அறிவியல் உலகத்தில் மகத்தான கண்டுபிடிப்பு என்பது - விஞ்ஞானி சார்லஸ்
டார்வினின் பரிணாமக் கொள்கையாகும். அதுவரை மதம் நம்பி வந்த, கற்பித்துவந்த கடவுள் படைப்புக் கொள்கைக்கு மரண அடி கொடுத்த அந்த
மாமனிதர் பிறந்த நாள்தான் இன்று (12.02.1809).
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தவர். விலங்கியல், தாவரவியல் துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். கப்பலிலேயே சுற்றி
பல்வேறு இடர்ப்பாடுகளை ஏற்று, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்.
1859-இல் அவரால் எழுதப்பட்ட உயிரினங்களின் தோற்றம் (Origin of species) எனும் நூலும்,
1871 இல் அவரால் எழுதப்பட்ட மனிதனுடைய பாரம்பரியம் (The Descent of Man) எனும் நூலும் மனித சமுதாய வளர்ச்சித் திசையில் மிகப் பெரிய
திருப்பத்தைத் தந்த அரிய அறிவுக் கருவூலங்கள் ஆகும்.
இயற்கையானது, எந்த உயிர் தன் சூழ்நிலையில் வாழ்வதற்கு
மிகவும் அனுகூலமான மாறுபாடுகளை உடையதோ, அந்த உயிரைத்
தேர்வு செய்து கொள்கிறது. இத்தகு இயற்கைத் தேர்வு தொடர்ச்சியாகவும், வழி வழியாகவும் நடந்து வருவதால், சூழ்நிலையிலே எவ்வளவுக்கு வேறுபாடுகள் உண்டாகியிருக்குமோ, அந்த அளவுக்கு வேறுபட்ட விலங்கினங்களும் தோன்றிக் கொண்டு வரும் என்று
டார்வின் தம் கண்டுபிடிப்பாகக் கூறினார். டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை
என்பது இதுதான். குரங்கிலிருந்து படிப்படியாக மனிதன் உருவானான் என்பது அவர்தம்
ஆய்வின் முடிவு.
தன்னைப் போலவே தேவன் மனிதனைப் படைத்தான் என்ற பைபிள் மொழிக்கு இது விரோதமாக
இருக்கிறதே என்று உலகம் ஆத்திரப்பட்டது. கடவுளை மறுக்க வந்த சூழ்ச்சி, மனிதனின் ஆபாசமும், நஞ்சும் பொருந்திய துர்க்காற்று என்று
தூற்றினர். இவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள் என்று மண்ணை வாரி இறைத்தனர்.
டார்வின் கண்டுபிடிப்பு சரியானதே என்று சொன்னதற்காக அமெரிக்காவின்
கொலம்பியா மதக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் உட்ரோ வேலையிலிருந்து
தூக்கியெறியப்பட்டார் (1884). 1925 ஆம் ஆண்டில் கூட அமெரிக்காவின்
தென்னசி மாநிலத்தில் டார்வினின் பரிணாமக் கொள்கையைக் கற்பித்ததற்காக ஸ்கோபஸ்
என்னும் ஆசிரியர் நீதி மன்றத்தின் கூண்டிலே நிறுத்தப் பட்டதுண்டு. 1950 ஆம் ஆண்டில்கூட 12ஆம் போப்பயஸ் பரிணாமக் கொள்கையை
பயங்கரமாக எதிர்த்தார்.
என்ன அதிசயம்! 1996இல் ஓர் அதிசயம் நடந்தது. போப் ஜான்
பால் டார்வினின் தத்துவம் சரியானதே - ஏற்றுக் கொள்ளத் தக்கதே என்ற அணு குண்டைத்
தூக்கிப் போட்டாரே பார்க்கலாம். ஃபோன்டிபிகல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற
அமைப்புக்கு அனுப்பியுள்ள செய்தியில், புதிய அறிவு
பரிணாம வளர்ச்சித் தத்துவத்தினை அங்கீகரிக்கச் செய்கிறது. பரிணாமக் கொள்கையை
பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்றாரே பார்க்கலாம்.
ஆதாரம் : (The Hindu 26-10-1996)
போப் கத்தோலிக்க அமைப்பின் தலைவர் என்றால் இங்கிலாந்தைத் தலைமை
இடமாகக் கொண்ட புரொட்டஸ்டண்ட் கிறித்துவப் பிரிவினரின் தலைவரான ரைட் ரெவரெண்ட்
டாக்டர் மால்கம் பிரவுனும் டார்வின் கொள்கையை எதிர்த்ததற்காக 126 ஆண்டுகளுக்குப்பின் மன்னிப்புக் கோரியுள்ளார்.
(இணைய தளச் செய்தி 15-9-2008).
அறிவியலா - மதமா? ஆம், அறிவியல், மதத்தை மண்கவ்வச் செய்துவிட்டது! வாழ்க
டார்வின்!
12.2.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக