தமது 90 ஆம் வயதில் தந்தை பெரியார் அவர்கள் சென்னையிலிருந்து வேன் மூலமாக உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான மாநாட்டில் பங்குஏற்கப் புறப்பட்டார்கள் (7.10.1968). அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.
வீரமணி, திருமதி ரெங்கம்மாள் சிதம்பரம் (ஆசிரியரின் மாமியார்), உதவியாளர் தி. மகாலிங்கன் ஆகியோர் இந்தச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர். அக்டோபர் 12, 13 (1968) இரு நாள்களிலும் தந்தை பெரியார் மாநாட்டில் பங்கு கொண்டார்கள்.
மாநாட்டிற்குத் தந்தை பெரியார் சென்றபோது, மிகப்பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பெரியார் ராமசாமி ஜிந்தாபாத்!
நாய்க்கர் சாஹேப் ஜிந்தாபாத்! என்று முழக்கமிட்டு வரவேற்றனர்.
மாநாட்டு வரவேற்புக் குழுச் செயலாளர் வழக்கறிஞர் ஜனாப் ஆசாத் ஹுசேன் மலர்மாலை அணிவித்து தந்தை பெரியாரை வரவேற்றார்.
உ.பி.
மாநிலத்திலிருந்து 30 மாவட்டங்களின் 350 பிரதிநிதிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கூடியிருந்தனர். மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவராக முகம்மது மஸ்தான் சாருல்லா இருந்தார். புத்தபிக்கு சியாம் சுந்தர் வந்திருந்தார்.
மாநாட்டைத் தொடங்கி வைத்து தந்தை பெரியார் உரையாற்றினார். தந்தை பெரியார் அவர்களின் தமிழ் உரையை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க, மற்றொருவர் அதனை இந்தியில் மொழி பெயர்த்தார்.
அந்த மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கதாகும். எனது லட்சியமெல்லாம் எந்தக் காரியம் செய்தாவது நமது சமுதாயத்தின் இழிவு நீக்கப்படவேண்டும் என்பது தான்.
அது ஜப்பானால் முடியுமா? ஜெர்மனால் முடியுமா? ரஷ்யாவினால் முடியுமா? பாகிஸ்தானால் முடியுமா? என்பதுபற்றி இன்றைய நிலையில் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. யாரால் முடியுமோ அவர்களை அழைத்து நம் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்து அதில் இழிவற்ற குடிமகனாக இருக்கலாம் என்பதே என் கருத்து.
நான் சொல்வது அபாயகரமாக இருந்தாலும்கூட, சமுதாய இழிவோடு இருப்பதைவிட, அது ஒழிய போராட்டத்திற்கு ஆளாகி, இறந்து போவதே நல்லது என்று கருதுகின்றேன். மானமுள்ள வாழ்வே மனிதனுக்கு அழகு என்று குறிப்பிட்டார்.
அதற்கு முன்பும்கூட 1944 இலும், அதன்பின் 1959 இலும் ஒருமுறை உ.பி.,க்குச் சென்ற துண்டு, கான்பூர் மாநாட்டில் பேசியுள்ளார் தந்தை பெரியார். (29, 30, 31.12.1944) அப்பொழுது அண்ணா அவர்கள் அய்யாவின் செயலாளராகச் சென்றுள்ளார். அதன்பின் 1959 இல் ஒருமுறை லக்னோ போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கிறார். லக்னோ பல்கலைக் கழகத்தில் பேசியுள்ளார்.
குடியரசுக் கட்சியின் தொண்டர்கள் கான்பூரில் உருவியவாளுடன் தந்தை பெரியாருக்கு வரவேற்பு கொடுத்தனர். அங்கேயே தங்கி பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு தந்தை பெரியார் அவர்களைக் கேட்டுக் கொண்டனர்.
எவ்வளவு மகத்தான, புரட்சிகரமான அத்தியாயங்கள் தந்தை பெரியார் வாழ்விலே!
13.10. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக