- ஞா.தேவநேயப்பாவாணர்
பிரிவினை,
அடிமைத்தன்மை, மறமிழத்தல், வறுமை, பகுத்தறிவின்மை, உயர்தரக்
கல்வியும், நாகரிகமின்மை, தாய்மொழி வெறுப்பு, தற்குலப்பகை முதலியன ஆரியத்தால் தமிழர்க்கு
நேர்ந்த தீங்குகளாகும். ஆரியர் வந்ததிலிருந்து தமிழர்
என்னும் முறைபற்றியே காரியங்கள் நடந்து வந்திருக்கின்றன என்பதை
அறியலாம்.
பார்ப்பனர்
பாட்டுத் தொழிலை மேற்கொண்டதால் பாணர்
பிழைப்பும், கணியத் தொழிலை மேற்கொண்டதால்
வள்ளுவர் பிழைப்பும், வடமொழியைத் தலைமையாக்கியதால் தமிழ்ப்புலவர் பிழைப்பும் கெட்டன. தாழ்த்தப்பட்டோர்
ஊர்ப் பொதுக்குளங்களில் குளிக்கக் கூடாதென்றும், அக்கிரகார வழியாகச் செல்லக்கூடா தென்றும், மேலாடையணியக் கூடாதென்றும், இன்னும் சில ஊர்களில்
இருந்து வருகின்றது. மேல்வகுப்பாரைக் கண்டவுடன் அய்ம்புலனும் ஒடுங்கி, அவர் ஏவல் வழி
நிற்கின்றனர் தாழ்த்தப்பட்டோர். இன்னோர்க்கு மறம் எங்ஙன் உண்டாகும்?
பிறர் தாழ்த்தி வைக்கிறதினாலேயே, பெரும்பாலும் தாழ்ந்து கிடக்கின்றனர் கீழோர். மேனாட்டாருக்குச் சமையல்
செய்யும் பறையர், மிகத் துப்புரவாயிருப்பதையும்,
பார்ப்பனரும் அவரிடத்து உண்பதையும் நோக்குக. இங்ஙனம் அவரினத்தாரெல்லாம் திருந்தக்
கூடும். கல்வியொன்றே அவர்கட்குத் தேவையானது.
ஆரிய -
திராவிடப் போர் தொன்றுதொட்டதாதல்
ஆரிய -
திராவிடப் போர் இந்தியர்க்குள், முக்கியமாய்த்
தமிழர்க்குள், பிரிவினையுண்டாக்குமாறு ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப்பட்டதென்றும், அடிமைத் தமிழரான நீதிக்கட்சியார்
அதைக் கடைப்பிடித்து வருகின்றனரென்றும், ஒரு சாரார் கூறி
வருகின்றனர். ஆரிய - திராவிடப் போர்,
ஆரியர் இந்தியாவில் கால் வைத்த நாள்
முதலாய் நடந்து வருவது, சரித்திரத்தால்
அறியப்படும். ஆரிய மறைகளும் அதற்குச்
சான்றாகும்.
பிராமண
மதத்திற்கு மாறாக பவுத்த மதத்தைத்
தோற்றுவித்த புத்தர், வடநாட்டிலிருந்த ஒரு திராவிட வகுப்பாரே.
பிரிவினையென்னும் படையால், திராவிடரைக் கொண்டே திராவிடரை வென்று
வடநாட்டை ஆரியர் கைப்பற்றும் வரையும்,
போர் நடந்து கொண்டேயிருந்தது.
ஆரியர்
தமிழ்நாட்டிற்கு வந்தபின், அவரது முறைகளைத் தமிழ்நாட்டிற்குத்
தீங்கு விளைவிப்பனவாகக் கண்ட பல தமிழறிஞர்,
அவ்வப்போது அவற்றைக் கண்டித்து வந்திருப்பதை நெடுகக் காணலாம்.
-
(ஒப்பியன் மொழி நூல் பக்கம்
65 - 66)
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக