இன்று உலகப் பத்திரிகை நாள். பத்திரிகை மக்களின் கண்களுக்குக் காட்சியாகவும், கருத்துக்குத் தீனியாகவும் இருக்க வேண்டியவை.
ஆனால் நம் நாட்டுப் பத்திரிகைகள் எந்தத் தரத்தைச் சேர்ந்தவை? நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அதில் என்ன சந்தேகம்?
வெகு காலத்திற்கு முன்புகூடப் போக வேண்டாம். மகர தீபம் என்பது உண்மையல்ல; செயற்கையானதுதான்; தேவசம்போர்டு ஏற்பாடு செய்தபடி அரசு ஊழியர்கள்தான் பொன்னம்பலமேட்டுப் பகுதியில் தீபம் ஏற்றுகிறார்கள் என்று தேவசம் போர்டே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது. அதே நேரத்தில் மகரஜோதி என்பது இயற்கையானது என்றும் கூறி இருக்கிறது.
பொதுவாக இந்த இரண்டு தகவல்களும் பல ஏடுகளில் வெளிவந்திருக்க, தினமலர் (26-4-2011) எப்படி தலைப்புப் போடுகிறது தெரியுமா?
இயற்கையானது மகரஜோதி
என்று தலைப்புப் போடுகிறது - சரி, போட்டுத் தொலையட்டும்.
மகரதீபம் செயற்கையானது தான்; மனிதர்களால் ஏற்றப்படுவதுதான்; அதற்கு தெய்வீக சக்தியிருக்கிறது என்று தேவசம்போர்டு ஒரு போதும் சொன்னதில்லை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிகாரப் பூர்வமாக கூறப்பட்டுள்ளதே - அது குறித்து ஒரு வரி இல்லையே ஏன்? இருட்டடிப்பு ஏன்?
நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்று தந்தை பெரியார் கூறியதன் நுண்பொருள் இப்பொழுது விளங்கி இருக்குமே!
விஞ்ஞானத்தை வளர்க்க வேண்டிய ஊடகங்கள் இன்னும் ராசி பலன்களை வெளியிட்டு, மக்களை மடமைக் குழியில் தள்ளி மண்போட்டு மூடுகிறதே. இதைவிட மனிதர்களுக்குச் செய்யக் கூடிய பெருங்கேடு ஒன்று இருக்க முடியுமா?
அதேநேரத்தில் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப் பட்ட ஏடுகளின் நேர்த்தியும், நேர்மையும் எத்தகையது!
குடிஅரசு இதழின் பக்கங்களை 16 ஆகக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடுவது பாதிக்கப்படக் கூடாதே என்பதற்காக, விளம்பரங்களைப் பாதி அளவாகக் குறைத்துக் கொண்டு விளம்பரம் தந்தவர்களுக்குப் பெரியார் வருத்தம் தெரிவித்தார்.
(பெரியார் ஈ.வெ.ரா. - ஆறு. அழகப்பன் - சாகித்திய அகாதெமி வெளியீடு, பக்கம் 60)
பத்திரிகை உலகில் இந்த நேர்மையைக் கடைப் பிடித்தவர் பெரியார் அல்லாமல் வேறு யார்? குடிஅரசு, விடுதலை, புரட்சி, பகுத்தறிவு, உண்மை இவை தந்தை பெரியார் சூட்டிய தனித் தமிழ்ப் பெயர்கள். தமிழுக்குப் பெரியார் என்ன செய்தார் என்று வினவும் அரைகுறைகளுக்கும் இந்தப் பெயர்களே பதில்!
3.5.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக