ஞாயிறு, 16 ஜூலை, 2017

இரட்டைமலை சீனிவாசன்!


``ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை நாயகர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (7.7.1859).

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ``ஆதிதிராவிடர் மகாஜன சபையைத் தொடங்கிய முன்னோடி இவர். 1893இல் `பறையன் என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல மாநாடுகளை நடத்தியவர். 1930, 1931 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பங்குகொண்டு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டினார்.

ஒரு நிகழ்வை எடுத்துச் சொன்னால், அவரின் மதிநுட்பத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

1930இல் இலண்டனில் நடை பெற்ற வட்டமேசை மாநாட்டுக்குச் சென்றிருந்த தலைவர்களுக்கு அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் விருந்தளித்தார். டாக்டர் பாபா சாகெப் அம்பேத்கர், .டி. பன்னீர்செல்வம், டாக்டர் . இராமசாமி முதலியார் போன்றோரும் கலந்துகொண்டனர்.

அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் அந்நாட்டு மரபுப்படி ஒவ்வொருவரையும் கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் இடம் வந்தபோது, தன் கையை நீட்டாமல் இழுத்துக் கொண்டார்.
மன்னருக்கு அதிர்ச்சி! காரணம் விளங்காமல் திகைத்தார். அந்தத் திகைப்பை வெகுநேரம் நீடிக்க விடாமல் காரணத்தைக் கூறினார் இரட்டைமலை சீனிவாசன்.

`நான் தீண்டத்தகாதவன், எங்கள் நாட்டில் எங்களைத் தொடமாட்டார்கள்  பறையன் என்று எங்களுக்குப் பெயர் என்று சொன்னார்.

அதிர்ச்சி கலந்த வார்த்தைகளில், `உங்கள் நாட்டில் பறையன் கீழே விழுந்தால்கூட தூக்கிவிட மாட்டார்களா? என்று மன்னர் கேட்டார்.

`ஆமாம். தூக்கிவிட மாட்டார்கள். உங்கள் ஆட்சியிலும் இந்தியாவில் இந்த நிலைதான்! என்று பக்குவமாகப் பதில் சொன்னார்.

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் நீதிக்கட்சியுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தவர்.

1924இல் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் கீழ்க்கண்ட தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

1(9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

() எந்தப் பொதுச்சாலையிலோ, தெருவிலே அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

() எந்த அரசு அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடை பெறும் இடமாக இருந்தாலும், இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசு ஒப்புக்கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களுக்கும் அனுப்பப்பட்டது.

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களும், நீதிக்கட்சியும் எந்த அளவுக்குக் கொள்கை பூர்வமாக நகமும்  சதையுமாக இணைந்திருந்தனர் என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதாதா?
திராவிட இயக்கம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தது என்று பொறுப்பின்றிக் கதைக்கும் சிலர் சிந்திப்பார்களாக!


7.7.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக