வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கோவணாண்டி


பழனி கோயிலுக்கு விரைவில் தங்க ரதம் செய்யும் பணி துவங்கப்படுகிறதாம்; ஏற்கெனவே உள்ள பழைய தங்க ரதம் 63 ஆண்டுகளாக ஓடவில்லையாம். எட்டு கோடி ரூபாய் செலவில் தங்கத்தாலான பிரார்த்தனைத் தொட்டில் செய்யப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோயிலுக்குத் தங்க விமான கோபுரம் - 25 கோடி ரூபாய் செலவில் 100 கிலோ தங்கம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது - அதற்கு குடமுழுக்கும் நடைபெற்றுள்ளது.

ஒருமுறை, மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்தான் கேட்டார். அவன்தான் (முருகன்) கோவணாண்டி யாயிற்றே - ஒன்றும் வேண்டாம் என்று சென்றவனாயிற்றே - அவனுக்கு எதற்குத் தங்கத் தேர்? என்று அர்த்தமுள்ள வினாவைக் கேட்டார். அடிகளார் ஒன்றும் நாத்திகர் அல்லர்; ஆத்திக மெய்யன்பர்தான்; மடாதிபதிதான். அவருக்குத் தோன்றிய அந்த நல்லறிவு மற்றவர்களுக்கு இல்லாமற் போனது ஏன்?

இந்தப் பழனி கோயில், தமிழர்களின் ஆதிக்கத்தில் தான் இருந்தது. போகர் என்னும் சித்தரால் நவபாஷாண மூலிகைகளால் உருவாக்கப்பட்டதுதான் பழனியாண்டவன். போகரின் சீடர் புலிப்பாணியாரும் அவருக்குப் பிறகு அவர் வழி வந்த சீடர்களும்தான் பூசை செய்து வந்தனர்.

திருமலை நாயக்கர் என்பான் ஆட்சி வந்தாலும் வந்தது (1623-1659) பார்ப்பனர் ஆதிக்கக்கொடி நிர்வாணமாகப் பறந்தது. திருமலையின் போர்த் தளபதியாக (தளவாய்) ஒரு பார்ப்பான், பெயர் ராமப்பய்யன். பழனி கோயிலுக்குச் சென்றான்; அங்கு பூசை செய்பவர்களோ சூத்திரர்கள். அவர்கள் கைகளால் பிராமணனாகிய நான் எப்படிப் பிரசாதம் பெற்றுக் கொள்வது? என்ற அந்தக் கேள்வி ஆணையாகப் பிறந்தது. விளைவு - கொடுமுடி சரஸ்வதி அய்யன், மருதூர் தம்பாவய்யன், நாட்டார் அய்யன் கோயில் சுப்பய்யன், கரூர் முத்தய்யன், கடம்பர் கோயில் அகிலாண்டய்யன் ஆகிய பார்ப்பனப் பாம்புகள், சூத்திரன் கட்டி வைத்த புற்றில் புகுந்தன. இன்று வரை அதே நிலைதான் தொடர்கிறது.

இராமன் பிறந்த இடத்தில் பாபர் மசூதி வந்து விட்டது என்று பாபர் மசூதியை இடித்த கூட்டம் இதற்கு என்ன பதில் கூறுமோ? கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த இந்த வரலாற்றுக்கு ஆதாரம் உண்டு. திருமலையரசனின் அமைச்சன் ராமப்பய்யனின் பழனி கோயில் செப்பேடு இன்றளவும் உள்ளது. அதுபோலவே ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை பி.ஏ., பி.எல்., எழுதி, பழனி கோயில் தேவஸ்தானம் 1944இல் பதிப்பித்த நூலிலும் காணப்படுகிறது.

தந்தை பெரியார் அவர்களின் செயலாளர் - மறைந்த புலவர் மானமிகு கோ. இமயவரம்பன் அவர்களால் எழுதப்பட்ட பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் - மன்னர்கள் வீழ்ச்சியும் எனும் நூலில் இதுபோன்ற அரிய தகவல்கள் ஏராளம் உண்டு.

கோயில்களில் தங்கமும், ஆபரணங்களும் பிற்காலத்தில் அரசர்களால் அளிக்கப்பட்டு, பார்ப்பனச் சுரண்டலுக்கு வழி வகுக்கப்பட்டது.

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் மட்டுமே வருமானம் உடைய மக்கள் 70 விழுக்காடு உள்ள நாட்டில் குழவிக் கல்லுக்குத் தங்கத் தேரும், தங்கத் தொட்டிலும் கேட்குதோ!

8.2.2011
நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக