வியாழன், 3 ஆகஸ்ட், 2017

அட, இந்திரனே!


பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய பிரணாப் கடந்த ஆண்டு நாட்டின் ஒரு பகுதியில் வறட்சியால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு பயிர்களை நாசப்படுத்தியது. எனவே, இந்த ஆண்டு நாட்டில் தேவையான அளவு மழை பெய்ய வேண்டுமென்று மழைக் கடவுளான இந்திரனை வேண்டிக் கொள்கிறேன். அப்போதுதான் இந்த ஆண்டில் சிறப்பான பொருளாதார வளர்ச்சி இருக்கும். மழையும் பொருளாதாரத்தைப் பாதிக்கும் காரணியாக உள்ளது என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோதும் குறிப்பிட்டார்

(ஆதாரம் : தினமணி, 27.2.2010)

நடப்பு ஆண்டு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோதும் (28.2.2011) அதே கதைதான். கூடுதலாக லட்சுமியையும் அழைத்துக் கொண்டார். இந்திரன் ஆசி வழங்க வேண்டும். சரியான நேரத்தில் மழை பொழிய, அவர் உதவ வேண்டும். அதேபோல், கடவுள் லட்சுமியை வணங்குகிறேன். அபாயமான சூழலில் இம்மாதிரி உத்திகள் பலன் தரும் (தினமலர் 1.3.2011) என்று கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சர் இப்படி மதக் கடவுள்களை அழைத்துக் கொள்கிறாரே, வணங்குகிறாரே அவற்றால் காதொடிந்த ஊசி முனைக்காவது பலன் உண்டா?

படித்த மக்களிடத்தில் கூட இத்தகைய மூடநம்பிக்கைகள் குடிகொண்டு இருக்குமாயின் மற்றவர்களைப்பற்றி என்ன சொல்ல? அறிவுப் பூர்வமாக சிந்தனையைச் செலுத்த வேண்டிய ஒரு இடத்தில்கூட மத நம்பிக்கையைத் திணிப்பது சரியானதுதானா? தங்களின் பொருளாதாரத் தோல்வியை மக்களின் மதநம்பிக்கை என்னும் போர்வையின் பின்பக்கம் நின்று மறைத்துக் கொள்ளலாம் என்கிற யுக்தியாகக்கூட இருக்கலாமோ!

மழைக்குக் காரணம் இந்திரன்தான் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பேரனோ, பேத்தியோ பரீட்சைத்தாளில் எழுதினால் மதிப்பெண் சுழிதான் கிடைக்கும்.

நேரு போன்ற பகுத்தறிவுவாதிகள் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால், பிரணாப்பை வம்புக்கு இழுத்திருப்பார்கள். மும்பையில் மத்திய ரயில்வேயில் பணிபுரிந்த சுவாதிசிட்னிஸ், சுஜாதா ஷிண்டே ஆகியோர் பதவி உயர்வுக்காக எழுத்துத் தேர்வு எழுதினர். நன்றாக எழுதியும் தோல்வி அடைந்தனர் - என்ன காரணம் தெரியுமா? விடைத்தாளில் ஸ்ரீ சுவாமி சாம்ரத் மற்றும் ஓம் என எழுதியிருந்தனர். விடைத்தாளில் மதத்தைக் கலந்ததால் அந்த விடைத்தாளை ரத்து செய்து விட்டனர் தினமலர் 8.7.2008

இதே கண்ணோட்டம் இந்திரனையும், லட்சுமியையும் பட்ஜெட்டில் குறிப்பிடும் மத்திய நிதி அமைச்சருக்கும் பொருந்தும் தானே? மழைக் கடவுள் இந்திரன் இருப்பதாகக் கூறப்படும் இந்நாட்டில்தான் வறட்சி வணக்கம் போட்டு வரவேற்கிறது. செல்வக் கடவுள் லட்சுமி என்று கதைக்கும் இந்நாட்டில் தான் வறுமைக் கோடுகள் வஸ்தாத் செய்கின்றன! ஆகா இதுவல்லவோ பாரதப் புண்ணியத் திருநாடு!

3.3.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...