உலகத்திலேயே
நாஸ்திகம் என்று சொல்லப்படும் வார்த்தையானது.
அநேகமாய்ப் பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்படக் கூடியதாக இருந்துவருகிறது. காரணம் என்னவென்று பார்ப்போமானால்,
அவ்வார்த்தையில், ‘கடவுள் என்பது இல்லை’
என்கிற பொருள் அடங்கியிருப்ப தாகக்
கொள்வதேயாகும்.
மக்கள்
கடவுள் இல்லையென்று சொல்லப்படுவதைப் பற்றி மாத்திரமே ஆத்திரப்படவும்
வெறுப்புக் கொள்ளவும், புரோகிதர்கள், பாதிரிகள், மவுல்விகள், பண்டிதர்கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டு விட்டார்களே தவிர, கடவுள் என்பதைப்
பற்றிய விளக்கம் யாவருக்கும் தெளிவாக்கப்படாமலிருப்பதோடு, அது (கடவுள் என்பது)
மனத்திற்கும், புத்திக்கும் எட்டாதது என்பதாகவும் அப்படிப் பட்ட ஒன்றை நம்பித்தானாக
வேண்டும் என்றும் நிர்பந்தப் படுத்தப்பட்டுவிட்டது.
எப்படியிருந்தபோதிலும் என்றைய தினம் கடவுள்
என்கிற வஸ்து உண்டு என்று
கற்பிக்கப்பட்டதோ அன்று முதலே கடவுள்
இல்லை என்கிற வாதமும் ஏற்பட்டு,
வெகுகாலமாகவேஇவ்வாதப் பிரதிவாதம் நடந்து வருவதோடு, நாளதுவரை
முடிவுபெற முடியாமலே இருந்து வருகின்றது.
சாதாரணமாக,
கடவுள் இல்லையென்று சொல்லும்படி யான பல மதங்களும்
கூட உதாரணமாக; சூனிய மதம், நிரீஸ்வர
மதம், உலகாயத மதம், நாத்திக
மதம் என்பது போன்ற பல
உண்டு என்றாலும், கடவுள் என்பதாக ஒன்று
இல்லை என்கின்ற ஒரு கிளர்ச்சி வலுத்தது.
அதை அமலுக்குக் கொண்டு வந்து மற்றும்
உலகமெங்கும் அக்கொள்கையைப் பரப்பப் பிரசாரமும் செய்ய
ஏற்பாடுகள் சாதாரணமாக, இந்த இருபதாவது நூற்றாண்டில்
தான் தைரியமாகவும் பலமாகவும் செய்யமுடிந்து வருகின்ற தென்பதாகவும் தெரிய வருகிறது.
ஏனெனில்,
இதுவரையில் உலகத்தில் எந்த நாடும் பெரிதும்
புரோகிதக் கூட்டத்தாரின் ஆதிக்கத்திலிருந்து வந்தாலும், உலகத்திலுள்ள அரசாங்கங்களும், மதத்துடனும், கடவுளு டனும் பிணைக்கப்பட்டே
இருந்தாலும் கடவுளை மறுக்கும் அபிப்பிராயத்திற்கோ,
கூட்டத்திற்கோ, நாட்டில் ஆதரவு இல்லாமல் போனதோடு
அவர்கள் மீது தோஷம் கற்பிக்கப்
பட்டு, அந்த அபிப்பிராயம் வலுக்க
முடியாமலும், பரவ முடியாமலும் போய்விட்டது.
ஆனால், இந்த நூற்றாண்டில் கடவுள்
மறுப்பு என்பது பாமர மக்களுக்குள்
ஒருவித வெறுப்பும் அதிருப்தியும் தரக்கூடியதாயிருந்தாலும் மற்றும் கடவுள் பேரால்
அல்லது கடவுள் சம்பந்தமான மோட்சம்,
சாஸ்திரம், கதை, புராணம், பிரச்சாரம்
ஆகியவைகளின் பேரால் வாழ்வை ஏற்படுத்திக்
கொண்டவர்களுக்கு மிகுதியும் ஆத்திரத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும் நடுநிலையிலுள்ள அறிஞர் களால் இவ்விஷயம்
ஆராய்ச்சி செய்யத் தொடங்கி, ஆலோசிக்கப்பட்டு
வருவதும், அவ்வித அபிப்பிராயக்காரர் களைப்
பெரிதும் அறிவாளிகள் என்றும் ஞானவான்கள் என்றும்
சொல்வதும் மதிப்பதுமாய் இருந்து வருகின்றன.
மேல் நாட்டு அறிவாளிகள்
என்று சொல்லப்படுகிறவர்களுக்குள் இன்றும் அநேகர்கள் நாஸ்திகர்களாகத்தான்
இருந்து வரு கிறார்கள். அது
மாத்திரமல்லாமல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ருஷியா, சைனா முதலாகிய
இடங்களின் முக்கியப் பட்டணங்களில் கடவுள்களை நிலைப்படுத்தும் மதங்களை எதிர்க்கவும், நாத்திகத்தைப்
பரப்பவும் என்றே பல, ஸ்தாபனங்கள்
ஏற்படுத்தப்பட்டு, அவற்றுக்காகப் பத்திரிகைகள், துண்டுப் பிரசுரங்கள் முதலியவைகள் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக,
அமெரிக்காவில் நியூயார்க் என்கின்ற பட்டணத்தில், “நாத்திகத்தை உலகமெங்கும் வியாபிக்கச்
செய்வதற்கான சங்கம்” என்னும் பெயரால்
ஒரு ஸ்தாபனத்தை ஏற்பாடு செய்து, அதன்
மூலமாக மூன்று, நான்கு வருடங்களாக
நல்ல வேலைகள் மும்முரமாய்ச் செய்யப்பட்டு
வருகின்றன, அங்கிருந்து நமக்கு அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையின்படி அச்சங்கமானது
பிரச்சாரத்திற்காகவும் துண்டுப் பிரசுர வினியோகத்திற்காகவும் வருடம் ஒன்றுக்கு
அய்ம்பது ஆயிரம் ரூபாய்க்கு மேலாகவே
செலவுசெய்து வந்திருக்கிறது, இப்போது இந்த வருடத்தில்,
“கிறிஸ்துவ மதம் வெடிப்புக் கண்டுவிட்டது”
என்கிற பேராலும், “மதம் என்றால் என்ன?
“கடவுள் இல்லாத முற்போக்கு” ஆகிய
இவைபோன்ற தலைப்புகளால் பல இலட்சக்கணக்கான துண்டுப்
பிரசுரங்களை அச்சிட்டு வெளியாக்கப் பட்டிருப்பதாகக் காணப்படுகிறது,
சங்க அங்கத்தினர்கள் வருடத்திற்கு வருடம் 100-க்கு 50 வீதம் உயர்ந்து
கொண்டு வருவதுடன், பல இடங்களில் கிளை
ஸ்தாபனங்கள் ஏற்பட்டு, வெளிநாடுகளிலும கூட பிரச்சாரங்கள் செய்யப்பட்டு
வருவதாய்க் காணப்படுகிறது, வேறு மொழிகள் மூலமும்,
சைனா முதலிய இடங்களுக்கு ஆள்களை
அனுப்பி இதுபோன்ற பிரச்சாரமும் துண்டுப் பிரசுரங்களும் நடைபெற்று வந்திருப்பதாகவும் காணப்படுவதோடு, ஒவ்வொரு வேலையை ஏற்றுக்கொண்டு
திருப்தி தரத்தக்க அளவு பிரச்சாரம் செய்திருப்பதாயும்
காணப்படுகிறது. இதன் தலைமைக் காரியஸ்தலம்
அமெரிக்க நியூயார்க் பட்டணத்தில் 14-ஆவது வீதி, 307-ஈ,
எண் கட்டடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இதில் சேர விரும்பும்
அங்கத்தினர்க்கு வருடச் சந்தா ஒரு
டாலர் அல்லது மூன்று ரூபாயாகும்
என்பதாகவும் காணப்படுகிறது. இப்படியே லண்டன் பட்டணத்தில் சில
ஸ்தாபனங்கள் அதாவது, “தாராள எண்ணக்காரர்கள் சங்கம்”
என்றும் “உண்மை நாடுவோர் சங்கம்”
என்றும் பல சங்கங்கள் ஏற்படுத்தி,
அது போலவே பிரச்சாரமும் செய்யப்பட்டு
வருகின்றன. இச்சங்கங்களில் சிலதுக்கு வயது 40, 50-க்கு மேல் ஆகியிருந்தபோதிலும
அவைகள் இப்போதுதான் மிக்க பிரபலமாயும், செல்வாக்கு
உள்ளதாயும் நடைபெற்று வருகின்றதாக அறிவிக்கப்படுகின்றன. ”
இவற்றில்
கலந்துள்ள நபர்களில் உலகத்திலேயே மிக்க அறிவாளிகள், ராஜதந்திரிகள்
என்று சொல்லப்படும் பெரியார்களே அதிகமிருக்கிறார்கள். ஆகவே, நாத்திகப் பிரச்சாரம்
உலகில் சகஜமாகவும், செல்வாக்காகவும் நடைபெறுகின்றன என்பதைத் தெரிவிக்கவே இவற்றை மேற்கோளாகக் குறிப்பிட்டோம்.
இனி, அதனால் ஏற்படும் கெடுதி
என்ன? நன்மை என்ன? என்பவைகளைப்
பற்றி யோசிப்போம். சாதாரணமாக மனிதன் நாஸ்திகனாயிருந்தால், அதாவது கடவுள்
நம்பிக்கை இல்லாதவனாய் இருந்தால், ஒரு கட்டுப்பாட்டிற்கும் அடங்கி
நடக்கமாட்டான் என்றும், திருட்டு, பொய், மோசம், ஒருவன்
சொத்தை ஒருவன் அபகரித்தல், முறை
தவறி நடத்தல், மக்களை இம்சித்தல் முதலாகிய
காரியங்களைச் செய்ய மாட்டான் என்றும்
சொல்லப்படுகிறது. இதைப்பற்றிக் கவனிக்கும் முன்பு உண்மையான கருத்தில்
இந்தக் கடவுள் நம்பிக்கை உள்ள
மனிதன் எவனாவது உலகில் இருக்கின்றானா
என்பதை முதலில் யோசிப்போம்.
சாதாரணமாக,
கடவுள் என்கின்ற பதத்திற்கு மக்களில் பெரும்பான்மையோர்கள் கருதிக்கொண்டிருக்கும் கருத்து என்னவெனில், சர்வ
சக்தியும் அதாவது, உலகம், உலகத்தலுள்ள
ஜீவராசிகள், புல், பூண்டு, தாவரங்கள்
முதலியவும் தனது இச்சையால் உண்டாக்கப்பட்டு
தனது சக்தியால் இயங்கச் செய்யப்படுகின்றதானதும், எங்கும் வியாபித்திருப்ப
துடையதானதும், சர்வ ஜீவராசிகளையும் ரட்சிக்கும்
தன்மை யுடையதானதும், எல்லாவற்றையும் சமமாய்ப் பார்ப்பதானதும், சுருக்கமாய்ச் சொல்வதானால் அவனன்றி (அக்கடவுளின் சித்தம் அன்றியில்) ஒரு
அணுவும் அசையாததான சக்தி என்ற கருதிக்
கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு வஸ்து
இருக்கின்றதா? இல்லையா? என்று முடிவு செய்வதற்கு
முன்னும், இப்படி மக்கள் எண்ணிக்
கொண்டிருப்பதானது, உலகத்திற்கு நன்மையா? தீமையா? என்று முடிவு
செய்வதற்கு முன்னும், இந்தப்படி உலகத்தில் எந்த மனிதனாவது உண்மையில்
நம்பி இருக்கின்றானா அந்தப்படி நம்பி இருப்பதற்குத் தகுந்தபடி
அவனது மனம், மெய், மொழி
ஆகியவைகளால் ஏற்படும் நடவடிக்கைகள் காணப்படு கின்றனவா?
அதாவது,
எந்த மனிதனுடைய நடவடிக்கையில் இருந்தாவது, மேற்கண்ட சக்தியும், குணமும் கொண்ட ஒரு
வஸ்துவை நம்பி நடக்கின்ற மனிதனின்
நடவடிக்கைகள் இவை என்று கருதும்படியாக
இருக்கின்றனவா என்பதை யோசிப் போமானால்,
இதுவரை ஒரு மனிதனையாவது அம்மாதிரி
நம்பிக்கையின் மீது நடக்கின்றான் என்பதைக்
கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அந்தப்படி ஒரு கடவுள் இருப்பதாக
ஒரு மனிதன் கூட தனது
வாழ்க்கையில் எண்ணியிருக்க முடிவ தில்லை என்றுதான்
சொல்ல வேண்டியிருக்கிறதே தவிர, வேறில்லை என்று
உறுதியாகச் சொல்லலாம்.
இது அதாவது, இப்படிச் சொல்வதானது
சாதாரண மக்களிடையே மாத்திரமல்லாமல் கடவுள் பிரச்சாரம் செய்பவர்களிலாவது,
கடவுளைக் கண்டவர்களாகச் சொல்லப் பட்டவர்களிலாவது, கடவுளுக்குச்
சமமாகக் கருதும் சமயாச் சாரிகள்,
மதத்தைக் காப்பாற்றும் ஸ்தாபனத் தலைவர்கள் முதலாகியவர்களுக்குள்ளாவது, நாஸ்திகத்தைக் கண்டு பயந்து நடுநடுங்கித்
துயரப்பட்டுக் கண்ணீர்வடிக்கும் ஆஸ்திகப் பண்டிதர்கள், சாஸ்திரிகள், வைதிகர்கள் முதலாகியவர்களுக் குள்ளாவது, மற்றும் மகாத்மாக்கள், வேதாந்திகள்,
பெரி யோர்கள் முதலியவர்களுக்குள்ளாவது, இதுவரை ஒருவராவது
இருந்ததாகவோ, இருப்பதாகவோ சொல்வதற்கில்லையே!
ஒவ்வொரு
மனிதனும் தன்னை ஒரு தனி
மனிதனென்றும், தனக்காகத் தான் செய்ய வேண்டிய
காரியம் பல உண்டு என்றும்,
அவற்றைத் தினமும் செய்வதாகவும், அவனவன்
இஷ்டப் பட்டபடி செய்யும்படித் தூண்டிக்
கொண்டும், மற்றவர்கள் செய்வதில் குணதோஷம் கற்பித்துச் சொல்லிக் கொண்டும், மகிழ்ச்சி-துக்கமடைந்து கொண்டும்தான் இருக்கிறானே ஒழிய, கடவுளின் சர்வ
சக்தியைப் பற்றியோ சர்வ வியாபகத்தைப்
பற்றியோ, சர்வ சமத்துவத்தைப் பற்றியோ
நம்பியிருப்பவன் ஒருவனும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஆகவே, இதிலிருந்து அப்படிப்பட்ட ஒரு வஸ்து இல்லை
என்றும், இருப்பதாகவும் யாரும் நம்பி இருக்கவில்லை
என்றும்தான் முடிவுகட்ட வேண்டியிருக்கிறதென்பது ஒரு பக்கமிருந்தாலும், அப்படி
ஒன்று இருப்பதாகக் கற்பித்து நம்பச் செய்தவனாகிலும் காரியத்தில்
ஏதாவது, அதாவது கடவுள் நம்பிக்கையினால்
ஏற்படக் கூடுமென்று கருதுகிற, முன்சொன்ன காரியங்களாவது நடக்கின்றதா என்று பார்த்தால் திருடாதவன்,
பொய் சொல்லாதவன், பிறர் பொருளை வஞ்சிக்காதவன்
முறைதவறிக் கலவி செய்யாதவன், பிறருக்கு
இம்சை கொடுக்காதவன் முதலான காரியங்கள் செய்யாதவன்
என்பவன்ஒருவனைக்கூட காணமுடிவதில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
அன்றியும்
திருட்டு, வஞ்சகம், பொய், முறைதவறிக் கலத்தல்
முதலாகிய காரியங்கள் எவை என்று தீர்மானிப்பதே
கஷ்டமான காரியமாயிருக்கின்றது என்றாலும் மக்கள் எதை மேற்கண்ட
மாதிரி குணங்கள் என்று கருது கிறார்களோ
அதைச் செய்யாமல் இருக்க இந்த எண்ணத்தையும்
நம்பிக்கையையும் உண்டாக்குவதாலோ, நிலைநிறுத்துவதாலோ முடிகின்றதா என்பதுதான் இங்கு யோசிக்கத்தக்கதாகும்.
இது ஒருபுறமிருக்க, மேற்கண்ட அதாவது, கடவுள் என்பதற்குக்
கற்பிக்கப்பட்ட குணங்கள் உடையதான ஒரு கடவுள்
என்பது இல்லை என்றும், அல்லது
இருக்க முடியாது என்றும் கருதுகின்றவர்களிடத்திலாவது, அந்தப்படி கருதிக் கொண்டிருக்கன்றார்கள் என்று பிறரால்
கருதப்படுகின்றவர் களிடத்திலாவது, முன் சொல்லப்பட்ட திருட்டு,
பொய், வஞ்சகம் பிறரை இம்சிப்பது
முதலிய குணங்கள் கடவுள் நம்பிக்கைக் காரர்களைவிட
(ஆஸ்திகர்களைவிட) அதிகமாய் இருப்பதாகவாவது, அல்லது பிற மக்களுக்கு
ஆஸ்திகர்களைப் போன்ற நன்மை செய்யவில்லை
என்றாவது சொல்லமுடியுமா என்று பார்த்தால் அதுவும்
முடியாத காரியமாய்த்தான் காணப்படுகின்றதே ஒழிய வேறில்லை.
மக்களில்
பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள்
என்னும் விஷயத்தில் மேற் கண்ட விதமான
காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை
விட்டுவிட்டு தனக்கே புரியாதபடி ஒன்றை
நினைத்துக்கொண்டு, “கடவுள் உண்டா இல்லையா”
என்று கேட்பதும்,
“கடவுளை ஒப்புக்கொள்கின்றாயா? இல்லையா?” என்று
கேட்பதும்,
“கடவுள்
இல்லாமலிருந்தால் மக்களில் ஒருவருக்கொருவர் ஏன் வித்தியாசமாயிருக்க வேண்டும்?”
“ஒருவர்
பணக்காரராகவும், ஒருவர் ஏழையாகவும் ஏன்
இருக்க வேண்டும்?”
“ஒருவர்
கூன், குருடு, நொண்டி, குஷ்டரோகி
முதலியவ ராயும், ஒருவர் நல்ல
திடசரீரியாகவும் ஏன் இருக்க வேண்டும்?”
“ஒருவனுக்கு
ஏன் பத்துப் பிள்ளைகளும் ஒருவனுக்கு
ஏன் நாலு பிள்ளைகளும், ஒருவனுக்கு
ஏன் பிள்ளை இல்லை?” என்றும்,
“இருவர் ஒரே காலத்தில் தனித்
தனியாக லாபமும் ஏன் அடையவேண்டும்?”
என்பது போன்ற கேள்விகளும் கேட்டு
அதன்மூலம் மேற்கண்ட குணங்கள் கொண்ட கடவுள் என்பதாக
ஒன்று உண்டு என்று மெய்ப்பிக்க
முயற்சி செய்கிறார்கள். இம்மாதிரி கேள்விக்காரர்களைப் பகுத்தறிவு இல்லாதவர்கள், ஆராய்ச்சி சக்தி இல்லாதவர்கள் என்று
தான் சொல்ல வேண்டுமே தவிர,
வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
இப்படிப்பட்ட
கேள்வி கேட்பவர்களை ஒரே ஒரு பதிலில்
வாயடைக்க வேண்டுமானால், இம்மாதிரியாகத் தோற்றங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாசங்கள் காணப்படுவதாலேயே (மேற்கண்ட குணமுடைய) கடவுள் என்பதாக ஒன்று
இல்லையென்று சொல்லிவிடலாம்.
எப்படியெனில்,
சர்வசக்தியுடைய கடவுள் இருந்து சர்வத்திலும்
புகுந்து சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவ
ராயிருந்தால் சர்வத்தையும் ஒன்றுபோலவே சிருஷ்டித்திருக்க லாமல்லவா? வேறு வேறாகக் காணப்படுவதாலேயே
சர்வசக்தி யும், சர்வ வியாபகமும்,
சமத்துவமும் கொண்ட கடவுள் என்ப
தாக ஒன்று இல்லை என்பதுதான்
பதிலாகும்.
ஏனெனில்,
நொண்டிக்கும், முடவனுக்கும், நல்லவனுக்கும், கஷ்டப்படுபவனுக்கும் கஷ்டப்படுத்துகிறவனுக்கும், “கடவுளே” காரணஸ்தனாயிருந்தால் கடவுளை
சர்வ தயாபரத்துவ முடையவனென்றும், பாரபட்சமற்ற சர்வ சமத்துவ குணமுடைய
வனென்றும், எப்படிச் சொல்லமுடியும்? இந்தப்படி பகுத் தறிவைக் கொண்டு
சொல்லக்கூடிய சமாதானங்கள் ஒருபுறமிக்க ஆராய்ச்சியைக் கொண்டு அறியக்கூடிய சமாதானங்களைப்
பற்றிச் சற்றுக் கவனிப்போம்.
ஒரே கையால் கைநிறைய
அரிசியை அள்ளி அள்ளி வேறாய்
வைத்து ஒவ்வொரு தடவை அள்ளிய
அரிசியைத் தனித் தனியாய் எண்ணிப்
பார்த்தால் அவற்றுள் ஒன்றுக்கொன்று எண்ணிக்கையில் வித்தியாச மிருப்பானேன்? அதே மனிதன், அதே
கையால், அதே நிமிஷத்தில், அதே
குவியலிலிருந்து அள்ளினவைகள் ஏன் வித்தியாசப்படுகின்றன? ஒரே பூமியில்,
ஒரே வினாடியில் விதைக்கும் ஒரே மாதிரி விதைகள் சில முளைத்தும்,
சில முளைக்காமலும், முளைத் தனவைகளில் சில
வளராமல் கூழையாகவும், சில அதிக உயர
மாகவும், சில குறைவான மணிகள்
கொண்ட (தானியங்கள்) கதிர்களாகவும், சில முளைத்து நன்றாய்த்
தழைத்தும் ஒரு மணிகூட இல்லாத
வெறும் கதிராகவும் இருக்கக் காரணம் என்ன? ஒரு
விநாடியில், ஒரு பூமியில் நட்ட
செடிகள் ஒன்று பல கிளைகளுடனும்,
ஒன்று சொற்ப கிளைகளுடனும் வளருவதும்,
ஒன்று பதினாயிரக்கணக்காகக் காய்ப்பதும் ஒன்று நூற்றுக் கணக்காகக்
காய்ப்பதும் என்ன காரணம்? கடவுள்
ஒருவர் இருந் தால் இவைகள்
எல்லாம் அதனதன் இனத்தில் ஏன்
ஒன்றுபோல் இருக்கக்கூடாது?
ஒரு சமயம் கடவுளே இந்தப்படி
செய்திருப்பார் என்று சொல்வதானால், அம்மரம்,
செடி, தானியம் முதலியவைகள் இப்படி
பலன் அடைவதற்குக் காரணம் என்ன? என்பது
போன்ற கேள்விகளுக்கு என்ன சமாதானமோ, அதுதான்
மனிதர்களைப் பற்றிய சம்பந்தமான கேள்விகளுக்கும்
சமாதானம் என்பது தானாகவே புலப்படும்.
(‘குடிஅரசு’ 1930 செப். 28-ஆம் தேதி மலரில்
பிரசுரமானது)
நூல் : அறிவு விருந்து
ஆசிரியர் : - தந்தை
பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக