ஞாயிறு, 17 டிசம்பர், 2017

சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம் - பெ. திருஞானசம்பந்தன்



ஒரு மொழியின் இலக்கணம் சமகாலத்திய இலக்கியத்தின் அடிப்படையிலேயே தோன்றுவதாகும். தொல்காப்பியர் காலத்து இலக்கணம் அவர் காலத்து வழங்கிய இலக்கிய மொழியின் அடிப்படையிலே அமைந்தது. அதுபோலவேதான் நன்னூல், பிரயோக விவேகம் முதலான இலக்கண நூல்களும். இக்கட்டுரையின் நோக்கம் வடமொழித் தாக்கம் தமிழிலக்கணத்தில் காலந்தோறும் எந்த அளவுக்கு இருந்திருக்கக் கூடும் என்று சிந்திப்பதேயாகும். ஒரு சில இலக்கண நூல்களே, அவற்றுள்ளும் ஒரு சில இயல்புகளே இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

தொல்காப்பியர் காலத்தில் இலக்கியத்தில் வடசொற்கள் ஓரளவு பயின்று வரப்பட்டன என்பதை அவர் கூறும் சொற்பாகுபாட்டில் ‘வடசொல்’ (சூ. 401) என்ற பிரிவைக் கூறியதனின்றும் அச்சொற்களைத் தமிழில் எவ்வாறு ஆளவேண்டும் என்றும் (சூ. 402) அவர் சொல்லியதனின்றும் அறிகிறோம்.

‘அ’ ‘இ’ முதலான ஒலிகளைக் குறிப்பதற்குப் பிராதிசாக்கியங்களில் ‘அ’ என்ற விகுதியும் ‘காரம்’ என்ற விகுதியும் சேர்க்கப்படுகின்றன. காரம் என்பது ‘செய்யப்படுதல்’ என்று பொருள்படும். தைத்திரிய பிராதிசாக்கியம் (116, 21) இகரம் என்றால் ‘இ’ என்ற ஒலியையும் ‘யகரம்’ என்றால் ‘ய்’ என்ற ஒலியையும் குறிக்கும். தொல்காப்பியர் ஞ ந ம வ இயையினும் உகர நிலையும் (எழு. 298) என்ற சூத்திரத்தில் ‘அ’, ‘காரம்’ என்று மேற்கூறப்பட்ட இரண்டையும் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம்.

தொல்காப்பியர் காலத்தில் வேத நெறி நிற்போரும், சைனரும் பவுத்தரும் தமிழகத்தில் வாழ்ந்து வந்ததால் சமற்கிருதம், பாலி, அர்த்தமாகதி போன்ற கராக்ருதத்தையும் அவர் அறிந்திருக்கக் கூடும் என்பது எதிர்பார்க்கத்தக்கதே. தெய்வம், மாத்திரை, ஏது முதலான சொற்கள் இதற்குச் சான்று. ஆயினும் தொல்காப்பியர் தமிழ் மொழியின் சிறப்பியல்பைக் கருத்தில்கொண்டே சூத்திரங்களை இயற்றியிருக்கிறார்

என்பதை மறுந்துவிடலாகாது. பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார் கூறியிருப்பதுபோல் தொல்காப்பியரின் பெயர், வினை, இடை, உரி என்ற சொற்பாகுபாடு வடமொழி பிராதிசாக்கியங்களும் நிருக்தமும் கூறியுள்ள நாமம், ஆக்யாதம், உபசர்க்கம், நிபாதம் என்ற நால்வகைப் பிரிவை ஒட்டியது என்பது ஏற்கத்தக்கதல்ல. இடையும் உரியும், உபசர்க்கமும் நிபாதமும் போல்வன அல்ல, இலக்கண நூலை யாக்கும் முறையில் தொல்காப்பியரும் வடமொழி இலக்கணக்காரர்களும் ஏறத்தாழ ஒரே நெறியைப் பொருத்தும் இடங்களில் பின்பற்றியிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். 

எடுத்துக்காட்டாக வேற்றுமை இயலில் வேற்றுமை அமைப்பு முறையும் அதன் பொருள் விளக்கங்களும் ஏறத்தாழ ஒத்துக் காணப்படுகின்றன. இத்தகைய நிலையை புணர்ச்சி விதிகளில் காண இயலாது. புணர்ச்சியில் இரு மொழிகளும் வெவ்வேறு போக்குடையவை, ஒலியின் இயல்பை உணர்த்தத் தொல்காப்பியர் ஒலிகளை உயிர், மெய் என்று பகுத்தார். அய்தரேய ஆரண்யகமும் (ஐஐ-2-1) இப்படியே கூறுகிறது. இக்கருத்து ஒலி இயலாருக்குத் தனித்தனியே இயல்பாக எழக்கூடிய ஒன்று என்று கொள்ள வேண்டும். 

வீரசோழியம் : ஆசிரியர் புத்தமித்திரனார் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர் என்பது இவர் நூலை ஆக்கியுள்ள பாங்கிலிருந்தே தெரிகிறது. இவர் வடமொழி மரபுகளையும் தழுவி தமிழிலக்கணத்தை ஆக்கியிருக்கிறார் என்பதை அவரே தெளிவாகச் சொல்கிறார். வடநூல் மரபும் புகன்றுகொண்டே உரைப்பன்(3) சந்திப்படலம், காரகப்படலம், தாதுப்படலம், கிரியா பதப்படலம் போன்ற பாகுபாடுகள் வடமொழியில் காரகம் (வேற்றுமை), தாது (சொல்லின் வேர்ப்பகுதி) கிரியை (வினை) முதலிய வடமொழி மரபுச் சொற்களையொட்டி ஆளப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தொல்காப்பியம் எழுத்து அதிகாரத்தின் புணரியலும் மயங்கியலும் கூறியிருப்பனவற்றை வீரசோழியம் சந்திப்படலத்தில் அடக்குகிறது.

புணர்ச்சி நிலைகளைக் கூறும்போது வடமொழி இலக்கண குறியீடுகளான லோபம் (கெடுதல்) ஆகமம் (தோன்றல்) ஆதேசம் (ஒன்றினிடத்துப் பிறிதொன்று வருதல்) என்ற மூவகை விகாரங்கள் (மாற்றங்களை) குறிப்பிடப்படுகின்றன; குண சந்தியும் விருத்தி சந்தியும் வடமொழிக்கே உரியனவாயினும் அவையும் ஆரியத்துள் காணப்படுவனவாக இந்நூலில் விளக்கப்படுகின்றன. இத்தகைய போக்கிற்கு யாது காரணமாயிருக்கக் கூடும்?
தொல்காப்பியர் காலத்தில் தமிழ் மொழியில் அருகி வழங்கிய வடசொற்கள் தமிழிலக்கியத்தில் 11ஆம் நூற்றாண்டில் குறிப்பாக சமண, பவுத்த காப்பியங்கள் மிகுதியாக வழங்கப் பெற்ற காரணத்தால் அத்தகைய தமிழிலக்கியங்களைப் பயிலுவோருக்கு உதவியாக இருக்கும் வகையில் வடமொழி இலக்கணக் கூறுகளையும் ஆசிரியர் அமைத்திருத்தல் வேண்டும் என்று கருதலாம். வடமொழியில் நகரம் எதிர்மறைப் பொருளைத்தரும். கெய்யை முதலாக உடைய சொல் தொடரின் ‘ந’ என்பதில் உள்ள நகர ஒற்று கெட்டு அகரம் எதிர்மறையை உணர்த்தும். எ-டு ந+சுரன்=அசுரன் உயிரை முதலாக உடைய சொல் தொடரின் ‘ந’ என்பது ‘அந்’ என மாறும். எ-டு ந+இஷ்டம்=அநிஷ்டம். இவை போன்றவற்றை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

முதல் வேற்றுமையில் ‘சு’ என்னும் உருபு சேர்ந்து பின்  கெடுகிறது என்பது வடமொழி இலக்கண மரபு. தமிழுக்கு இது பொருந்தாது. எனினும் வடமொழிக்கு ஈடாகத் தமிழ்மொழி இலக்கணம் இருக்கவேண்டும் என்ற தவறான கருத்தினால் அர், ஆர் முதலான உருபுகளோடு ‘அ’ என்பதையும் இவர் சேர்த்துள்ளார்.

