நறுக்கென்று ஒரு கேள்வி முள்ளால் தைத்திருக்கிறார், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி.
தைக்கப்பட்டவர் பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்.
எதற்காக இந்தத் தண்டனையாம்?
பிகாரில் நிதிஷ்குமார் பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்குகிறார். ஆனால், பா.ஜ.க. தலைவர்களை பிரச்சாரத்திற்காக, பிகாருக்கு அழைக்கப் பயப்படுகிறார் - இந்த அபூர்வமான சந்தர்ப்பவாதக் கூட்டணியை நிதிஷ்குமாரால் மட்டுமே அமைக்க முடியும் என்று சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
பிகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபொழுது, அம்மாநிலத்திற்கு வருகைதரவிருந்த குஜராத் மாநில முதலமைச்சர் நரவேட்டை நரேந்திர மோடி படத்தையும், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரையும் இணைத்து பிகார் மாநில பா.ஜ.க. வெளியிட்ட சுவரொட்டியைப் பார்த்து நிதிஷ்குமார் மிரண்டு போய்விட்டார். நடக்கக் கூடாதது நடந்து விட்டதுபோல நடுநடுங்கிப் போனார். அந்தச் சுவரொட்டிகள் உடனடியாக அகற்றப் பட்டன. பிகார் தேர்தல் பிரச்சாரத்துக்குக் கண்டிப்பாக நரேந்திர மோடி வரக்கூடாது என்று கறாராகக் கூறி விட்டார் நிதிஷ்.
பிகார் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட வந்த அத்வானியைச் சந்திக்கவில்லை பிகார் முதலமைச்சர் நிதிஷ்.
இந்தக் கண்ணோட்டத்தில், அழகான அரசியல் பார்வையில் கிடுக்கி போட்டுள்ளார் ராகுல்காந்தி.
நிதிஷ்குமார் மட்டுமல்ல - இதற்குப் பா.ஜ.க.வினர் தான் என்ன பதில் சொல்ல முடியும்! பா.ஜ.க.வுக்கு உண்மையிலேயே சுயமரியாதை உணர்வு இருக்குமேயானால், பா.ஜ.க.வை பிகார் முதல்வர் நடத்தும் இந்தப் போக்கிற்கு தமது கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வமான கண்டனத்தை, அதற்குத் துணிவு இல்லையானால், குறைந்த பட்சம் கருத்தினைத் தெரிவித்திருக்க வேண்டுமே!
நரேந்திர மோடியை நவரத்தின மணிகளால் அலங்கரிக்கும் சோ போன்ற பார்ப்பனர்கள்கூட இந்தப் பிரச்சினையில் கண்களைப் பிடரியில் கொண்டு போய் வைத்துக்கொண்டு விட்ட னர்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் நரேந்திர மோடிக்கு விசாகொடுக்க மறுத்துவிட்டன என்பதற்காக வெகுண்டெழுந்த வெங்கண்ணா கூட்டம், பக்கத்து மாநில முதலமைச்சர் ஒருவரே - அதுவும் கூட்டணிக் காதலரே பிகார் வர மோடிக்கு விசா கொடுக்க மறுக்கிறாரே -
பா.ஜ.க.வுக்கு இருக்கும் யோக்கியதை இதுதான் என்பதைத் தெரிந்துகொள்க!
16.10. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக