இந்தியாவின் தலைநகரமான டில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வரும் அக்டோபரில் தொடங்கப்பட உள்ளன. இதற்காக மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகள் தடபுடலாக நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன.
இதன் தொடக்க விழாவிற்கு மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகள்!
பிரபலமான சினிமா நடிகர், நடிகைகள் அழைக்கப்படுகின்றனர்.
வரட்டும், தாராளமாக கலைத்துறையினர் வரட்டும் மகிழ்ச்சிதான். இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய விழாவில் அவர்கள் கலந்து கொள்வது அவர்களின் கடமையாகவும் இருக்கலாம். மிகப் பெரிய விழாவில் தங்களுக்கும் அழைப்பு கிடைத்ததைப் பெருமையாகக் கருதிக் கலந்து கொள்ளவும் செய்யலாம்; தங்களது நாட்டுப் பற்றைக் கூட இதன் மூலம் வெளிப்படுத்தவும்
செய்யலாம்.
ஆனால் நிலைமை இங்கு தலை கீழாக அல்லவா இருக்கிறது . இந்தத் தொடக்க விழாவில் நடிகர், நடிகையர்கள் கலந்து கொள்ள அரசே பணம் கொடுக்குமாம்.
2006 இல்
மெல்போர்னில் (ஆஸ்திரேலியா) நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் நடிகை அய்ஸ்வர்யா ராய் கலந்து கொண்டதற்கு ரூபாய் 5 கோடி அளிக்கப்பட்டது. நடிகர் சயீப் அலி கானுக்கு ரூ.
75 லட்சம் அளிக்கப்பட்டது. இவ்வளவுக்கும் இவர்கள் அந்த விழாவில் கலந்து கொண்ட நேரம் வெறும் நான்கே நான்கு நிமிடங்கள்தானாம். அதே போல (தொகை எவ்வளவு என்று அறிவிக்கப்படவில்லை) டில்லியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகையர்களுக்கும் பெரும் தொகை அளிக்கப்படுமாம்.
இதைவிட ஜனநாயக விரோதம் மக்கள் நல விரோதம் வேறு ஒன்று இருக்க முடியாது. நடிகர்கள், நடிகைகள் என்றால் அவர்களுக்குத் தனியாகக்
கொம்பு முளைத்திருக்கிறதா? அரசு பணம் என்றால் மக்கள் பணம். அதை அனாவசியமாக வாரிக்கொடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.
சினிமாக்காரர்கள் தகுதிக்கு மேல் தங்களை நினைத்துக் கொள்வதற்கு இது போன்ற செயல்பாடுகளே காரணம். அவர்களும் கூட மற்றவர்களைப் போல ஒரு குடிமகன்(ள்)தான்! அதற்கு மேல் ஒன்றும் கிடையாது தேவையும் இல்லை. கட்டணம் கட்டி, யாரையும் அழைத்து இந்தியா தன் தகுதியைக் குறைத்துக் கொள்ள வேண்டுமா?
4.7. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக