இனமுரசு சத்யராஜ் திரைப்பட உலகைக் கலக்கிக் கொண்டு இருக்கிறார். எங்கு சென்றாலும் தன்னை ஒரு நாத்திகன் என்று காட்டிக் கொள்கிறார்; பெரியாரின் மாணவன் என்று வெளிப்படையாகப் பேசுகிறார்.
இடக்கு முடக்காக யார் கேள்வி கேட்டாலும் சாட்டை அடியாக வெளுத்து வாங்குகிறார்.
பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு? எப்படியாவது மட்டம் தட்டவேண்டிய நெருக்கடி அவாளுக்கு.
கல்கி (23.10.2005)யில் இதோ ஒரு கேள்வி பதில்:
கேள்வி: எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததுதான் என் வெற்றிக்குக் காரணம் என்று நடிகர் சத்யராஜ் தன் பிறந்த நாள் விழாவில் கூறியது குறித்து...
பதில்: தொழில்ல அவருக்கு நம்பிக்கை இருந்திச்சல்ல? அதுதாங்க ஆயுத பூஜை!
அதுதான் வெற்றிக்குக் காரணம். இதுதான் கல்கியின் பதில்.
இந்தப் பதிலில் ஏதாவது அறிவுப்பூர்வமான சாயலாவது தெரிகிறதா? கடவுள் நம்பிக்கை இல்லை. பூஜையிலேயே நம்பிக்கை இல்லை என்று சொன்னவர், ஒரு பகுத்தறிவுவாதி
தன்னம்பிக்கைவாதி.
அந்தத் தன்னம்பிக்கை எப்படி ஆயுத பூஜையாகும்? ஆயுதம் பகுத்தறிவுவாதிக்கு ஒரு கருவியே தவிர,
பூஜைக்குரிய பொருளல்லவே!
கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று பெரியார் சொல்லுகிறார் அல்லவா அதுதான்யா கடவுள் நம்பிக்கை!
ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதுர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன் என்று பெரியார் சொல்கிறார் அல்லவா அதுதான் சார்!
அசல் ஆத்மா என்று ஒருவன் சொன்னால் அவனை மனநல மருத்துவமனையில் தானே கொண்டு போய் சேர்க்கவேண்டும்? பகுத்தறிவுவாதியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கு இல்லை என்கிறபோது, இப்படி மரை கழன்றது மாதிரி பதில் சொல்வது என்பது சோ முதல் அவாளின் பாணியாகும்.
சந்திரமுகியின் வெற்றிக்குக் காரணம் நான் மதிக்கும் பாபாவின் சக்திதான் என்று நடிகர் ரஜினிகாந்த் சொன்னார் என்றால், அப்படிச் சொல்லுவதுதான் உண்மையான பகுத்தறிவு என்று சொன்னால், எப்படி இருக்கும். அதுபோன்றதே கல்கியின் பதிலும்!
மழைக்காலத்திலேயே இப்படி என்றால், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் இவர்களின் நிலை என்னவாகும் என்பதை எண்ணினால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
23.10.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக