`தினமணி
ஏடு ஞாயிறுதோறும் `ஜன்னல் என்ற ஒரு பகுதியை வெளியிட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு பிரச்சினை வெடிக்கும் பொழுது, அது தொடர்பான பழைய தகவல்களைச் சேகரித்து வெளியிடுவது நல்ல முயற்சிதான். புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும், பழைய தலைமுறையினர் மறந்தவற்றை நினைவூட்டிக் கொள்வதற்கும் இது பயன்படும்.
அப்படித் தகவல்களைச் சொல்லும்போது எதையும் மறைக்காமல்
ஒளிக்காமல் சொன்னால்தான், சரியான தகவல்களைச் சொன்னதாகப் பொருள்படும்.
இவ்வார `ஜன்னலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் திருத்தம் பற்றி சொல்ல `தினமணி முயற்சித்துள்ளது.
செண்பகம் துரைராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டதாகவும், அரசியல் சட்டப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (பிற்பட்டவருக்கு என்று `தினமணி கூறியிருப்பது தவறு)
இட ஒதுக்கீடு செய்ய வழி இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததாகவும், அப்பொழுது பிரதமராக இருந்த நேருவை அன்றைய முதல்வர் காமராஜர் வலியுறுத்தி, இட ஒதுக்கீடு கிடைக்க அரசியல் சட்டத்தில் உள்ள திருத்தத்தைச் செய்ய வைத்தார் என்றும் `தினமணி எழுதுகிறது.
1950, 51இல் காமராஜர் முதல்வராக இருந்தாரா இதுகூட தெரியாமல் `தினமணி எழுதுகிறதே!
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும், மாநாடு நடத்தியும், போராட்டம் பல நடத்தியும், மக்களிடத்திலே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தமிழகத் தலைவர்களும் அவரவர் பங்குக்குப் பாடுபட்டது என்பதையெல்லாம் `தினமணி மறைக்கிறதே!
சென்னை மாகாணத்தில் நடக்கும் போராட்டங்களை பிரதமர் நேரு அவர்களே நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியது; அதன் அடிப்படையில் சட்டத்திருத்தம் செய்வதாக பிரதமர் நேரு சொன்னது போன்ற தகவல்கள் எல்லாம் `தினமணிக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் இருட்டடிக்கும் குசும்பா?
21.8.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக