பைபிளின் ஆசிரியனுக்குச் சூரியனைப்பற்றி ஏதாவது தெரியும் என்று யாராவது கற்பனை செய்கின்றீர்களா?
துருவ நட்சத்திரம் பற்றிப் பைபிளை எழுதியவனுக்கு ஏதாவது தெரியும் என்று எண்ணுகிறீர்களா?
நமக்கு மிகத் தொலைவில் இருக்கும் 20 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றின் ஒளி நமது கண்களை வந்தடையும் விண்மீன் கூட்டங்களைப்பற்றிப் பைபிள் கர்த்தாவுக்கு ஏதாவது தெரியும் என்று கருதுகிறீர்களா? என்று கேள்வி கேட்டவர்.
ஞானஸ்தானத்தைவிட சோப்பு ஸ்நானம் நல்லது.
மத குருமார்கள், மனிதனை ஆண்டவன் மன்னிப்பாரா? என்று கேட்டனர்.
ஆனால், பல நூற்றாண்டுகளாக மனித இனம் அனுபவித்து வரும் கொடுமைகளையும், இன்னல்களையும் வடித்துவரும் துன்பக் கண்ணீரையும் நான் எண்ணும்போது ஆண்டவனை மனிதன் மன்னிப்பானா? என்று அறிவார்ந்த வினாக் கணையைத் தொடுத்தவர்.
பிறர் உழைப்பிலேயே வாழ்வது - உங்கள் சகோதர மனிதனை அடிமைப்படுத்தி, சங்கிலியால் அவன் உடலைக் கட்டிப் போடுவது, பலகீனமானவர்களையும், ஆதரவற்றவர்களையும் அடித்து, அதன்மூலம் அறியாமையிலும், மூடத்தனத்திலும் மூழ்கியிருக்கும் மக்களின் பாராட்டுதலைப் பெறுவது, மனிதர்களின் மனதை அடிமைப்படுத்தி மூளைக்கு விலங்கிட்டு, உதடுகளுக்குப் பூட்டுப் போடுவது, முட்டாள்களாக இருக்கும் பலரின் உத்தரவின் பேரில் அறிஞர் சிலரைத் தண்டிப்பது, நரக லோகத்தின் வர்ணனையைக் கூறி, குழந்தைகளின் பிஞ்சு மனத்தைப் பாழாக்குவது, உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்வது இவைகளே உண்மையான தேவ நிந்தனையாகும். அரசியல் சட்டத்தில் பேச்சுச் சுதந்திரம் தந்திருப்பதாகக் கூறிவிட்டு, தேவ நிந்தனையாகப் பேசினான் என்று ஒருவன்மீது வழக்குத் தொடர்வது முன்னுக்குப் பின் முரண் இல்லையா? என்று அழுத்தமாகக் கேள்வி கேட்டவர்!
நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு வாதம் அன்று; அநீதிக்கு, ஏற்றத்தாழ்வுக்கு, அடிமை முறைக்கு எதிரான ஒரு போராட்டமாகும்; முற்றிலும் மனிதத் தன்மை கொண்டதாகும்.
தன்னை அழிவுப் பணியாளன் என்று பிறர் கூறும்போது, ஒருவன் விதையை விதைத்தாலும், விதைக்காவிட்டாலும், களைகளையும், முட்செடிகளையும் அழித்தால் அவன் நன்மை செய்பவனே! என்று ஆணித்தரமாக விவாதிட்டவர்-
அவர்தான் கர்னல் ராபர்ட் கிரீன் இங்கர்சால் - அவரின் நினைவு நாள்தான் இன்று (1899).
பாதிரியார் குடும்பத்தில் பிறந்து, தம் தந்தை பாதிரியாரையே திருத்திய கோமகன். அவர் நினைத்திருந்தால் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி இருக்கமுடியும் - ஆனால் கொள்கையில் சமரசம் காணாதவர் ஆயிற்றே!
என்ன, தந்தை பெரியாரின் நினைவு வருகிறதா?
21.7.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக