வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கோவில்?


கோவில்கள் எப்படி தோற்றுவிக்கப்பட்டன? பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. திருநின்றவூரில் நடிகர் எம்.ஜி.ஆருக்குக் கோவில் கட்டி விட்டனர். கோவிலுக்குள் வைக்க 5 அடி உயரத்தில் எம்.ஜி.ஆர். சிலை தயாரிக்கப்படுகிறதாம். ராஜஸ்தான் மாநிலத்தில் கைதேர்ந்த சிற்பிகள் இதனைச் செய்கிறார்களாம்.

இதற்கு முன்புகூட நடிகை குஷ்புவுக்குக் கோவில் கட்டப்பட்டதுண்டு. ஈரோட்டில் காந்தியாருக்குக் கோயில் கட்டி விட்டார்கள்.

வழக்கமாக மற்ற மற்ற கோவில்களில் ஆறு வேளைப் பூஜைகள் நடப்பதுபோல, அபிஷேகங்கள் செய்யப்படுவதுபோல, படையல்கள் போடப்படுவதுபோல இந்தக் கோவில்களிலும் நடக்கும்; அர்ச்சகனும் நியமிக்கப்பட்டு விடுவான்.

பக்தர்களும் படை திரண்டு வரத்தான் போகிறார்கள். எம்.ஜி.ஆர். கோயிலுக்குச் சென்றால் குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்; நோய்கள் தீர்ந்து போய்விடும் என்று ஆங்காங்கே பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டால் அவ்வளவுதான் பக்திப் பயித்தியம் பிடித்த மக்கள் அலை அலையாகத் திரளமாட்டார்களா? எம்.ஜி.ஆர். கோவிலுக்கு வந்து மொட்டைபோட மாட்டார்களா? கோவிலைக் கட்டியவர்கள் உண்டியலை வைக்க மாட்டார்களா? (கோவில் கட்டுபவர்களின் நோக்கமும் அதுதானே?) பக்தர்களும் காணிக்கை செலுத்த மாட்டார்களா?

பெண்கள் அங்கப்பிரதட்சண்யம் செய்யமாட்டார்களா? அடுத்தடுத்து பூக்குழி (தீமிதி) ஏற்பாடுகளும் நடக்காதா என்ன?

இன்னும் எம்.ஜி.ஆர். சாகவில்லை. அவர் எப்படி சாவார்? என்று நினைத்துக் கொண்டிருக்கும் பாமரர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

கொள்கை ஏதுமில்லாமல் சினிமாவில் நல்லவர்களாக நடித்துவிட்டால் கஷ்டப்படும் மக்களைக் காப்பாற்றுவது போல காட்டி விட்டால், வில்லனை அடித்து விரட்டிவிட்டு பெண்ணைக் காப்பாற்றி விட்டால் (பிறகு அந்தப் பெண்ணை இவரே திருமணம் செய்துகொண்டு விடுவார் என்பது வேறு பிரச்சினை) அவர்தான் தெய்வம்- அவர்தான் மகான். அப்படித்தானே?

முதலில் இரசிகர் மன்றம் ஆரம்பித்து, பிறகு கோவிலும் கட்டி விடுவார்கள்.

அதற்குப் பிறகு அவர்களை ஆட்சியில் அமரவைத்து அழகு பார்க்கவும் ஆசைப்படுவார்களே - அந்தத் தெருப் புழுதிக் கூத்துதானே நாட்டிலும் நடந்துகொண்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட படித்த- படிக்காத பாமரர்கள் இருக்கும்வரை தேர்தலாவது - மண்ணாங்கட்டியாவது!



1.6.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...