பவணந்தி : தமிழ் மொழிக்கே சிறப்பாக இலக்கணம் வரைந்தாரேனும் பவணந்தி வடமொழி மரபையும் கருத்தில் கொண்டவராதலால் எழுத்து அதிகாரத்தில் புறத்திலக்கண கூறப்புகுந்த நேரத்தில் ‘சொல் இயல்’ என்று கூறாது ‘பதவியல்’ என்று கூறினார்.

வடமொழிக்கு சிறப்பாக உள்ள ரு  (R) முதலான எழுத்துக்கள் தமிழில் ‘இ’ ‘இரு’ என்றவாறு திரிகின்றன என்பதை ‘ஏழாமுயிர் இய்யும் இருவும்’ என்று தொடங்கும் சூத்திரத்தில் (147) கூறுகிறார். வடமொழித் தொடர்கள் பல தமிழிலக்கியத்தில் அப்படியே பயிலப்பட்டு வந்ததால் அச்சொற்களில் காணப்படும் புணர்ச்சி முறையை உணர்ந்து கொள்வதன் பொருட்டுத் தமிழ்ப் புணரியல்களுக்குப் புறனடையாகப் பவணந்தி ஒரு சூத்திரம் அமைத்தார். அதில் ‘வடசொலின் இயம்பிய கொளாதவும் - பொருந்தியவாற்றிற்கு இயையப்புணர்த்தல் யாவர்க்கும் நெறியே’ என்ற பகுதியல் வடமொழியில் பரம+ஆனந்தம்=பரமானந்தம் என்ற தீர்க்க (நெடில்) சந்தி, சூர்ய+உதயம் = சூர்யோதயம் என்ற குண சந்தி, சர்வ+அய்ச்வர்யம் - சர்வைச்வர்யம் என்ற விருத்தி சந்தி முதலியன விளக்கப்பட்டுள்ளன.

தமிழில் வழங்கிவரும் சொற்களுள் சில தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துக்களைக் கொண்டவை ‘தற்சமம்’ எனப்படும் எ-டு காரணம். ஒருசில வடமொழிக்கே சிறப்பான எழுத்துக்களைக் கொண்டவை எ-டு சுகி. மற்றும் சில பொதுவும் சிறப்புமான எழுத்துக்களைக் கொண்டவை எ-டு அரன், பின் இரண்டு வகைகளும் தற்பவம் எனப்படுபவை, ‘பொதுவெழுத்தானும் சிறப்பெழுத்தானும் ஈரெழுத்தானும் இயைவன வடசொல்’ என்ற சூத்திரத்தில் (274) ஆசிரியர் இதனைத் தெளிவுபடுத்துகிறார்.
நச்சினார்க்கினியர் சொல்லதிகார வேற்றுமை இயலில் மூன்றாம் வேற்றுமை வாய்ப்பாடுகளைக் கூறும்போது (சூ75) ‘முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது’ - இதனுண் முயற்சியில் என்பது காரகவேது; ‘பிறத்தலான் ஒலி நிலை யாது’ என்பது ஞாபகவேது என்கிறார். இங்கே வடநூலார் கூறும் ஏதுவின் இருநிலைகளை உரையாசிரியர் காட்டுகிறார்.

தொல்காப்பியர் காலத்தில் வடசொற்கள் செய்யுளில் பயிலப்பட்டு வந்துள்ளதை அவர் எச்சவியலில் கூறும் சூத்திரம் (401) தெளிவுபடுத்துகிறது. ‘வடசொற்கிளவி வடவெழுத்தோரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே’ என்ற சூத்திரத்தால் வடசொற்களை எவ்வாறு தமிழ் மொழியின் இயல்புக்கேற்ப மாற்றிப் பயன்படுத்தவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இச்சொற்களுள் சான்றோர் செய்யுட் கண் வருவன, வாரி, மணி, காரணம், மீனம் போல்வன எனவும், ஒழிந்தோர் செய்யுட்கண் வருவன கமலம், ஞானம், தாரம் போல்வன எனவும் நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுகிறார். ஆனால், மேலே காட்டப்பட்ட ‘மீனம்’ என்பது தமிழ்ச்சொல்லே என்பது இன்றைய மொழி ஆராய்ச்சியாளர் துணிபு, நச்சினார்க்கினியரின் இக்கூற்றை அக்காலத்து ஒப்பியல் ஆய்வு முறை இல்லாத நிலையை எண்ணி அமைதி கொள்ள வேண்டும். 

சேனாவரையர் (13நூ) தொல்காப்பியச் சொல்லதிகார உரையில் ஆங்காங்கு வடமொழி நூற்பொருளைத் துணையாகக் கொண்டு பொருள் கூறிச் செல்கிறார். எடுத்துக்காட்டாக பெயரியல் சூ. 182இன் உரையில் “இயைபின்மை நீக்கலும் பிறிதினியைபு நீக்கலும் என விசேடித்தல் இரு வகைத்து” என்று குறிப்பிடுகிறார். இவற்றை வடநூலார் அயோக வியவச்சேதம், அந்யயோக வியவச்சேதம் என்பர்.

மூன்றாம் வேற்றுமை குறித்த சூத்திரத்திற்கு (சூ-74) உரை எழுதுகையில் சேனாவரையர் ‘வடநூலுட் பொருள் வேற்றுமையல்லது உருபு வேற்றுமையான்; ஒரு வேற்றுமையாக ஓதப்பட்டமையானும்’ என்று கூறுவது ‘வடநூலுட் பல உருபுகள் உருவத்தில் மாறுபடினும் பொருளில் மாறுபடாவிடில், அவை ஒரு வேற்றுமையாகக் கொள்ளப்படவில்லை என்பதை அவர் சுட்டுவதாக அமைகிறது.

வேற்றுமை இயலின் இரண்டாம் வேற்றுமை பற்றிய சூத்திர (சூ71) உரையில் செயப்படுபொருள் ‘இயற்றப்படுவதும் வேறுபடுத்தப்படுவதும் எய்தப்படுவதும் என மூவகைப்படும் எனக் குறிக்கிறார். இவை பர்த்ருஹரியில் வாக்கியபதீயம் என்ற இலக்கணநூலில் ‘நிர்வர்த்தியம், விகார்யம், பிராப்யம்’ என்று கூறப்படுகின்றன. இது சேனாவரையரின் வடமொழி இலக்கணப் பயிற்சியைக் காட்டுகிறது. இவற்றினின்றும் சிவஞான முனிவர் கூறியதுபோல் சேனாவரையர் ‘வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்தவர்’ என்று கருத இடமளிக்கிறது.

பிரயோக விவேக ஆசிரியர் சுப்பிரமணிய தீட்சிதர் தாம் இயற்றிய நூலின் சிறப்பியல்பையும் பயனையும் கூறுமிடத்து ‘தொல்காப்பியனாரும் நன்னூலாரும் கூறிய வடமொழி இலக்கணம் பெற்ற தற்சமந் தற்பவமாகத் தத்தம் நூலுள்ளே எழுத்திற்கும் சொல்லிற்கும் காரணக்குறி இடுகுறியாகிய யோகரூட நாமங்களைச் சிறுபான்மை கூறினார். அவ்வாறு சிறுபான்மை கூறாது, யாம் இந்நூலுட் பெரும்பான்மையும் தற்சமம் தற்பவங்களாற் கூறினாம். இப்பெரும்பான்மையும் கூறியது, வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் இலக்கணம் ஒன்று என்பதறியாது சம்ஞாபேதத்தாலும் பாடை வேற்றுமையாலும் இகழ்ந்து வேறென்பாரை நோக்கி என்க. இந்நூல் செய்ததற்கும் இதுவே பயன்’ என்று விளக்குகிறார். 

ஆகவே, இவர் அகத்தியத்திற்கும் தொல்காப்பியத்திற்கும் முதனூல் பாணினி இயற்றிய அஷ்டாத்யாயியும் இந்திரன் ஆக்கிய இலக்கணமும் என்று கொண்டார். சென்ற நூற்றாண்டில் கால்டுவெலும் இன்றைய நூற்றாண்டில் பர்ரோ, எமனோ, சுநீதிகுமார் சாட்டர்ஜி முதலான பல்வேறு ஆரிய திராவிட மொழியாய்வாளர்களும் இக்கூற்று முற்றிலும் தவறானது என்பதைத் தெள்ளிதின் நிலை நாட்டிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இன்னும் சொல்லப்போனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கருத்தைச் சிவஞானமுனிவர் தெளிவாகக் கூறிவிட்டார் என்பதை நாம் காண்கிறோம்.

காரகத்திற்குரிய பெயர்களுள் கருத்தா, கருமம், கரணம், அவதி, ஆதாரம் என்ற வடமொழிப் பெயர்களையே எடுத்தாள்கிறார். ஆறாம் வேற்றுமையைக் காரகமாகக் கொள்பவன் என்ற பொருளில் வரும் நான்காம் வேற்றுமைக்குரிய காரகத்தை மட்டும் ‘கோளி’ என்ற தமிழ்ச் சொல்லாகக் குறிப்பிடுகிறார்.

வடமொழியில் ஆண், பெண், அலி என்ற முப்பாலிலும் வரும் சொல் ஏழு வேற்றுமைகளையும், ஒருமை, இருமை, பன்மை என்ற மூன்று எண்களையும் கொண்டு உறழ 63 வடிவங்களைப் பெறுகின்றன. இவற்றிற்கொப்பத் தமிழிலும் 64 வடிவங்கள் உளவாக ஆசிரியர் கருதுகின்றார். பெயர் உருபு எட்டுடன் வேற்றுமை உருபு எட்டையும் உறழ்ந்து இவ்வெண்ணைப் பெறுகிறார். வினையியலில் துமந்தம், துவாந்தம் என்பவற்றைத் தமிழ்ச் சொற்களோடு தொடர்புபடுத்திக் காட்டுகிறார்.

இலக்கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். இவரது இலக்கணக் கொத்து வடமொழி இலக்கணத்தை உட்கொண்டு அமைந்துள்ளது. இவரது தீவிர வடமொழிப்பற்று இவரை ‘வடநூலை விட்டுத் தனியே தமிழ் நடவாது’ என்று கூறும் அளவிற்கு அமைந்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் அவர் காலத்தில் நிலவிய வடமொழிச் செல்வாக்கு, ‘அய்ந்தெழுத்தால் (ற, ன, ழ, எ, ஒ) ஒரு பாடை என்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே’ என்று அவர் கூறும் அளவிற்கு மிகுந்திருந்தது. வடநூலார் ‘சந்தியக்கரம்’ என்பதை ‘இணையெழுத்து’ என்றும் ‘ஏகவாக்கியம் பின்னவாக்கியம்’ என்பனவற்றை ‘ஒரு தொடர், பல தொடர்’ எனவும் மொழிபெயர்த்துக் கூறியுள்ளார்.

தொன்னூல் விளக்க ஆசிரியரான வீரமாமுனிவர் பொருளதிகாரத்தில் விரித்துரைக்கப்படும் பொருளாகத் தொல்காப்பியல் கூறிய அகம், புறம் என்பவற்றை விடுத்து அறம், பொருள், இன்பம், வீடு என்று கொண்டார். அதற்கு அவர் கூறும் காரணம்-பொருணூல் தந்த செந்தமிழுணர்ந்தோர் மற்றை யாவும் ஒழிய அகப்பொருள் எனச் சிற்றின்பம் ஒன்றையும், புறப்பொருள் எனப் படைச்சேவகம் ஒன்றையும் விரித்துரைத்தார். அங்ஙனம் பொதுப்படாது உரைத்த நூல் சிறுபான்மையாகையான் இங்ஙனம் அறம் முதல் நான்கிற்கேற்ப பொது நூலாக இவ்வதிகாரம் முடியும் எனவே கொள்க என்பதாகும். இப்படி வடநூலார் மரபையொட்டித் தண்டி முதலாயினோர் கூறியவாறு நால்வகைப் புருடார்த்தங்களே அகமும் புறமுமாம் என்பதோடமையாது இப்பொருள், வழக்கு, தேற்றம், தோற்றம் என மூவகைப்படும் என்றும், வடநூலார் இவற்றை ஆசாரம், விவகாரம், பிராயச்சித்தம் என்பர் என்றும் கூறினார். பொருளிலக்கணம் கூறவந்த வீரமாமுனிவர் மிருதி நூலில் கூறப்பட்டவற்றைக் கூறுவது வியப்பாகும். புறத்திணை ஒழுக்கத்தைக் கூற முற்பட்டவர், ‘வேதநூல், நீதிநூல், மனு நூல் முதலிய நூல் வழி விலக்கியனவும் விதித்தனவும் எடுத்துக்காட்டித் தன் பொருள் தோன்ற விளக்கல் நூற்புறத்திணையாம் என்றாலும் வடநூற் கருத்துகளை மரபுக்குப் புறம்பாக இலக்கண நூலில் அமைப்பது பொருத்தமாகப்படவில்லை.

ஆரிய மொழிகளைத் தமிழிடத்துரைக்குங்காலைப்  பொதுவெழுத்தால் வரும் பதமே சிறப்புடைத்து; அல்லன வருதல் சிறப்பன்று என்ற மரபு வழிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்கிறார். தமிழிலக்கணக் குறியீட்டுச்  சொற்களுக்கு ஒத்த தன்மை உடைய வடசொற்களைத் தருவதை ஆங்காங்கு காண்கிறோம். ‘வடநூலார் பகாப்பதத்தை ‘ரூடம்’ என்பர் (சூ.46) விகுதியை பிரத்தியயம் என்பர் (சூ, 84). அநீதி, அனாதி, நிராயுதன், நிருவிகல்பம் முதலான எதிர்மறை வடசொற்கள் தமிழில் பயில்வதால் அவற்றிற்குரிய வடமொழி இலக்கணத்தை 87ஆம் சூத்திரத்தில் தருகிறார். எனினும் ஒரு சில இடங்களில் தவறான செய்திகளையும் தருகின்றார் - ‘அடைமொழியை வடநூலார் அவ்வியயம்’ என்பர் (93) ‘தந்திரம்’ என்னும் வடமொழியை நூலென்று வழங்குவது தமிழ் வழக்கெனக் கொள்க’ என்றாற் போல்வன சில.

ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிவஞான சுவாமிகள் வடமொழியையும் தமிழ் மொழியையும் கற்றுத் தெளிந்தவர். வடமொழித் தத்துவ நூல்களையும் தருக்க நூல்களையும் கற்றவர். அப்படிக் கற்றுத் தெளிந்த காரணத்தால்தான் அவருக்கு முன் வந்த இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம் போன்ற இலக்கண நூலாசிரியர்களைப் போலன்றி இவ்விரு மொழிகளும் இன்றைய மொழி நூலார் கூறுவதுபோல, வேறுபட்ட ஆரிய, திராவிட மொழியினங்களைச் சார்ந்தவை என்பதை இவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியில் பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ‘அய்ந்திரம் நோக்கித் தொகுத்தான் எனின், தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம், புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும், குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்,
இரு மொழியறிவைப் பெற்றவராகலின் ஆங்காங்கு ஒப்புநோக்கு முறையில் சில கருத்துக்களைக் கூறிச் செல்கிறார். இத்தகைய ஒப்பாய்வு தெளிவைத்தரும்.

எடுத்துக்காட்டாக ‘அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரித்து, என்ற வரியில் தெரிவித்து என நிற்கப்பாலது ‘தெரித்து’ என ‘விவ்’ விகுதி தொக்கி நின்றது. இங்ஙனம் வருவனவற்றை வட நூலார் ‘அந்தர் பாவிதணிச்’ என்பர். பாயிரத்தின் சிறப்பியல்பைக் கூறும்போது யாப்பு, முதலிய பொருள், கேட்போர், பயன் இந்நான்கையும் வடநூலார் ஆனந்தரியம், விடயம், அதிகாரிகள், பிரயோசனம்’ என்று கூறுவர் என்கிறார். முத்தமிழ் இலக்கணம் அகத்தியரால் ஆக்கப்பட்டது ஏன் என்பதை விளக்கும்போது அவரது மற்றொரு கருத்தைக் காண்கிறோம் - ‘சோதிடம்’ முதலிய பிற கலைகளெல்லாம் ஆரியத்தினும் தமிழினும் ஏனைய மொழிகளினும், வேறுபாடு இன்றி ஒப்ப நிகழ்தலின், அவற்றை வேறு விதிக்க வேண்டாமையானும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் தமிழ் நிலத்துச் சில வேறுபாடு உடைமையின் அவற்றை வேறு விதிக்க வேண்டுதலானும், அதுபற்றி அகத்தியத்துள் இம்மூன்றுமே எடுத்தோதினார்.(2)

‘அகர இகரம் அய்காரமாகும்’, ‘அகர உகரம் ஒளகாரமாகும்’ என்ற சூத்திரங்கள் வடமொழி மரபை உளத்தில் கொண்டு போலும், சிவஞான முனிவர் இச்சூத்திரங்கள் சந்தியக்கரங்களை உணர்த்துகின்றன என்று கொண்டார். இக்கூற்றை மறுத்து, வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்கள் தொல்காப்பியம் எழுத்து அதிகார ஆராய்ச்சி என்ற நூலில், ‘இவை சந்தியெழுத்தின் இயல்பினைக் கூறுவனவாயின். ஆசிரியர், இவற்றைத் தனியெழுத்துக்களின் இயல்பினைக் கூறும் நூன்மரபில் வைத்திருப்பார். அவ்வாறன்றி, மொழியிலுள்ள எழுத்துக்களின் இயல்பினைக் கூறும் மொழி மரபில் இவற்றை வைத்திருத்தலின், மொழியிலுள்ள அய்காரத்திற்கு ‘அ, இ’ என்பது வரும் என்றும் ஒளகாரத்திற்கு ‘அ, உ’ என்பது வரும் என்றுமே அவர் கருத்துக் கொண்டார் என்பது அறியப்படும் என்று கூறியுள்ளார்.

‘அகரத்திம்பர் தோன்றும்’ என்னும் சூத்திரத்தின் பொருள் ‘அகர இகரமேயன்றி அவற்றோடு யகர மெய்யும் சேர்ந்து அய்காரமாகும். அகர உகரமே யன்றி அவற்றோடு வகர மெய் சேர்த்து ஒளகாரமாகும் என்றும் சிவஞான முனிவர் கூறியுள்ளார். இதற்கு அடிப்படையாக அவருக்கு அமைந்தது, ‘அய்காரத்தில் யுகரமும் ஒளகாரத்தில் வகரமும்; கலந்துள்ளன என்பது வடமொழி இலக்கண மாபாடியக்காரரான பதஞ்சலியாருக்கு உடன்பாடு என்பதாகும்.

“வடநூல் உணர்ந்தார்க்கு அன்றித் தமிழ் இயல்பு விளங்காது என்பதும் உணர்ந்து கோடற்கு அன்றே, பாயிரத்துள் “அய்ந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று கூறுவதனின்றும் இருமொழியறிவின் இன்றியமையாத் தன்மையை சிவஞான முனிவர் உணர்ந்தவர்” என்பது பெறப்படுகிறது.


(நூல்  - சமற்கிருத ஆதிக்கம்)
பதிப்பாசிரியர் : கி.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக