திங்கள், 17 ஜூலை, 2017

விநாயகன்


தொடர்ந்து மழை பெய்து பவானி சாகர்  அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வேண்டும் எனக் கோரி, அணைமேல் இருக்கும் விநாயகருக்கு 1008 குடம் நீர் அபிஷேகம் செய்தனர் விவசாயிகள் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது.

இதனைப் படிக்கும்பொழுது நியாயமாக என்ன தோன்றவேண்டும்? விநாயகன் நினைத்தால் அணைக்கு அதிக தண்ணீரை வரவழைக்க முடியும் என்பதுதானே?

விநாயகனுக்கு அந்தச் சக்தியிருப்பது உண்மையென்றால், மக்களுக்குத் தேவையான - இன்றியமையாததான தண்ணீரைக் கொடுப்பதைவிட அந்த அழுக்குருண் டைக்கு வேறு என்ன வேலை? வேறு என்ன வெட்டி முறிக்கிறார்?

கல்லினுள் தேரைக்கும் கடவுள்தான் படியளக்கிறார் என்று ஒரு பக்கத்தில் அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டு திரிகிறார்கள். அப்படியானால், மக்களுக்குத் தண்ணீர் மிகவும் தேவை என்பதை அறிய மாட்டாத அறிவிலியா அந்த ஆண்டவன்?

அவனுக்குத் தெரியாததா? அட, அற்பப் பதர்களே? அவனின்றி ஓரணுவும் அசையாது - தெரியுமா? என்று எதிர்கேள்வி வைக்கப்படுமேயானால், தெரிந்திருந்தும் மக்களுக்குத் தேவையான தண்ணீரை அவன் கொடுக்க மறுத்தால், அவனைவிட மக்கள் விரோதி - பொறுப்பற்றவன் ஒருவன் இருக்கத் தான் முடியுமா? என்ற கேள்வி எழாதா?

இதில் கருணையே உருவானவன் என்கிற அடைமொழி வேறு. கருணையே உருவான வன் என்றால், அவன் என்ன செய்ய வேண்டும்? காலம் கருதி மக்களுக்கு எது எது தேவையோ அவற்றையெல்லாம் கார்மேக மழையெனக் கொட்டோ கொட்டென்று கொட்ட வைக்கவேண்டாமா  அந்தக் கரிமுகன்?

ஆக்குதல், காத்தல், அழித்தல் எல்லாம் வேறு கடவுள்களின் துறைகள் அவற்றிற்கும், விநாயகனுக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கலாம்.

அப்படியென்றால் பவானி சாகருக்கு அதிக தண்ணீர் வர வேண்டும் என்று அணைமேல் இருக்கும் விநாயகனுக்கு 1008 குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தது பக்தர் களின் முட்டாள்தனம் என்று ஒப்புக்கொள்ள வேண்டுமே!

பல நாமகரணங்கள் இருந்தாலும், ஆண்டவன் ஒருவனே என்று ஓதுவது என்னாயிற்று என்று அடுத்த கேள்வி எழுமே!

புவிவெப்பம் பருவ மாறுதல்பற்றி எல்லாம் உரக்கப் பேசிக்கொண்டு இருக்கும் ஒரு காலகட்டத்தில், விக்னேசுவரனான விநாயகன்தான் இவற்றிற்கெல்லாம் தீர்வு காண்பான் என்று கருதுகிறவர்களை என்ன சொல்ல?

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற வாசகம்தான் அடிக்கடி நினைவூட்டப்பட வேண்டியிருக்கிறது.

4.8. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...