வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ஜி.யு. போப்


கிறித்துவத்தைப் பரப்புவதற்காகப் பல மேலை நாட்டு அறிஞர்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததுண்டு. கல்வி, மருத்துவம் ஆகிய இரு துறைகளிலும் கிறித்துவம் நாட்டுக்கு ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கவையே. அதிலும் சிறப்பாக தமிழ்த் தொண்டு ஆற்றிய ஜி.யு.போப் (ஜார்ஜ் உக்லோபோப்) பெருமக்கள் தமிழர் வரலாற்றில் கம்பீரமாக நிற்கக் கூடியவர்கள் ஆவார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் இவர். ஜான்போப் - கேதரைன் உக்லோ ஆகிய இணையர்க்கு மகனாய் பிறந்தவர் - இவரையும் சேர்த்து ஒன்பது மக்கள் அவர்களுக்கு.

1839இல் சமயப் பணி ஆற்றிட கப்பல் மூலம் தென்னிந்தியாவுக்குப் பயணமானார். கப்பலில் பயணித்த எட்டே மாதங்களில் தன்னுடன் பயணம் செய்த வில்லியம் ஆர்தர் மற்றும் ஜோன்ஸ் கேரட் ஆகியோர் மூலம் தமிழை நன்கு கற்றவர். மொழி, வரலாறு, சமயம், மூன்றிலும் புலமை பெற்ற போப் ஜெர்மன், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளையும் கற்றார். தஞ்சாவூர், உதகமண்டலம், பெங்களூர் முதலிய இடங்களில் கல்விப் பணி, சமயப் பணிகளை ஆற்றியுள்ளார்.

இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். 1886இல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவ்வாண்டில் தான் தம் வாழ் நாளில் அரிய பணியாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்த அரிய பணி உலக சிம்மாசனத்தில் தமிழின் கருவூலத்தை ஒளியிடச் செய்தது. இவர் தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் அன்றியும் தமிழ்ச் செய்யுட்களைத் தொகுத்து தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் பெயருடன் வெளியிட்டார். இவர்தம் அரிய பணிக்காக ராயல் ஏஷியாடிக் சொசைட்டி எனும் அமைப்பு தங்கப் பதக்கம் அளித்து கவுரவித்தது.

இவரைப்பற்றி சில வரலாற்றுத் துணுக்கு மணிகள் முக்கியமானவை. இங்கிலாந்தின் அரசி எலிசபெத் சென்னை வந்தபோது (20.2.1961) சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட வெல் வெட் பெட்டகத்தில் ஜி.யு. போப்பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தின் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.

1969ஆம் ஆண்டு முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றபோது போப் திருக்குறளை 50 பிரதிகள் தன்னுடன் எடுத்துச் சென்று அங்குள்ள நூலகங்களுக்கும், பேராசிரியர்களுக்கும், பிரமுகர்களுக்கும் அளித்து மகிழ்ந்தார். 1904 (சனவரி 1) புத்தாண்டு வாரத்தில் கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலையும், மதுரை இளம் பெருவழுதி எழுதிய உண்டாலமே இவ்வுலகம் என்ற பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிட்டு அன்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

சைவ சித்தாந்தம் ஆரியக் கலப்பற்ற பண்டைத் தமிழரின் சமய நெறி என்றவரும் இவரே! ஆரிய இனம் இங்கு ஊடுருவுவதற்கு முன்னதாகவே தமிழ் நாகரிகம் தனி வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்தது என்பதையும் நிலை நாட்டினார். தனது கல்லறையில் ஒரு தமிழ் மாணவர் என்று பொறிக்கப்பட வேண்டும் என்று எழுதிய இந்தப் பெருமகன் இந்நாளில் தான் (1908) தம் 88ஆம் வயதில் தம் கண்அசைவுகளை நிறுத்தினார்.

11.2.2011
நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...