கவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந்தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந்தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிரம் பாடல்கள் எழுதியிருப்பார் அவரது அர்த்தமுள்ள இந்து மதம் வாழ்க்கை நெறிமுறைகளை விளக்கும். எனக்கு அதிகாரம் இருந்தால், அந்த நூலை பல்கலைக் கழகங்களில் பாட நூலாக்கியிருப்பேன்.
- (தினமலர், 28.10. 2010 )
என்று கவிஞர் வாலி கூறியுள்ளார்)
கண்ணதாசன் எவ்வளவோ பாடல்களை எழுதியவர்தான். அர்த்தமுள்ள இந்து மதத்தைப்பற்றி மட்டும்தானா எழுதினார்? அர்த்தமற்ற இந்து மதத்தையும் குடைந்து எடுத்துத் தள்ளியுள்ளாரே!
ஆடுமாடுகள் முன் நடந்திட
ஆரணங்குகள் பின் தொடர்ந்திட
காடு யாவையும் கடந்து சிற்சிலர்
கன்னியத்தாயக
எல்லை தொட்டனர்
மஞ்சள் மேனியும்
வஞ்சக நெஞ்சமும்
மானமென்னும் ஓர்
எண்ணம் இன்மையும்
கொஞ்சும் வார்த்தையும்
கொண்டவர் - தமிழ்க்
கோட்டை வாசற்படியை
மிதித்தனர்
சொந்தமாக ஓர்
நாடில்லாதவர்
தொட்ட பூமியில்
சூழ்ந்து வாழ்பவர்
எந்த நாடும் தன்
சொந்த நாடென
ஏற்று மாந்தரை
மாற்றி ஆள்பவர்
சொத்து என்பதோ
தர்ப்பை ஒன்றுதான்
தூய்மை என்பதோ
துளியும் இன்மையாம்
வித்தை யாவையும்
சூழ்ச்சிப் பள்ளியில்
விரும்பிக் கற்றதாம்
வேறு என் சொல!
நச்சரவுகள் மனித
மேனியில்
நடமிடும் கதை
இவர்கள் கதையாம்
அச்சமிக்கவர் கோழையர்;
ஆயினும்
அடுத்து வீழ்த்திடும்
திறமை மிக்கவர்!
(கண்ணதாசன் கவிதைகள், பக்கம் 162-163).
என்றெல்லாம் விலாவாரியாக ஆரியப் பார்ப்பனர்கள் பற்றி எழுதி இருக்கிறார் - முடிந்தால் கவிஞர் வாலி இதனையும் பல்கலைக் கழகங்களில் வைத்திட சிபாரிசு செய்யலாமே!
சூழ்ச்சி வென்றது!
நாடு காய்ந்ததே!
கடவுள் வாசலை
காத்தனர் ஆரியர்
வீரம் முற்றும்
ஒழிந்தது ஏட்டிலே!
தீரம் மாண்டு ஆரியர்
சாத்திரத்
தீக்குழியிடைச்
சாய்ந்தனர் தென்னவர்
என்று முழங்கினார் கண்ணதாசன்.
இன்னும் அந்த நிலை இருப்பதை கவிஞர் வாலிகள் மறுக்க முடியுமா?
கடவுள் வாசலைக்காக்கும் வேலையில் உள்ளவர் கள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை உண்டு என்று சட்டம் செய்தால், அதனைத் தடுத்து நிறுத்திட உச்சநீதிமன்றம் வரை சென்று கொண்டு தானே இருக்கிறார்கள்?
கேட்டால் இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் என்று கூறுவார்கள். அந்த அர்த்தமுள்ள இந்து மதத்தின் ஆணிவேரைப் பொசுக்கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக!
4.11. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக