளியின் அறிவுத் திறன் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இது ஒன்று போதுமே!

மணமக்களைப் பார்த்து இராமனும் சீதையும் போல வாழவேண்டும் என்று சோ திருக்கூட்டம் சொல்லுகிறதே - அதற்கும் இதுபோல வியாக்கியானம் செய்ய முடியுமே!

அடபாவமே, ஒரு நல்ல மங்கலகரமான நேரத்தில் இப்படி அபசகுனமாகப் பேசலாமா?

14 வருஷம் காட்டில் திரிந்து வாழ வேண்டிய பரிதாபத்துக்கு ஆளானவர்களைக் கூறியா ஆசீர்வதிப்பது?கணவனை விட்டுப் பிரிந்து, மாற்றானால் கடத்தப்பட்டு, அல்லல்பட்ட ஒரு பெண்தானா போயும் போயும் ஆசீர்வாதத்துக்குக் கிடைத்தார்?

தனது கர்ப்பம் கணவனால் சந்தேகிக்கப்பட்டு, அதன் காரணமாகக் காட்டுக்குள் கொண்டு போய் விடப்பட்ட பெண்தானா இவர்களுக்குக் கிடைத்த உதாரணம்?

கடைசியில் ராமன் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்.

சீதை பூமி பிளந்து தற்கொலையானாள் என்று தானே வால்மீகி சொல்கிறார்?

இந்த மணமக்களும் தற்கொலை செய்து கொண்டுதானா சாக வேண்டும்? இப்படி அபசகுனமா ஆசீர்வதிக்கலாமா? சீ... ச்சீ, இவர்களுக்கு ஏன் இந்த அற்பப் புத்தி? என்று கேட்டால் திருவாளர் சோ ராமசாமி தன் மூஞ்சியை எங்கே கொண்டு போய்ப் பதுக்கிக் கொள்வார்?

4.3.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...