வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ம. சிங்காரவேலர் (1860-1946)


சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலனாரின் 151 ஆம் ஆண்டு பிறந்த முக்கிய நாள் இந்நாள் (18.02.1860).

இந்தியாவில் பொதுவுடைமைக்குக் கட்சி ரீதியாக அடிக்கால் போட்டவர் அவர் என்றால் அது மிகையாகாது. வெறும் வர்க்கப்பேதம் பற்றிப் பேசினால் மட்டும் போதாது; வருக்க உணர்ச்சியை உண்டாக்கினால் மட்டும் போதாது - வருண சமூக அமைப்பை முக்கியமாகத் தகர்க்க வேண்டும் என்பதிலே தந்தை பெரியார் அவர்களுடன் கைகோத்தார். நூல்களைத் தேடித்தேடி படிக்கும் நூலகத் தேனீ அவர். அவர் வீட்டில் அவர் வைத்திருந்த நூலகம் பற்றி பெரிதாகப் பேசப்பட்டது. அவருடைய சிந்தனைகளுக்கு வடிகாலாக தந்தை பெரியார் அவர்களின் குடிஅரசு இதழ் விளங்கியது. தங்குத் தடையின்றி அவர் கருத்துகளை குடி அரசில் எழுதிட முழு உரிமையையும் அளித்தார், தந்தை பெரியார்.

தம் கருத்துக்கு மாறாக இருந்தவற்றைக்கூட வெளியிட தந்தை பெரியார் சுதந்திரம் அளித்தார் என்றால், தந்தை பெரியார் அவர்களின் கருத்துச் சுதந்திர பெருமித உணர்வை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சிங்காரவேலனாரின் கருத்துக்கு மறுப்புக் கட்டுரையையும் கூட பகுத்தறிவு இதழில் (30.9.1934) தந்தை பெரியார் எழுதியதுண்டு. அப்படியொரு ஆரோக்கிய நிலையைப் பயிர் செய்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

ம.சி. என்று சுருக்கமாகக் கூறப்படும் சிங்காரவேலரின் வாழ்க்கையில் பல முக்கியமான நிகழ்வுகள் உண்டு. 1902இல் உலகப் புத்தமத மாநாட்டுக்கு லண்டன் பயணம்; 1918இல் சென்னைத் தொழிலாளர் சங்கத்தைத் தோற்றுவித்தது; 1925இல் காஞ்சீபுரம் காங்கிரஸ் மாநாட்டில் கொடியேற்றியது; 1928இல் ஜாம்ஷெட்பூரில் ஏ.அய். டி.யூ.சி. தலைவர் முகுந்தலால் சர்க்காருடன் கிளர்ச்சியில் ஈடுபட்டு பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது; 1932இல் (டிசம்பர் 28,29) ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களுடன் இணைந்து சமதர்மத் திட்டத்தை சுயமரியாதைத் தொண்டர்கள் முன்வைத்தது. 1935-இல் புதுஉலகம் இதழ் துவக்கப்பட்டது போன்ற நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

1925ஆம் ஆண்டில் யானைகவுனிப் பகுதியிலிருந்து சென்னை மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். மனச்சாட்சியின்படி என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

சுயமரியாதைச் சிறுவர்களுக்கு வாய்ப்பாடம் என்று குடிஅரசில் (15.1.1933) 10 அம்சங்களைக் குறிப்பிடுகின்றார்.அதில் ஒன்று ஒரு வருஷத்துக்குள் குடி அரசுக்கு பத்து சந்தாக்களைச் சேர்க்கிறேன் என்பதுதான் அதில் முதல் கட்டளையாகும்.

பொதுவுடைமை - சுயமரியாதைக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்ற சிங்காரவேலரைப் போற்றுவோம். குறிப்பாக கம்யூனிஸ்டுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எந்த அளவுக்கு அவரின் பகுத்தறிவுக் கொள்கைகளை நடைமுறையில் பின்பற்றுகிறார்கள் என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுவோம்!

18.2.2011
நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...