பெரியார் ஈ.வெ.ரா.
அவர்களுடைய சில செயல்களை நாம் விமர்சனம் செய்திருக்கின்றோம்.
அர்த்தமற்றவையாகவும், பல சமயங்களில் அவருடைய பேச்சுக்கள் வேதனையளிப்பதாகவுமே இருந்தன என்பதே நம் அபிப்பிராயமாக இருந்தது.
அவருடைய பல அபிப்பிராயங்களோடு நம்மால் ஒத்துப் போக முடியவில்லை என்றாலும் ஜாதி பேதங்களை ஒழிக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற முறையில் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
இன்று ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கை என்று அலையும் அரசியல்வாதிகளே எங்கும் பரந்து கிடக்கும் சூழ்நிலையில் திரு.ஈ.வெ.ரா.
மட்டும் தன் கொள்கைகளில் கடைசி வரையில் அசையாது பிடிப்புக் கொண்டிருந்தார்.
ஊருக்குத் தகுந்தாற்போல், மேடைக்குத் தகுந்தாற்போல், வந்திருக்கும் கூட்டத்திற்குத் தகுந்தாற்போல் தங்கள் பேச்சுக்களைச் சிறிதும் வெட்கம் இல்லாமல் மாற்றிக் கொள்ளும் பேச்சாளர்கள் நிறைந்த நம் நாட்டில், எங்கு பேசினாலும் சரி, எவர் வந்தாலும் சரி,
தனது கருத்தை மண்டையிலடித்தாற்போல் கூறும் துணிவு கொண்டிருந்தவர் திரு. ஈ.வெ.ரா.
இந்த நாட்டில் பெருவாரியான மக்கள் ஒன்று தனக்கென எந்தவித அபிப்பிராயமும் இல்லாதவர்கள்; இரண்டு அப்படியிருந்தாலும் வெளியே சொல்ல அஞ்சுபவர்கள். அப்படிப்பட்ட. . . . திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் அவர்.
ஒரு தனிப்பட்ட மனிதர் என்ற முறையில் இவர் மற்றவர்களுக்குக் காட்டிய மரியாதையைக் கேள்விப்பட்டால் வியப்பு மேலிடுகிறது! வயது, அந்தஸ்து, பிறப்பு இந்த மாதிரி அடிப்படைகளிலெல்லாம் சற்றும் வித்தியாசம் பாராமல், எந்த மனிதனையும் மனிதன் என்று உணர்ந்து மதிப்பதிலும், மரியாதை அளிப்பதிலும் இவருக்கு நிகராக யாருமே இல்லையென்று கேள்விப்பட்டிருக்கிறோம். அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் யாரிடமும் திரு.ஈ.வெ.ராவுக்கு வெறுப்பு உணர்ச்சி இருந்தது இல்லை.
இப்படிப்பட்ட மனிதர்கள் நம் நாட்டில் குறைந்து கொண்டே வருகிறார்கள். போலியாகவும், மற்றவர்களைத் திருப்திப் படுத்துவதற்காகத் தனது மனச்சாட்சியை அமுக்கிக் கொண்டும் வாழ்பவர்களுமே நிறைந்து காணும் இக்காலத்தில், உண்மையாக வாழ்ந்த ஒரு சிலரில் திரு.ஈ.வெ.ராவும் ஒருவர். அவருடைய கொள்கைகள் சிலவற்றிலும் அவருடைய செயல்கள் பலவற்றிலும் நாம் பல முறை குற்றங்கண்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் மீண்டும் சுட்டிக் காட்ட இது நேரமில்லை. ஆனால், அவருடைய எண்ணங்களின் நேர்மையில் நாம் குற்றம் கண்டதும் கிடையாது; காணவும் முடியாது.
சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத சில காரியங்களை அவர் செய்திருக்கிறார் என்று கூறும்போது, சமூகத்திற்கு நன்மையையும் செய்திருக்கிறார் என்று ஒப்புக் கொண்டே தீர வேண்டும்.
ஜாதி துவேஷங்கள் வெகுவாகக் குறைந்த பிறகும் அதைப் பற்றி விடாமல் பிரச்சாரம் செய்து வந்தாலும் கூட,
95 வயதாகியும் கடைசிவரை புத்தி தீட்சண்யத்துடன் அவர் வாழ்ந்தது இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு.
மூடநம்பிக்கைகளை ஒழிக்க அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் என்று கூறி மக்கள் மனத் திருப்திபட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. தெய்வங்களிடம் கூட நம்பிக்கை வைக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்து வந்தவர் திரு.
ஈ.வெ.ரா.
தெய்வ நம்பிக்கை கூடாது என்று அவர் கூறியதை நம்மால் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள முடியாது.
ஆனால் தெய்வங்களின் அளவிற்கு, அருகதையற்ற மனிதர்களை உயர்த்தி, அந்த மனிதர்களிடம் மூடநம்பிக்கை வைத்து விடுவது என்ற நம் நாட்டு மக்களின் மடமை என்றாவது நீங்கினால் அன்றுதான் பெரியாரின் வாழ்க்கை இலட்சியம் ஓரளவாவது ஈடேறியிருக்கிறது என்று அர்த்தமாகும். அது என்றாவது ஒரு நாள் நடக்கத்தான் போகிறது என்ற நம்பிக்கையுடன், மறைந்த திரு.ஈ.வெ.ரா.வின் துணிவிற்கும் நேர்மைக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.
ஆனால் தெய்வங்களின் அளவிற்கு, அருகதையற்ற மனிதர்களை உயர்த்தி, அந்த மனிதர்களிடம் மூடநம்பிக்கை வைத்து விடுவது என்ற நம் நாட்டு மக்களின் மடமை என்றாவது நீங்கினால் அன்றுதான் பெரியாரின் வாழ்க்கை இலட்சியம் ஓரளவாவது ஈடேறியிருக்கிறது என்று அர்த்தமாகும். அது என்றாவது ஒரு நாள் நடக்கத்தான் போகிறது என்ற நம்பிக்கையுடன், மறைந்த திரு.ஈ.வெ.ரா.வின் துணிவிற்கும் நேர்மைக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக