எந்த ஒரு பார்ப்பனர் இதழ் நடத்தினாலும், அதில் கண்டிப்பாக சங்கராச்சாரியாரின் ஒரு பொன்மொழி இடம்பெற்றிருக்கும். புரிகிறதோ இல்லையோ சடங்காச்சாரமாக பெரிய வாளி(லி)ன் படம் போட்டு 10 வரிகளாவது நிரப்பிவிடவேண்டும். அப்படி செய்யாவிட்டால், ஏதோ பெரும்பாவம் செய்துவிட்டதாக அவர்களைப் பொறுத்தவரை அப்படி ஒரு நினைப்பு பிழைப்பு.
அதேபோல, இந்த வார கல்கியில் (2.8.2009) ஒரு அருள்வாக்கு:
ஞானிக்கு ஆத்ம ஸ்வரூபத்தைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லை. ஒரே பரமாத்மாதான் இத்தனையாகவும் தெரிகிறது என்று கண்டுகொண்டவன் அவன். வெளியிலே தெரிகிற தோற்றத்தை மாயை என்று தள்ளிவிட்டு, எல்லாவற்றுக்கும் உள்ளேயிருக்கிற பரமாத்ம ஸ்வரூபத்தை மட்டுமே அனுபவிக்கிறவன் அவன்.
வெளிப் பார்வைக்குத் தெரிகிற உலகம் மாயை என்று ஆகிவிட்டதால், இந்த மாயா லோகத்தில் ஞானிக்குக் காரியம் எதுவுமே இல்லை. பார்க்கிறவன், பார்க்கப்படுகிற வஸ்து, பார்வை எல்லாமே ஒன்றாக அடங்கிப் போனவனுக்குக் காரியம் எப்படி இருக்க முடியும்? அவன் பிரம்மமாகவே இருக்கிறான் என்று உபநிஷத்து சொல்கிறது.
பிரம்மத்துக்குக் காரியம் இல்லை. ஆனால், இந்த மாயை உலகத்தில் அகப்பட்டுக் கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள் ஈசுவரன் என்று ஒருவனைப் பூஜை செய்து தங்கள் காரியங்களை நடத்தித் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக நல்ல மனஸோடு பிரார்த்தித்தால் ஈசுவரனும் அவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈசுவரன் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்று தெரிகிறது. - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள்
யாருக்கும் புரியாத வகையில் வார்த்தைகளை ஜாலமாக அடுக்கினால் அதற்குப் பெயர் அருள்வாக்கு - தெய்வவாக்கு அவாள் அகராதியில்.
ஒன்று மட்டும் புரிய வருகிறது. இந்த வுலகம் மாயை; இந்த நிலையில் இந்த லோகத்தில் ஞானிக்குக் காரியம் எதுவுமே இல்லை என்று சொல்ல வருகிறார் பெரியவாள்.
சரி... இந்தக் கருத்தை ஞானியாகிய அவரைப் பொருத்து எந்த வகையில் சரி? மாயையான இந்த லோகத்தில் இந்த ஞானி எந்தக் காரியத்தையும் செய்யவில்லையா?
பிராமணப் பெண்களுக்கான கன்னிகாதானம் டிரஸ்டை ஏற்படுத்தவில்லையா? கம்யூனல் ஜி.ஓ.வைப்பற்றிப் பேசவில்லையா? ரிட்டயர்டு ஆன பிராமணர்களுக்கு அறிவுரை கூறி பிராமணர்களுக்கு உதவி செய்யக் கூறிடவில்லையா?
நாஸ்திகர்களுக்கு மருத்துவ உதவி செய்யக்கூடாது என்று தனது கடல் போன்ற பரந்து விரிந்த உள்ளத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டவில்லையா?
தீண்டாமை க்ஷேமகரமானது என்று நியாய விரோதமாக, சட்ட விரோதமாக அருளுபதேசம் செய்யவில்லையா?
பாலக்கோட்டில் காந்தியாரே நேரில் வந்து கேட்டுக்கொண்டும் தீண்டாமை சாஸ்திர சம்பந்தமானது. அதற்கு எதிராகத் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று கறாராகக் கூறவில்லையா?
இந்த லட்சணத்தில் இந்த லோகம் மாயை. இதில் செய்யவேண்டியது ஒன்றும் இல்லை என்று இவர் சொல்வாராம், அதைக் கல்கி வெளியிடுமாம். அதையும் காசு கொடுத்து வாங்கி இந்தச் சூத்திர மக்களும் படித்துக் கிழிக்க வேண்டுமாம்! பலே! பலே!
28.7.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக