தன் திறமையிலும், உழைப்பிலும், நேர்மையிலும், தன்னம்பிக்கையிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் ஜோதிடர்களை நாடுகிறார்கள். தம் பெயர்களின் எழுத்துக்களைக் கூட்டிக் கொள்கிறார்கள், குறைத்துக் கொள்கிறார்கள், இடையில் இணைத்துக் கொள்கிறார்கள்.
குருட்டுப் பூனை விட்டத்தில் பாயாதா? கூரையைப் பிய்த்துக் கொண்டு தெய்வம் கொட்டாதா என்று மூடத்தனமான நப்பாசையில் மிதந்து தெப்பம் விடுகிறார்கள்.
மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சராக இருந்தவர் அசோக் சவாண். ஆதர்ஷ் வீட்டு வசதி குடியிருப்பு முறை கேட்டில் சிக்கி, முதல் அமைச்சர் பதவியைப் பறி கொடுத்து விட்டார்.
அந்தோ, பரிதாபம்! கடந்த மாதம்தான் தன் பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காக ஜோதிடரை நாடி, அவரின் யோசனைப்படி தம் பெயரின் இடையில் ராவ் என்பதைத் திணித்து அசோக் ராவ் சவான் என்று மாற்றிக் கொண்டார். (தினமணி 10.11. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3, பக்கம் 1)
ஒரு மாதத்திற்குள் அவர் முதல் அமைச்சர் பதவி பறிபோனதுதான் மிச்சம். ஊழல் செய்தற்கு முன் பெயர் ராசி பார்த்து மாற்றம் செய்து கொள்கிறார்கள் என்பது தான் இந்த இடத்தில் அழுத்தமாகக் கோடிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டியதாகும்.
மும்பை வரை போவானேன். நம் ஊர் ஜெயலலிதா என்ன செய்தார்? தம் பெயரில் ஆங்கிலத்தில் கடைசியில் இன்னொரு
ய யை நீட்டிக் கொண்டார். பெயரைத்தான் நீட்டிக்க முடிந்ததே தவிர,
பதவியை நீட்டித்துக் கொள்ள முடியவில்லையே!
லால்பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு இந்திரா காந்தியும், மொரார்ஜி தேசாயும் களத்தில் நின்றனர். காமராசர் இந்திரா காந்தியைப் பிரதமராக்குவதில் வெற்றி பெற்றார்.
இந்திராவைவிட மூத்த, அதிக தியாகம் செய்த மொரார்ஜி தேசாயை காமராசர் ஆதரிக்காததற்குக் காரணம் என்னவென்று கேட்டபொழுது பல காரணங்களைச் சொல்லலாம். இந்த ஆள் எதற்கெடுத்தாலும் ஜோசியம் பார்க்கிறாரு. ஜோசியம் பார்த்தா நாட்டை ஆள முடியும்? என்று காமராசர் கூறினார். (ஆலடி அரு ணாவின் காமராசர்- ஒரு வழிகாட்டி நூல். பக்கம் 304).
ஜாதகப்படி மு.
வரதராசனார் அவர்களுக்கு திருவேங்கடம் என்றுதான் பெயர் வைத்தனர். அதை மாற்றிக் கொண்டார் - அதனால் என்ன கெட்டுப் போய்விட்டார்?
மும்பையைச் சேர்ந்த ஜோதிடர் பெஜன் தருவாலாரும், ராஜகுமார் சர்மாவும், வாலாஷா என்பவரும், ஜோதிடத்தின் எல்லா அம்சங்களையும் ஆய்வு செய்து, பா.ஜ.க. தலைவரான அத்வானிதான் 15 ஆவது மக்களைவைத் தேர்தலில் ஜெயித்து முதல் இரண்டாண்டுகள் பிரதமராக இருப்பார் என்று கூறினர். அடுத்த பிரதமர் ஒரு பெண்தான் என்று மூக்கைச் சொறிந்துவிட்டனர் வேறு சில ஜோதிடர்கள். ஜெயலலிதாவும் கழுத்து வரை ஆசையைத் தேக்கி வைத்துக் கொண்டு தயாராகத் தான் இருந்தார். நடந்தது என்ன என்பது யாருக்குத் தான் தெரியாது.
ஜோதிடத்தை நம்பி நேபாளத்தில் ஓர் அரச குடும்பமே அழிந்தது - மீதிப் பேர் ஆட்சியையும் இழந்து நடுவீதியில் நிற்கிறார்கள். இதற்குப் பிறகும் ஜோதிடமா?
ஊருக்கெல்லாம் ஜோதிடம் சொன்ன தேவபிரசன்னம் புகழ் பணிக்கர் இப்பொழுது நீதிமன்றத்தில் கைகட்டி நிற்கிறார்.
தடை செய் ஜோதிடத்தை!
13.11.
2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக