வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கிரிக்கெட்(டு)




விளையாட்டு என்பது வீரத்திற்கும், விவேகத்திற்கும், திறமைக்கும் கட்டியம் கூறக் கூடியதாகும். பாழாய்ப் போன இந்த மூடநம்பிக்கைகள் இதற்குள்ளும் மோசமான நச்சுக் கிருமிகளாக ஊருடுவி அதன் வீரியத்தையே குலைத்து விடுகின்றன. இந்த உலக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்ட காலம் உயர்நிலைப்பள்ளி, மேனிலைப் பள்ளிகளுக்கான அரசு இறுதித் தேர்வுகள் நடைபெறக் கூடிய காலம்.

இந்தியாவில் இந்தப் போட்டியை நடத்தியவர்களுக்கு இந்த அடிப்படை உண்மை தெரியாதா? கொஞ்சமும் பொறுப்புணர்ச்சி இல்லாமல், பணத்துக்காகவும் புகழுக்காகவும் நடத்திய கொடுமையை என்னவென்று சொல்லுவது!

எது எதற்கெல்லாமோ கண்டனக் கணைகளை ஏவும் ஊடகங்கள் இந்த முக்கியப் பிரச்சினையில் மூக்கைக்கூடச் சிந்தவில்லையே!

கெட்டுப் போகப் போவது சூத்திர, பஞ்சமப் பசங்கள் தானே - பார்ப்பார வீட்டுப் பிள்ளைகளா கெட்டுப் போகப் போவது என்ற தாராள எண்ணம்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது பெரும்பாலும் பார்ப்பான் வீட்டு அடுப்பங்கரைச் சமாச்சாரமாகி விட்டது. இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று யாகங்களாம், பிரார்த்தனைகளாம்.

அதேபோல இறுதிப் போட்டியில் இலங்கை கோப்பையை வெல்ல வேண்டும் என்று இலங்கை இடிஅமீன் ராஜபக்சே திருப்பதிக்குக் குடும்பத்துடன் சென்று ஏழுமலையானை வழிபட்டாராம். ஓர் இரவு முழுவதும் திருப்பதியிலேயே தங்கி, அதிகாலை மூன்று மணிக்குக் கடவுளை எழுப்பிச் சிறப்புப் பிரார்த்தனை நடத்தியுள்ளார். ஆனாலும் பிள்ளை பிழைக்கவில்லை; இலங்கை தோற்றுவிட்டது.

வெற்றி பெற்றவுடன் இந்திய அணியின் தலைவர் எம்.எஸ். தோனி மொட்டை அடித்துக் கொண்டு நேர்த்திக் கடன் கழித்தாராம். ஏதோ அவர் கும்பிடும் கடவுள்தான் மட்டையைப் பிடித்து இரண்டாகக் கிழித்ததாக அவருக்கு நினைப்புப் போலும்!

வெற்றியின் பெருமையை அனுபவிக்கும் தன்னம்பிக்கையை விளையாட்டுப் போட்டியில் கூடப் பெற முடியாத அளவுக்கு கடவுள் பக்தி கண்களைக் கட்டிப் போட்டு விட்டதே!

அணியில் இடம் பெற்ற 14 பேர்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசாம்! கிரிக்கெட்டில் காட்டும் இந்த ஆர்வத்தில் பத்தில் ஒரு பகுதியை நம் நாட்டு ஹாக்கிக்கோ, கால் பந்துக்கோ, சடுகுடு என்னும் உண்மைத் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டுக்கோ காட்டியிருந்தால் இந்தியாவுக்கு எவ்வளவோ கீர்த்தி கிடைத்திருக்குமே! என்ன செய்வது! இவை மூன்றும் பிர்ம்மாவின் கால்களில் பிறந்தவர்களின் விளையாட்டாகப் போய் விட்டதே!

இதில் இன்னொரு கொடுமை! ஆட்ட நாயகனும் இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமான அணியின் தலைவருமாகிய தோனிக்குக் கொடுக்க வேண்டிய பெருமையை மாற்றி டெண்டுல்கருக்குக் கொடுத்தது எப்படி? கோப்பையை வென்ற அணியின் தலைவரைத் தானே பாராட்ட வேண்டும்? ஆனால் மும்பையில் என்ன நடந்தது -வெறும் 18 ஓட்டங்களையே எடுத்து வெளியேறிய சச்சின் டெண்டுல்கரைத் தலையில் தூக்கிக் கொண்டல்லவா ஆடினார்கள்! வெற்றி நாயகனான தோனி என்ன ஆனார் என்றே தெரியவில்லையே! எதிலும் பிராமண சூத்திர பேதம்தானா?



4.4.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக