மிகப் பழங்காலத்திலேயே தமிழ்ச் சொற்கள் வடமொழியிலும் வடமொழிச் சொற்கள்
தமிழிலும் கலந்திருக்கின்றன என்ற உண்மையை ஆய்வாளர்கள் இந்த நூற்றாண்டில்
தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். சங்கத் தமிழில் வடமொழிக் கலப்பு மிக
அருகிய நிலையிலேயே காணப்படுகிறது. வடமொழிச் சொற்களைத் தமிழில் ஆளும்போது
அவை தமிழ் இயல்புக்கேற்பத் திகிலடைய வேண்டும் என்பதில் தமிழுலகம்
கருத்தாகவே இருந்திருக்கிறது.
நாளடைவில் வடமொழிச் சொற்கள் தமிழில் மிகுதியாகக் கலக்கத் தொடங்கின.
தமிழ்ச் சொற்களும் வடமொழியில் கலந்துள்ளன என்ற உண்மை மறையத் தொடங்கியது.
வடமொழி எந்த மொழியிலிருந்தும் கடன் கொள்ளாது என்றும் ஒரு தவறான கருத்து
உருவானது. களப்பிரர் காலத்தில் பாலியும் பாகதமும் தமிழகத்தில் செல்வாக்குப்
பெறத் தொடங்கின. பல்லவர் காலத்தில் வடமொழிக் கல்வியும் வடமொழிச்
செல்வாக்கும் வளர்ந்தன. சமயங்களின் செல்வாக்கு நிலைகள் அடிக்கடி
மாறியபோதும், சமற்கிருதச் செல்வாக்கு மட்டும் தொடர்ந்து வளர்ந்து வந்தது.
கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு வடமொழிச் செல்வாக்கு மேலும்
வலுப்பெற்று வளர்ந்து மணிப்பிரவாள நடை என்று ஒரு புதிய நடையையே உருவாக்கி
விட்டது. தமிழில் சரிக்குச் சரியாகப் பாதிப் பங்கு வடசொற்கள் கலந்த நடையை
மணிப்பிரவாள நடை என்பர். அருணகிரியாரின் திருப்புகழ், திவ்வியப் பிரபந்த
உரைகள் முதலானவற்றை மணிப்பிரவாள நடைக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி ஒப்பிலக்கணம் என்ற நூலை உருவாக்கிய
பிறகு தமிழின் தனிச் சிறப்புகள் வெளிப்பட்டு ஒரு புதிய சூழல் உருவாயிற்று.
பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை, பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகளார்
முதலானோரின் தொண்டினால் படிப்படியாக வடமொழிக் கலப்பு குறைந்து தமிழ்
புதுப்பொலிவு பெற்றது என்றால் மிகையாகாது.
வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்த முறையை மேலும் சற்று விரிவாக எண்ணிப் பார்ப்பது தகும்.
வடமொழிச் செல்வாக்கு சமயங்களையும் அரசர்களையும் தன்னுள் அகப்படுத்திய
பிறகு சமுதாய வாழ்விலும் ஊடுருவிப் பரவியது. சங்க காலத் தமிழரசர்களின்
பெயர்களையும், பிற்காலச் சோழ பாண்டிய வேந்தர்களின் பெயர்களையும்
ஒப்பிட்டுப் பார்த்தால் வடமொழிச் செல்வாக்கின் வளர்ச்சி தெளிவாகப்
புலப்படும்.
ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதிராஜன், குலோத்துங்கன், விக்ரமன்,
ராஜகேசரி, பரகேசரி முதலான பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ்ப் பெயராக இல்லை.
மாறவர்மன், சடையவர்மன், குலசேகரன் முதலான பெயர்களும் வடமொழிச் செல்வாக்கின்
உச்சநிலையை நமக்கு உணர்த்துகின்றன. அரசர்களின் பெயர்களே இப்படி மாறிவிட்ட
பிறகு அவர்கள் வழங்கும் பட்டங்களும் சிறப்புப் பெயர்களும் எப்படி
இருக்கும்? அவையும் வடமொழி மயமாயின.
தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்கள், கோயிலின் பெயர்கள், தெய்வத்தின்
பெயர்கள், மக்களின் பெயர்கள்-இப்படி எல்லாப் பெயர்களும் வடமொழி மயமாயின.
வடமொழிச் செல்வாக்கினால் மயிலாடுதுறை மாயூரமாயிற்று; திருமுதுகுன்றம்
விருத்தாசலமாயிற்று; மரைக்காடு மறைக்காடாகி அது திருமறைக்காடாகிப் பின்
வேதாரண்யமாயிற்று.
தியாகேசர், நடராஜர், வைத்தீஸ்வரன், வெங்கடேஸ்வரன், லோகாம்பாள்,
அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரி, பிரம்மபுரீஸ்வரர், பிரம்மவித்யாநாயகி,
ஆபத்சகாயேஸ்வரர், கோகிலேஸ்வரர், சொர்ணபுரீஸ்வரர், சகல புவனேஸ்வரர்,
அருணாசலேஸ்வரர் என்று இவ்வாறு தெய்வப் பெயர்கள் வடமொழி மயமாக மாறின.
ஊர்ப் பெயர்களும் தெய்வப் பெயர்களும் வடமொழி மயமாக்கப்பட்ட நிலையில்
வடமொழிச் செல்வாக்கு இங்கே வேரூன்றத் தொடங்குகிறது. படிப்படியாக மக்களுக்கு
இடும் பெயர்களும் வடமொழி மயமாகின்றன. லக்ஷ்மி, ஜானகி, ஷண்முகம், பார்வதி,
சரஸ்வதி, ஸ்ரீதேவி, ஸ்ரீதர், சகஸ்ரநாமம், புருஷோத்தமன், புஷ்பவல்லி என்று
இவ்வாறு மக்களின் பெயர்களிலும் வடமொழிச் செல்வாக்கு பரவியது.
வடமொழிச் சொற்கள் தமிழில் மிகுதியாகப் பரவியதன் விளைவாக நல்ல தமிழ்ச்
சொற்களும் அன்றாட வழக்கிலிருந்து மறையத் தொடங்கின. மக்கள் வாழ்க்கையில்
நடைபெறும் திருமணம் முதலான சடங்குகளிலும் வடமொழி புகுந்து செல்வாக்கு
செலுத்தும் நிலை உருவாயிற்று.
விவாஹம், கர்னபூஷணம், கிரஹப்பிரவேசம், புஷ்பவதியாதல், கன்னிகாதானம்,
சஷ்டியப்தபூர்த்தி, ஸ்ரார்த்தம், தீர்த்தயாத்திரை முதலான சொற்கள்
வாழ்க்கைச் சடங்குகளில் புகுத்தப்பட்டன.
அன்றாட வாழ்வில் பயன்படும் பேச்சுவழக்கில் கூட வடமொழிச் செல்வாக்குப்
பரவியதும், சௌகரியம், சேக்ஷமம், ஜலம், ஸ்நானம், யஜமான், புருஷன், உபயோகம்,
பிரயோஜனம், யோஜனை, விசேஷம், விசுவாசம், நமஸ்காரம், லக்ஷணம், அவலக்ஷணம்
இப்படி ஏராளமான வடமொழிச் சொற்கள் வந்து குவிந்தன.
இப்படியெல்லாம் தமிழ்ச் சமுதாய வாழ்வில் எல்லா நிலையிலும் வடமொழிச்
செல்வாக்கு ஓங்கிய நிலையில்தான் இங்கே வடமொழி மேலாண்மைக்கு எதிர்ப்பு
உருவாயிற்று. நாம் முன்பே குறிப்பிட்டது போல இருபதாம் நூற்றாண்டில்தான்
வடமொழி மேலாண்மை முறியடிக்கப்பட்டு தமிழ் மறுமலர்ச்சிக்கு உரிய சூழல்
உருவாகியுள்ளது.
அரசியல், சமுதாயம், சமயம், மொழி இலக்கியம் போன்ற எல்லா எல்லைகளிலும்
வடமொழிச் செல்வாக்கு ஓங்கியது. இதன் விளைவாகத் தமிழ்ச் சமுதாயமும்
தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் ஒடுக்கப்பட்டு இவற்றின் சீரும் சிறப்பும்
புறக்கணிக்கப்பட்டு மறைக்கப்பட்டன. இந்த நிலை எல்லை மீறிப் போனபோது
தமிழகத்தில் வடமொழி மேலாண்மை கடுமையான எதிர்ப்புக்குள்ளாயிற்று.
அரசியல், சமுதாயம் முதலான எல்லைகளில் தந்தை பெரியாரும் பேரறிஞர்
அண்ணாவும் ஏனைய திராவிட இயக்கத்தோழர்களும் வடமொழி மேலாண்மையை
முறியடித்தார்கள் சமயம், மொழி, இலக்கியம் முதலான எல்லைகளில் வள்ளலார்,
மறைமலையடிகள், ச. சோ. பாரதியார் முதலான பெருமக்கள் வடமொழி மேலாண்மையை
எதிர்த்துப் போராடிப் பெரு வெற்றிபெற்றார்கள்.
வடமொழியில் அறிவு பெறுவது என்பது வேறு; வடமொழியின் மேலாண்மையை ஏற்றுக்
கொள்வது என்பது வேறு. மறைமலையடிகளார் வடமொழியில் அறிவுபெற்றவர்; ஆனால் அவர்
வடமொழி மேலாண்மையை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து நின்றவர்.
வடமொழி மேலாண்மையை எதிர்ப்பது என்பது கடந்த நூற்றாண்டில் இங்கே வரலாற்று
அடிப்படையில் உருவாகிவிட்ட ஒரு கட்டாய நிகழ்வு. தமிழ் வளர்ச்சிக்கு உரிய
பல்வேறு ஆக்கப் பணிகளில் முழு மூச்சாக நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய
கடமை இப்போது நம்முன் நிற்கிறது.
(நூல்
- சமற்கிருத ஆதிக்கம்)
பதிப்பாசிரியர் : கி.வீரமணி
பதிப்பாசிரியர் : கி.வீரமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக