திராவிட நாட்டின் தமிழ்ப் பகுதியில் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி.
(300 முதல் 700 வரை) 7-ஆவது நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர்களைப் பற்றிப் பலரும் படித்திருக்க முடியும். வடமொழியும், நாலு வேதமும் இந்நாட்டில் ஒழுங்காக வளர்க்கப்படுவதற்குத் துணை புரிந்தார்கள் என்பதன்றி, வடநாட்டிலிருந்து கூட்டங் கூட்டமாகப் பார்ப்பனர்களை அழைப்பித்துத் தமிழகத்தில் பலவிடங்களில் குடியேற்றி, பிரம்மகானம், தேவகானம் முதலிய பெயரால் பல கிராமங்களை முற்றூற்றுகளாக (வரியின்றி) வழங்கினராதலின், தமிழகத்தின் பலபகுதியும் இன்று சதுர்வேதி மங்கலங்களாகக் காட்சியளிக்கின்றன.
திராவிடத்தில், தமிழர் வரலாறின்றித் தெலுங்கர் வரலாற்றைக் கண்டாலும் இது விளங்கும். இங்கு நான்காவது நூற்றாண்டில் நுழைந்த கூட்டம், ஆந்திர நாட்டில் 2-ஆம் நூற்றாண்டில் நுழைந்தது. ஆந்திர நாட்டை ஆண்ட இச்சுவாகு சாதனவாவர் என்ற இரு பரம்பரையினரும் தங்களை உயர்ந்த சாதியராக்கிக்கொள்ள, ஆரியத்திடை அடைக்கலம் புகுந்துள்ளனர். இச்சுவாகு வழியினரான மகாசாந்த மூலர், கி.பி. 200 முதல்-218வரை ஆண்டபோது, பார்ப்பனர்களை வடநாட்டிலிருந்து அழைத்து, தானங்கள் பலபுரிந்து, யாகங்கள் பல நடத்தித் திராவிடத்தை ஆரியக் களமாக மாற்றினார். [P. 44 Early
Dynasties of Andhra Desa. By B. V. Krishna Row M.A.B.L.,]
மகாசாந்த மூலரின் மகன் வீரபுருடதத்தன் என்பவன், (கி.பி.
218-239) தன் காலத்தில் ஆரிய நுழைவால் தன் நாட்டிற்கு வந்த கேட்டினை உணர்ந்து அதனை நீக்க முற்பட்டான். அவன் புத்தமதத்தைத் தழுவியதன்றித், தன் தலைநகரில் அமைத்த புத்த விக்ரகங்களின் பார்வைச் சுவரில், பார்ப்பனீயத்தை வெறுப்பதைக் காட்ட ஓர் லிங்க உருவத்தை உதைத்துத் தாழ்த்துவதுபோல் லிங்கத்தின் உச்சியில் நம் குதிகாலை வைத்துக்கொண்டுள்ள நிலையில் பல கற்பதுமைகள்
செதுக்கிப் பதிய வைத்திருந்தவை இன்றும் காணப்படுகின்றன. அவற்றில் பெரிய இரண்டு சிலா உருவங்கள் மேற்கண்ட நூலில் படமெடுத்தும் காட்டப்பட்டிருக்கின்றன.
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக