திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழவேண்டி ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற, ஒரு கோடியே எட்டு லட்சம் பெருமாள் நாம ஜெப வேள்வி பிரம்மாண்டமாக நடைபெற்றது. மக்கள் நோயின்றி வாழவும், குடும்பக் கஷ்டங்கள் அகன்றிடவும்தான் இந்த நாம வழிபாடாம்.
மக்களின் வறுமையை, நோய் நொடிகளை ஒழித்துக்கட்ட, இவ்வளவு எளிதான வழியிருக்கும்போது முட்டாள்தனமாக அரசாங்கம் என்னும் ஓர் அமைப்பை ஏன் இருக்கவேண்டும்? அரசாங்கம் என்று இருப்பதே அசல் நாத்திகத்தனம்தான் என்றுதானே இவர்கள் சொல்ல வருகிறார்கள்!
வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக்கொள்ளுங்கள் என்று பொதுவாக ஒரு பழமொழி உண்டு.
திருப்பதி பெருமாள் நாட்டு மக்களின் கஷ்டங்களை, நோய் நொடிகளைத் தீர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும்; அவர் குடியிருக்கும் திருப்பதி கோயிலில் நடைபெறும் கொள்ளையை முதலில் தடுக்கட்டுமே!
திருப்பதி ஏழுமலையான் உருவம் பொறித்த தங்க டாலர் மோசடி புகழ் சேஷாத்திரி இன்னும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (அவருக்குப் பெயரே டாலர் சேஷாத்திரியாம், எப்படியிருக்கிறது?) ராஜநடை போட்டுத் துள்ளித் திரிகிறாரே, அவரை என்ன செய்தான் இந்த ஏழுமலையான்?
திருப்பதியில் நகைகள் கொள்ளை என்று சிரிப்பாய் சிரித்து நீதிமன்றம் வரை சென்று, திருப்பதி சொத்துக் கணக்கை, நகை கையிருப்பை உடனடியாக நீதிமன்றத்திற்குத் தாக்கல் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாரே இதுதான் ஏழுமலையானின் சக்தியோ!
இந்த யோக்கியதையில் உள்ள ஏழுமலையானின் நாமத்தை ஒரு கோடி முறை உச்சரித்தால் மக்கள் வறுமை நீங்குமாம்; நோய் நொடிகள் பஞ்சாய்ப் பறந்துபோகுமாம்!
ஹி.... ஹி....
வாயால் சிரிக்க முடிகிறதா?
21.9.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி -
2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக