ஞாயிறு, 16 ஜூலை, 2017

சங்கராச்சாரியார் பற்றி கவிஞர் - கண்ணதாசன்



அறிவியல் வளர்ந்த பின்பும்
அணுவையும் துளைத்து மேவும்
பொறியியல் மிகுந்த பின்பும்
புதுமைகள் நிறைந்த வீர
நெறிபல கண்ட பின்பும்
நிகரிலாத் தலைவ னென்றே
துறவியைக் காட்டும் வீணர்
தொலைந்தன ரிலையே தோழா!
சங்கராச் சாரி யார்தான்
தலைவராம் உலக மாந்தர்
பொங்கியாச் சாரி காலில்
போய் விழல் தரும வாழ்வாம்!
இங்குளர் இளித்த வாயர்
என்பதால் துறவி யான
சங்கராச் சாரி யாரை(த்)
தாங்குவோர் உளரே இன்னும்!
வகுத்ததோர் உலகின் வாழ்க்கை
வழியறி யாத மாந்தர்
பகுத்தறி விழந்து போனார்
பண்பினை மறக்கலானார்!
தொகுத் தறியாத தாலே
துறவிக ளானோர் பாதம்
வழித் தெறிகின்றார்! அந்தோ
வாழுமோ தமிழர் பூமி!
(கண்ணதாசன் கவிதைகள்  முதல் இரண்டு தொகுதிகள், பக்கம், 247 248)

தமிழனுக்குச் சூடில்லை! சொரணையில்லை!
தன்முன்னோர் வகுத்த வழி நினைவு மில்லை!
அமிழ்தென்பான் தன்மொழியை! அடுத்த நேரம்
அழகுமொழி சம°கிருதம் அதையும் கற்றால்
கமழ்ந்திடுமே தமிழ் என்பான்! இந்தி வந்தால்
தனித்தமிழே வாழ்வு பெறும் என்பான்! தானும்
தமிழனுக்கே பிறந்தவ னென் றுரைப்பான்! சுற்றம்
தலைகுனிய வேறென்ன வார்த்தை வேண்டும்!!

கண்ணதாசன் கவிதைகள்  பக்கம் 119


தென்னவர் இந்தி கற்கச்
செப்புவோன் தமிழ னல்லன்
அன்னையை வடவர்கூடி
ஆக்கிய கருவே அன்னான்
கண்ணதாசன் கவிதைகள்  பக்கம் 237


மஞ்சள் மேனியும் வஞ்ச நெஞ்சமும்
சொத்து என்பதோ தர்ப்பை ஒன்றுதான்
கடவுள் வாசலை காத்தனர் ஆரியர்!


ஆடுமாடுகள் முன் நடந்திட
ஆரணங்குகள் பின் தொடர்ந்திட
காடு யாவையும் கடந்து சிற்சிலர்
கன்னித் தாயக எல்லை தொட்டனர்;
மஞ்சள் மேனியும் வஞ்ச நெஞ்சமும்
மான மென்னும் ஓர் எண்ணம் இன்மையும்
கொஞ்சும் வார்த்தையும் கொண்டவர் தமிழ்க்
கோட்டை வாசற் படியை மிதித்தனர்;
சொந்தமாக ஓர் நாடி லாதவர்
தொட்ட பூமியில் சூழ்ந்து வாழ்பவர்
எந்த நாடுமதம் சொந்த நாடென
ஏற்று மாந்தரை மாற்றி ஆள்பவர்
சொத்து என்பதோ தர்ப்பை ஒன்றுதான்
தூய்மை என்பதோ துணியும் இன்மையாம்
வித்தை யாவையும் சூழ்ச்சிப் பள்ளியில்
விரும்பிக் கற்றதாம்; வேறு என் சொல!
நச்சரவுகள் மனித மேனியில்
நடமிடும் கதை இவர்கள் கதையாம்
அச்சம் மிக்கவர் கோழையர்; ஆயினும்
    அடுத்து வீழ்த்திடும் திறமை மிக்கவர்!
அடியெடுத்து வைத்ததும், கண்ணெதிர்
அங்கு நின்றவோர் தமிழனைப்பார்த்து, இப்
படி அமர்ந்திடும் பண்புடை தென்னவ!
பாரில் உம்புகழ் பரவக் காண்கிறோம்!
மிடிமை இல்லதாம் உங்கள் தாயகம்!
வீரர்  தேயமாம்! கேள்வி யுற்றனம்!
எனில் உமக்கொரு தெய்வம் இல்லையாம்
என்ன மோசம், இஃதாண்டவன் ஏற்பரோ!
என்றதும் தமிழ் ஏறுகூறுவன்;
ஏன் இலை! கதிரோன் ஒரு தெய்வமாம்!
எழில் நிலாவும் யாம் போற்றிடு தெய்வமாம்
என்றுகூற அவ்வீணர்கள் யாவரும்
எழுபதாயிரம் கடவுள்கள் கூறி, அக்
கடவுள் யாவரும் வானில் உண்டெனக்
கதைய ளந்தனர் கற்பனை பொங்கிட!
பொய்ய லால்சிறு மெய்யுமி லாமலே
புவியில் வாழும் திறம்மிகு ஆரியர்
சொன்ன யாவையும் தமிழன் ஏற்றனன்!
சூழ்ச்சி வென்றது! நாடு சாய்ந்ததே!
கடவுள் வாசலை காத்தனர் ஆரியர்!
கன்னியர் விழிக் கடலைக் காட்டினர்!
வீரம் முற்றும் ஒழிந்தது ஏட்டிலே!
தீரம் மாண்டு ஆரியர் சாத்திரத்
தீக்குழி யிடைச் சாய்ந்தனர் தென்னவர்!
கண்ணதாசன் கவிதைகள், பக்கம் 162 163

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...